Saturday 14 January 2012

பொங்கல் விழா


 ‘பொங்கல்’ என்பது தமிழனுக்கு, பார்ப்பனரல்லாதாருக்கு உள்ள ஒரு பண்டிகை. இந்தப் பண்டிகையின் பொருள் என்னவென்றால், விவசாயிகள் தாங்கள் செய்த விவசாயத்தில் உற்பத்தியான பொருளை, அவ்வாண்டு முதல் தடவையாகச் சமைப்பது மூலம் பயன்படுத்திக் கொள்ளும் நிகழ்ச்சி என்பதாகும். இது தமிழனுக்கே உரியதாகும்.

நமது மற்ற பண்டிகைகள் என்பவை எல்லாம் ஆரிய மத சம்பந்தமான கதைகளை அடிப் படையாகக் கொண்டு, பார்ப்பனரால் கற்பனை செய்தவைகளேயாகும். இது விவசாயிகளுக்கு உரிய பண்டிகை ஆனதினால் தான், முதல் நாள் தானியம் சமைக்கும் பண்டிகையும், அடுத்த நாள் விவசாயிகளுக்கு முக்கியமான இன்றியமையாததான கால்நடை ஜீவன்களைப் பாராட்டும் மாட்டுப் பொங்கல் என்கின்ற நிகழ்ச்சியையும் ஒரு பண்டிகையாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதனால்தான் இந்த நிகழ்ச்சிகளுக்குப் பொங்கல் பண்டிகை, மாட்டுப் பொங்கல் பண்டிகை என்று பெயர் வழங்கப்பட்டு வருகிறது.

இதைப் பார்ப்பனர்கள், தங்கள் ஜாதி நலத்துக்கு ஏற்ற வண்ணம் திருத்தி கற்பனை செய்து இதை ‘சங்கராந்திப் பண்டிகை’ என்று ஆக்கி இதில் பல மூடநம்பிக்கைகளைப் புகுத்திவிட்டார்கள்.

இந்தப் பொங்கல் நாளைக் கெட்ட நாளாக ஆக்க, அந்த நாளில் ‘துஷ்ட தேவதை’யின் மூதேவி மக்களைப் பற்றுவதாகவும், அதற்குப் பரிகாரம் செய்வதுதான் பொங்கல் முதலிய காரியங்கள் என்றும், அன்று மூதேவி நமது வீட்டிற்குள் புகாமல் இருப்பதற்கு நமது வீட்டுக் கூரைகளில் ஆவாரம்பூ, பூளைப்பூ, வேப்பிலை ஆகிய மூன்றையும் சொருகி வைத்தால், மூதேவி வராது, உள்ளே நுழையாது என்றும் மற்றும் பல முட்டாள்தனமான கருத்துக்களைக் கற்பனை செய்து மக்களை அறிவிலிகளாக ஆக்கிவிட்டார்கள்.

மற்றும் இப்பண்டிகைக்குப் போகிப் பண்டிகை என்று சொல்லப்படுகின்றது. இந்த ‘போகி’ என்னும் சொல்லுக்குப் போகப் போக்கியங்களை அனுபவித்தல் என்பது பொருள் இதற்கும் விளைந்த பண்டங்களை அனுபவித்தல் என்பதுதான் தத்துவம். இந்தக் கருத்துக் கொண்டே போகிப் பண்டிகை என்பதையும் பார்ப்பனர் தங்கள் ஜாதி நலனுக்கு ஏற்பக் கற்பனைக் கதைகளை உண்டாக்கி இந்திரனுக்கும், கிருஷ்ணனுக்கும் ஏற்பட்ட பொறாமை விரோத சம்பவம் ஒன்று செய்து, அதற்குப் பரிகாரமாகக் கொண்டாடுவது என்றும் ஆக்கி விட்டார்கள்.

