1. 1895 ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற ஒரு நாடகத்தில் விளம்பரம் செய்யப்பட்ட ஒரு துண்டு நோட்டீசில் `` பஞ்சமர்கட்கு இடம் இல்லை'' என்று அச்சிட்டார்கள்.
சென்னையிலே இந்த நிலை 115 ஆண்டுகட்கு முன்பு!
இந்த நிலையை மாற்றியது தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் என்பது உங்களுக்குத் தெரியுமா ?
2. 1925க்கு முன்பு தமிழ்நாட்டிற்குக் காந்தியார் வந்தபோதெல்லாம் மைலாப்பூரில் சீனுவாசஅய்யங்கார் வீட்டுத் திண்ணையில்தான் உட்கார்ந்திருப்பார் -உள்ளே போகாமல்.
1926 க்குப்பின் தான் அவர் வீட்டுக்கு உள்ளே சென்றார். (காரணம் சுயமரியாதை இயக்கத்தினை பெரியார் ஆரம்பித்து பிரச்சாரம் செய்தார் 1925 முதல்) ``மகாத்மா '' காந்திக்கே இந்தக் கதி என்பது உங்களுக்குத் தெரியுமா?
3. பகத்சிங் தூக்கிலிடப்பட்டபோது ஆங்கிலேய அடக்கு முறைக்கு அஞ்சி, `` தேச பக்தர்கள்''வாய்மூடிக் கிடந்தபோது-பகத்சிங் செயலை பகிரங்கமாக ஆதரித்து 1931 இல் கட்டுரை தீட்டிய தலைவர் பெரியார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
4. 1933 -இல் அன்னை நாகம்மையார் மறைந்த-அடுத்த நாளே தடையை மீறி, ஒரு கிறிஸ்துவ கலப்புத் திருமணத்தை நடத்தி வைத்து தந்தைபெரியார் ஒரு மாதகாலம் சிறை புகுந்தார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
5. 1933 அக்டோபரில் ``குடிஅரசில்'' தந்தைபெரியாரால் எழுதப்பட்ட ``இன்றைய ஆட்சிமுறை ஏன் ஒழிய வேண்டும்?'' என்ற கட்டுரையில் தீவிர பொதுவுடைமை வாடை வீசுகிறது என்று சொல்லப் பட்டு இ.பி.கோ. 124 ஏ பிரிவின்படி ராஜதுவேஷம் குற்றம் சுமத்தப் பட்டு, கட்டுரை ஆசிரியர் தந்தைபெரியார் அவர்களும், வெளியீட்டாளர் எஸ். ஆர். கண்ணம்மாள் அவர்களும் (பெரியாரின் தங்கை) பிரிட்டிஷ் அரசாங்கத்தாரால் தண்டிக்கப்பட்டார்கள் என்ற செய்தி உங்களுக்குத் தெரியுமா?
6. 1938-இல் சென்னையில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி அய்யாவுக்கு அளிக்கப்பட்ட பட்டம் தான் பெரியார்'' என்பது உங்களுக்குத் தெரியுமா?
7. 1960 வாக்கில் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட `` சோதனைக் குழாய் குழந்தை'' பற்றி 1938-லேயே கருத்துத் தெரிவித்தவர் தந்தை பெரியார் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா?
8. 1942 ஆம் ஆண்டு கவர்னரும், வைஸ்ராயும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க வருமாறு இரண்டாவது முறையாக வேண்டியதும், அதை தந்தைபெரியார் ஏற்க மறுத்து, பதவியை துச்சமென உதறித் தள்ளினார் என்ற வரலாறும் உங்களுக்குத் தெரியுமா?
9. 1942-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வந்திருந்த திருவாங்கூர் மகாராணி சமஸ்கிருத வளர்ச்சிக்கு ரூ 1 இலட்சம் நன்கொடை தந்தபோது-தந்தை பெரியார் அதை எதிர்த்து போராடி அந்தப் பணத்தை மாணவர் விடுதி வளர்ச்சிக்குச் செலவிட ஏற்பாடு செய்தார் என்ற வரலாறு உங்களுக்கு தெரியுமா?
No comments:
Post a Comment