இவையெல்லாம் மகா மகாப் புரட்டுகளாகும். எப்படியெனில், கிருஷ்ணனையும், இந்திரனையும் இவர்கள் யார், எப்போது இருந்தார்கள், இவர்களுக்கு ஏன் சண்டை வந்தது, இவர்கள் எவ்வளவு அற்பர்கள் என்றெல்லாம் பகுத்தறிவுப் பார்வையில் பார்த்தால், இதன் புரட்டு வெளியாகும், எனவே, பொங்கல் என்பது தமிழர்க்கே உரியதல்லாமல், பார்ப்பனர்க்கு இதில் ஏதும் சம்பந்தமில்லை.

இந்தப் பொங்கல் பண்டிகை என்பதற்குச் சரியான பொருள் அறுவடைப் பண்டிகை என்பதாகும். இவற்றில் கன்னிப் பொங்கல் என்ற ஒரு நிகழ்ச்சியும் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது, யாவரும் அறிந்ததே. இந்தக் கன்னிப் பொங்கல் என்பது, சிறு பெண் அதாவது பூப்படையாத, கல்யாணமில்லாத, கலவி அறியாத பெண் என்பவர்கள் சமையல் செய்து பழகுவதற்கு ஆக அவர்களையே கொண்டு சமையல் செய்யப்படுவதாகும். இதில் பெரிய பெண்கள், அந்தச் சிறு பெண்களுக்கு சமையல் முறையை சொல்லிக் கொடுப்பார்கள்.

ஆகவே இந்த நிகழ்ச்சிகளுக் குத்தான் பொங்கல், மாட்டுப் பொங்கல், கன்னிப் பொங்கல் விழா என்பதாகும். இது முழுக்க முழுக்க தமிழர்களுக்கே உரிய தமிழ(பார்ப்பன ரல்லாதார் பண்டிகையாகும். எப்படியெனில், பார்ப்பான் கலப்பையைத் தொட்டால் பாவம் என்பது அவனது தர்மம். நமது பார்ப்பனர்களுக்கு எந்தக் காரியம் எப்படியிருந்தாலும், யார் எக்கேடு கெட்டாலும், தாங்கள் மனித சமுதாயத்தில் உயர்ந்த பிறவி மக்களாகவும், உடலுழைப்பு இல்லாமல் வாழும் சுக ஜீவிகளாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக மனித சமுதாயம் முழுவதுமே அறிவைப் பயன்படுத்தாத ஆராய்சியைப் பற்றியே சிந்திக்காத முட்டாள்களாகவும், காட்டுமிராண்டிகளாகவும் இருக்கச் செய்யவேண்டும் என்பதே அவர்களுடைய பிறவி புத்தியானதால் அதற்கேற்ப உலக நட்பைத் திருப்பிப் பாதுகாத்து வைக்கிறார்கள்.

பார்ப்பனர்களின் இம்மாதிரியான அட்டூழிய அக்கிரம காரியங்களில் இருந்து விடுபட்டு, மனிதர்களாக நாம் வாழ வேண்டுமானால், பொங்கல் பண்டிகை என்பதை முதல் நாள் அன்று மட்டும் நல்ல உயர்வான உணவு அருந்துவதையும், மனைவி மக்கள் முதியவர்களுடன் இன்பமாகக் காலம் கழிப்பதையும் கொண்டு நம்மால் கூடிய அளவு மற்றவர்களுக்கு உதவி, அவர்களுடன் குலாவுவதான காரியங்களையும் செய்வதன் மூலம் விழாக் கொண்டாடுவது அவசியமாகும்.

மற்றபடியாக, மதச் சார்பாக உண்டாக்கப்பட்டிருக்கும் பண்டிகைகள் அனைத்தும், பெரிதும் நம் இழிவிற்கும், பார்ப்பனர் உயர்விற்கும், நம் மடமைக்கும், காட்டுமிராண்டித் தன்மைக்கும் பயன்படத்தக்கதாகவே இருந்து வருவதால், பயனளித்து வருவதால், அறிவுள்ள, மானமுள்ள மக்கள் மத சம்பந்தமான எந்தப் பண்டிகையையும் கொண்டாடாமலிருந்து தங்களை மானமும், அறிவுமுள்ள மக்களாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

மானமும் அறிவுமே மனிதர்க் கழகு!
(‘விடுதலை’ - 14-1-1972)

Friday 13 January 2012

தமிழர் புத்தாண்டு தை முதல் நாளே! தமிழர் இல்லந்தோறும் விழா எடுப்போம்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா-இந்துத்துவ உணர்வோடு தமிழ்ப் புத்தாண்டை சித்திரைக்கு மாற்றினாலும் தமிழர் புத்தாண்டு தை முதல் நாளே என்பதை ஆணித்தரமாக விளக்கும் கட்டுரை இது. கட்டுரை ஆசிரியர் ‘சோதிடப் புரட்டு’ நூலை எழுதிய கனடா வாழ் சிந்தனையாளர் நக்கீரன்.

 
பஞ்சாங்கத்தில் உள்ள 60 ஆண்டுகளில் ஒன்றேனும் தமிழில் இல்லை. தமிழன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் தன்மானம் உள்ள ஒருவனாவது அவற்றைத் தமிழ் ஆண்டு என்று ஒப்புக் கொள்ள மாட்டான். இந்த அறுபது ஆண்டுகளை கடவுளர்களோடு தொடர்புபடுத்தி, ஆபாசம் வழியும் கதைகளையும் புராணிகர்கள் உருவாக்கி விட்டார்கள். நாரதரும் கிருஷ்ணனும் உறவு கொண்டு பெற்ற குழந்தைகளே ‘பிரபவ முதல் அட்சய முடிய 60 ஆண்டுகள்’ என்று தமிழ்க் கலை களஞ்சியமான ‘அபிதான சிந்தாமணி’ கூறுகிறது. இதற்குப் புராண ஆதாரங்கள் வேறு உள்ளன. இந்த 60 ஆண்டுகளுக்கு மேல் 61 ஆவது ஆண்டைக் குறிக்கப் பெயர் இல்லை. மீண்டும் ‘பிரபவ’ ஆண்டிலிருந்து தான் தொடங்க வேண்டும் என்பது நடைமுறைக்கும் அறிவுக்கும் ஒவ்வாத மூடநம்பிக்கை ஆகும். இப்போது வழங்கும் ‘பிரபவ’ தொடங்கி, ‘அட்சய’ ஈறாக உள்ள 60 ஆண்டுப் பெயர்கள் சாலி வாகனன் என்பவனால் அல்லது கனிஷ்ஷனால் கி.பி. 78 இல் ஏற்பட்டவை. இவை வடநாட்டு அரசனால் ஏற்பட்டதனால் அவற்றின் பெயர்கள் வட மொழிப் பெயர்களாக உள்ளன. (பக்.7, இந்து 10-03-1940)

இந்த 60 ஆண்டு முறையால் தமிழர் மொழி, மரபு, மானம், பண்பு, வாழ்வு முதலியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழிவும் இழிவும் இரண்டையும் எண்ணிப் பார்த்து உணர்ந்து தெளிந்த தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூடி ஆராய்ந்து மூன்று முக்கிய முடிவுகளை எடுத்தார்கள்.

1. திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டைப் பின்பற்றுவது.
2. அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது.
3. திருவள்ளுவர் காலம் கி.மு. 31 (வழக்கில் உள்ள ஆங்கில ஆண்டுடன் 31யைக் கூட்டினால்) திருவள்ளுவர் ஆண்டு.
திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை, இறுதி மாதம் மார்கழி.

புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள், கிழமைகள் வழக்கில் உள்ளவை. இந்த முடிவை எடுத்தவர்களில் தமிழகத்தின் மூத்த தமிழ் அறிஞர்கள் மறைமலை அடிகள், திரு.வி.க., சுப்பிரமணிய பிள்ளை, சச்சிதானந்தப் பிள்ளை, ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோம. சுந்தர பாரதியார், கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

அதன் பின் 1937 டிசம்பர் 26 இல் திருச்சியில் ‘அகில இந்திய தமிழர் மாநாடு’ சோமசுந்தர பாரதியார் தலைமையில் கூடியது. அதில் தந்தை பெரியார், கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர் உமா மகேசுவரனார், பேராசிரியர் கா. சுப்பிரமணியம், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், திரு.வி.க. மறைமலை அடிகளார், பி.டி. இராசன், ஆற்காடு இராமசாமி முதலியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பட்டுக் கோட்டை அழகிரி உட்படப் பலரும் பங்கேற்றனர்.

அந்த மாநாடும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்றும், பொங்கல் திருநாளே தமிழர் திருநாள் என்றும் பறைசாற்றியது. தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் சான்றுகளுடன் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம், பொங்கலே தமிழர் விழா என்று அறுதியிட்டுப் பேசினார்.

இந்த முடிவுகள் எந்த அடிப்படையில் எடுக்கப் பட்டன என்ற கேள்விக்கு முத்தமிழ்க் காவலர் முனைவர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் மாநாட் டில் கலந்து கொண்டு பேசிய அறிஞர்களின் அறிவு, ஆராய்ச்சி, பட்டறிவு ஆகியவையே அடிப்படை என்று குறிப்பிடுங்கள் போதும்” என்று விளக்கம் தந்தார்.

தமிழ்ப் புத்தாண்டு குறித்து ஈழத்து அறிஞர் பண்டிதர் க.பொ. இரத்தினம் அவர்கள் ‘சித்திரை வருடப் பிறப்பு என்பது சாலிவாகனன் என்ற வடநாட்டு அரசனால் பின்னாளில் நிலைநாட்டப் பட்டது. இந்த அரசனுக்கு முன்னர் பல்லாயிரம் ஆண்டுகளாக நயத்தக்க நாகரிகத்துடன் வாழ்ந்த தமிழ் மக்கள் தம் நாட்டுப் பெருமகன் ஒருவனுடன் இணைந்த தொடர் ஆண்டை நிலைநாட்ட முயலாதது பெரும் விந்தையாக உள்ளது. (சித்திரை வருடப் பிறப்பை) வரவேற்று, (அதன் மூலம்) தமிழினத்தின் பழமையையும் பண்பையும் சிறப்பையும் செல்வாக்கையும் (இன்றைய தமிழர்கள்) சிதைத்து வந்துள்ளமை பெரும் வெட்கத்திற்கு இட மானதாகவும் இருக்கின்றது. தமிழ் மக்களிடையே நிகழ்ந்த மானக் கேடான நகைப்புக்கிடமான செயல் இது ஒன்று மட்டும்தானா? தமிழ் மக்களின் கோவில்களிலே இன்று தமிழ் மொழியும் தமிழ் இசையும் ஒதுக்கப்பட்டுள்ளன” என மிகக் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.

தமிழீழத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிழல் ஆட்சி இருந்தபோது – கலைஞர் கருணாநிதியின் அறிவிப்புக்கு முன்னரே – தமிழர்களின் புத்தாண்டு தைப் பொங்கல் நாளான தை முதல் நாளே என அறிவித்திருந்தது நினைவு கூரத்தக்கது. தைப் பொங்கல் திருநாள் வான் சார்ந்து, மண் சார்ந்து, முழுமையான இயற்கை சார்ந்து உருவாகிய திருநாளாகும்!

1969 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சி பொங்கல் திருநாளுக்கு அடுத்த நாளை திருவள்ளுவர் நாள் என்று ஏற்று அரசு விடுமுறை அளித்து ஆணை பிறப்பித்தது.

1971 இல் கலைஞர் கருணாநிதி ஆட்சி திருவள்ளு வர் ஆண்டு முறையை ஏற்றது. இம்முறையை 1971 முதல் அரசு நாள் குறிப்பிலும் 1972 முதல் அரசிதழிலும் வெளியிட்டது.

1981 முதல் எம்.ஜி.ஆர். ஆட்சி அரசின் அனைத்து அலுவல்களிலும் பின்பற்றி வருகிறது. எனவே தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு ஆகும்.

இடையில் வந்து புகுந்த சித்திரை, தமிழர் மீது புகுத்தப்பட்ட பண்பாட்டுத் திணிப்பாகும்.

சென்னை பள்ளிக்கூடத்தில் ஆங்கில மொழி மூலம் படித்த முதல்வர் ஜெயலலிதா, சைவ சித்தாந்தி தமிழ்க் கடல் மறைமலை அடிகளார், முத்தமிழ் அறிஞர் கி.ஆ.பெ. விசுவநாதம் போன்ற அறிஞர்களைவிடத் தனக்கு அதிகம் தெரியும் என்பது அறிவுடைமை அன்று. அஃது அவரது அறி யாமையை அல்லது ஆணவத்தைக் காட்டுகிறது எனலாம்.

பழந்தமிழகத்தில் ஆண்டுத் தொடக்கம் தை மாதமாக இருந்தது. பின்னர் ஆவணி ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது என்பது தொல் காப்பியத்துக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் எழுதிய உரை மூலம் தெரிகிறது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது. எனவே இழந்த தொன்மைச் சிறப்புக்குரிய தை மாதம் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் ஆகும்.

தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட இலக்கியங்களில் காணப் பெறும் சான்றுகள் பின்வருமாறு:

1. ‘தைஇத் திங்கள் தண்கயம் படியும்’ (நற்றிணை)
2. ‘தைஇத் திங்கள் தண்ணிய தரினும்’ (குறுந் தொகை)
3. ‘தைஇத் திங்கள் தண்கயம் போல்’ (புறநானூறு)
4. ‘தைஇத் திங்கள் தண்கயம் போல’ (அய்ங்குறு நூறு)
5. ‘தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ’ ‘(கலித் தொகை)
‘தைப் பிறந்தால் வழி பிறக்கும்’, ‘தை மழை நெய் மழை’ முதலான பழமொழிகள் இன்றும் வாழையடி வாழையாக வந்த வாய்மொழிப் பழமொழிகளாகும்.

இப்படி ஆண்டு, மாதம், நாள், கணக்குகளை மாற்றுவது சரியா? என்றால் வரலாற்றில் இத்தகைய மாற்றங்கள் காலத்துக்குக் காலம் நடந்தேறி இருக்கின்றன.

பூமி சூரியனைச் சுற்றி வர எடுக்கும் காலம் 365.242 நாள்களாகும். ஞாயிறு நாள்களைப் பண்டைய உரோமானியர் பத்து சம மாதங்களாக வகுத்தனர். அந்தப் பத்து மாதங்களுக்கு முறையே மார்ச், ஏப்ரல், மே, ஜுன், ஜூலை, ஆக°டு, செப்தெம்பர் (சப்த-ஏழு), அக்தோபர் (அஷ்ட-எட்டு), நொவெம்பர் (நவ-ஒன்பது), டிசெம்பர் (தச-பத்து) என மன்னர்கள், தெய்வங்கள் பெயர்களைச் சூட்டினர். ஜூலிய° சீசர் காலத்தில் (கி.மு. 47 இல்) நாள்காட்டியில் மேலும் திருத்தங்களை மேற் கொண்டார். பத்து மாதங் கள் 12 மாதங்களாக மாற்றி அமைக்கப்பட்டது.

முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் தமிழ்ப் புத்தாண்டைச் சித்திரைக்கு மாற்றியதற்கு இன்னொரு காரணத்தையும் மொழிந்தார். அது ஆண்டின் தொடக்கம் வசந்தமாக (இளவேனில்) இருப்பதற்காகக் கணிக்கப்பட்டதே சித்திரைப் புத்தாண்டு எனக் கூறினார். இந்தக் காரணம் அவருக்கு வானியல் பற்றிய அறிவு பற்றாது என்பதையே காட்டுகிறது.

தென்னாட்டுப் பஞ்சாங்கக் கணிப்பாளர்கள் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வராகமிகரர் வகுத்துத் தந்த காலக் கணிப்பை அப்படியே இன்றும் பின்பற்றி வருகின்றனர். அதனால் 24 நாள்கள் காலக் கணக்கில் பின்தங்கிப் போய்விட்டது.

எடுத்துக்காட்டாக நள ஆண்டு சித்திரை முதல் நாளை எடுத்துக் கொள்வோம். இந்தியாவின் மத்திய அரசினுடைய நாள்காட்டி அன்று சக வருடம் 1899, சைத்ர மாதம் 24 ஆம் நாள் என்று காட்டுகிறது.

அதாவது, பஞ்சாங்கக்காரர்களுக்கு சித்திரை மாதம் முதல் நாள், மத்திய அரசிற்கும் பெரும்பாலான வட இந்தியப் பஞ்சாங்கங்களின் கணக்கு முறைக்கும் அதே நாள் சித்திரை 24 ஆம் நாள் ஆக இருந்து வருகிறது. 1957 இல் இந்திய நடுவண் அரசினால் இலாகிரி என்பவரது தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையமே இந்த மாறுபாட்டை கணக்கில் எடுத்து புதிய நாள் காட்டியை உருவாக்கியது.

இதனால், பஞ்சாங்க தமிழ் ஆண்டுக் கணிப்பு முறையில் குறையிருப்பதை உணரலாம். இக் குறையை நூறு ஆண்டுகளுக்கு முன்பே சுப்பிரமணிய பாரதியார் பஞ்சாங்கம் என்னும் கட்டுரையில் சுட்டிக் காட்டியுள்ளார்.

“வசந்த விஷு (ஆண்டு) வானது மேஷ ராசியின் ஆரம்பத்தில் இருந்தபொழுது உத்தராயணம் தை மாதப் பிறப்பன்று தொடங்கியது. அதற்கு அப்பால் கணக்குத் தவறிப் போய்விட்டது. அய விஷுக்களின் சலனத்தை அறியாமலோ, அறிந்திருந்தும் கவனியாமலோ ஸம்வத்சரத்தின் பரிமாணத்தில் இருபதரை நிமிஷம் பிந்தி வருகின்றன. 80 வருஷத்திற்கு சரியான 71.5 ஆண்டுகள்) ஒரு நாள் பிந்தி விடும். மேற்படி நியமங்கள் ஏற்பட்டு இப்போது அநேக நூற்றாண்டுகளாகி விட்டன. அதனால் புண்ய காலங்கள் 20, 22 நாள் பிந்திப் போய் நியமங்கள் பிரத்தியஷத்துக்கு விரோதமாகியிருக் கின்றன.” (பாரதியார் கட்டுரைகள் – பக்கம் 210-211)

தொல்பொருள் ஆய்வாளர் அய்ராவதம் மகா தேவன் சென்ற ஆண்டு நடந்த ஒரு வானியல் கருத்தரங்கில் பஞ்சாங்கத்தை உரிய காலத்தில் உரிய முறையில் திருத்தி அமைக்கத் தவறினால் பிற்காலத்தில் அயனப் பிறப்பு நாள்கள் தலைகீழாக மாறி, உத்தராயணப் புண்ணிய காலத்தைத் தட்சணாயப் பிறப்பு நாளென்று கொண்டாட நேரிடும் என எச்சரித்தார்.

எனவே, இந்தக் குளறுபடிகளை நீக்க வேண்டும் என்றால் தமிழ் ஆண்டுக் கணிப்பில் திருத்தம் செய்ய வேண்டும். அத்திருத்தம் சமய சார்பற்ற முறையில் அமைய வேண்டும். அதற்குத் திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கு முறையைப் பொங்கல் திருநாளில் தொடங்குவதே சாலவும் பொருத்தமாக இருக்கும்.

ஆக, பற்சக்கர வடிவத்தில் வடமொழியில் அரு வருப்பான பெயர்களைக் கொண்ட 60 ஆண்டுகளைப் பின்பற்றினால் வரலாற்றைப் பதிவு செய்வதில் குழப்பம் ஏற்படும். அறுபதுக்கு மேல் எண்ண முடியாது. திருவள்ளுவர் பெயரிலுள்ள தொடர் ஆண்டு இந்தக் குழப்பத்தை அடியோடு நீக்க உதவுகிறது.

60 ஆண்டு சுழற்சி வராது. தொடர்ச்சியாக ஆண்டுகளைக் கணக்கிடலாம்.
தமிழர்கள் வரலாற்றில் முதல்முறையாக தங்களுக்கென ஒரு தொடராண்டு (சகாப்தம்) உருவாக்கப்பட்டுள்ளதென பெருமிதத்துடன் கூறும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்க்கும் பொய்யில் புலவர் திருவள்ளுவருக்கு நினைவாக அமையும். தமிழரின் திருநாளான பொங்கல் விழா தனிச் சிறப்படையும்

ஒரு இனம் பல நூற்றாண்டுகளாகக் கடைப் பிடிக்கின்ற மரபு அந்த இனத்திற்குத் தீங்கிழைக்கிறது என்று கண்டால் அந்த மரபு ஒழிக்கப்பட வேண்டும் அல்லது மாற்றியமைக்கப்பட வேண்டும். ஆதலால் தைப் பொங்கல் நாளான தைத் திங்கள் முதல் நாள் – திருவள்ளுவர் பிறந்த நாள்தான் தமிழனுக்குரிய தமிழ் புத்தாண்டு நாளாகும்!

முதல்வர் ஜெயலலிதா விரும்பினால் சித்திரை முதல் நாள் இந்துக்களின் ஆண்டுப் பிறப்பு என்று கொண்டாடலாம். ஆனால், அது தமிழ்ப் புத்தாண்டு அல்ல.

சோதிடர்களைக் கேட்டால் சூரியன் புவியைச் சுற்றி வருவதாகவே சொல்வார்கள். அதன் அடிப் படையிலேயே சாதகம் கணிக்கப்படுகிறது. உண்மையில் புவி தான் சூரியனை சுற்றி வருகிறது. புவி தனது அச்சில் சுற்றும் அதே வேளை சூரியனையும் ஒரு நீள் வட்ட வடிவமான ஓடு பாதையில் சுற்றி வருகிறது. புவி தனது அச்சில் தன்னைத் தானே விநாடிக்கு 30 கி.மீ. (மணிக்கு 108,000 கி.மீ.) வேகத்தில் சுழல்கிறது. ஒரு முறை புவி சூரியனை சுற்றி வர 365.26 நாட்களை எடுக்கிறது.

சனவரி 3 இல் பூமி சூரியனுக்கு அண்மையில் (147.3 மில்லியன் கிமீ) காணப்படுகிறது. ஜூலை 4 இல் பூமி சூரியனுக்கு தொலைவில் (152.1 மில்லியன் கி.மீ.) காணப்படுகிறது. ஆனால், பருவ மாற்றத்துக்கு பூமியின் தொலைவு காரணமல்ல. அதேபோல் கோள்கள், நட்சத்திரங்களும் காரணமல்ல. புவியின் அச்சு ஓடு பாதையின் செங்குத்துக் கோட்டிற்கு 23.45 பாகை சரிந்து காணப்படுகிறது. இந்தச் சாய்வில் மாற்றம் ஏற்படுவதில்லை. இதுவே பருவ மாற்றங்களுக்குக் காரணமாகும்.

பருவ மாற்றங்கள்
வடகோளத்தில் செப்டம்பர் 22 அல்லது 23 (இலையுதிர் சமபகல் இரவு வடதுருவம் ஞாயிறுக்கு அண்மையாகவோ, தொலைவாகவோ இல்லாமல் இருக்கும். அதேபோல் வடகோளத்தில் மார்ச்சு 20 அல்லது 21 (வேனில் சமபகல் இரவு) வடதுருவம் ஞாயிறுக்கு அண்மையாகவோ தொலைவாகவோ இல்லாமல் இருக்கும். இந்தச் சமபகல் இரவு குறுக்குக் கோட்டில் எங்கிருந்தாலும் வேறுபடாது. இந்த வேனில் சமபகல் இரவு நாளே வடகோளத்தில் வேனில் காலத் தொடக்கமாகும். அஃதாவது மார்ச்சு 20 அல்லது 21 வேனில் காலத் தொடக்கமாகும்.

எனவே ஞாயிறு சித்திரை முதல் நாள் (ஏப்ரல் 13 அல்லது 14) மேஷ இராசியில் அசுவினி நட்சத்திரத்தில் புகுகிறது (வானியல் கணிப்பின்படி ஞாயிறு வான் நடுக்கோட்டைக் கடக்கும் நாள் ஏப்ரல் 19 ஆகும்) என்பது சரியான கணிப்பு. ஆனால் வேனில் (வசந்த) காலம் ஏப்ரல் 14 இல் தொடங்குகிறது என்பது பிழையான கணிப்பு. வேனில் காலம் மார்ச் 20 அல்லது 21 இல் தொடங்குகிறது என்பதுதான் சரி! மேலே சொல்லியவாறு மாறி வரும் பருவங்களுக்கும் கோள்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. புவி தனது அச்சில் அதன் ஓடு பாதைக்கு 23.45 பாகை சரிந்திருப்பதே பருவங்கள் ஏற்படுவதற்குக் காரணமாகும்.

சித்திரைப் புத்தாண்டுக்கு வானியல் அடிப்படை இருப்பது போலவே தை புத்தாண்டுக்கும் வானியல் அடிப்படை இருக்கிறது. தை முதல் நாள் சூரியன் தனது தென்திசை பயணத்தை முடித்துக் கொண்டு தனு இராசியில் இருந்து விலகி, வடதிசைப் பயணத்தை மகர இராசியில் இருந்து தொடங்குகிறது.

மேலே கூறியவாறு பூமி சூரியனை ஒரு நீள் வட்டத்தில்சுற்றி வருகிறது. இது நமது கண்களுக்கு சூரியன் புவியைச் சுற்றுவது போன்ற மாயையை ஏற்படுத்துகிறது. ஒரு வட்டத்துக்குத் தொடக்கமும் முடிவும் இல்லை. அதன் தொடக்கம் எந்தப் புள்ளியிலும் தொடங்கலாம். சூரியனின் வடதிசைப் பயணத்தில் தனு இராசியில் இருந்து மகர இராசிக்கு (பாகை 270) உட்புகும் நாளும் (மகர சங்கராந்தி) வானியல் அடிப்படையில் ஆனதுதான்.

புவி தனது அச்சில் சுழலும்போது சூரியன் – நிலா இரண்டின் ஈர்ப்பாலும் அதன் நடுபகுதி புடைத்து துருவங்கள் சிறிது தட்டையாக இருப்பதாலும் அதன் அச்சில் தளம்பல் ஏற்பட்டு சுற்றும் வேகம் குறைகிறது. இதனால் புவி தனது பாதையில் ஆண்டொன்றுக்கு 50.26 ஆர்க் வினாடிகள் (20 மணித்துளி 14 வினாடி) மேற்குத் திசையில் பின்னுக்குத் தள்ளப்படுகிறது.

71.5 ஆண்டுகளில் இந்த வேறுபாடு 1 பாகை (ஒருநாள்) ஆகக் கூடிவிடும். இப்படி பின்னுக்குத் தள்ளப்படுவதை, ஆண்டைக் கணிக்கும் இந்திய சோதிடர்கள் கணக்கில் எடுப்பதில்லை. வானியலாளர்களும் மேற்குலக சோதிடர்களும் இதை கணக்கில் எடுக்கிறார்கள். இந்திய பஞ்சாங்கங்களில் கடந்த 2000 ஆண்டுகளாக ஏற்பட்டிருக்கும் இந்த கால வேறுபாடு திருத்தப்படவில்லை.

இதனால் பருவ காலங்கள் பிந்திப் போகின்றன. இந்த வேறுபாட்டைத் திருத்தி இருந்தால் சித்திரைப் புத்தாண்டு வேனில் தொடங்கும் மார்ச்சு 20-21 ஆம் நாள் கொண்டாடப்பட்டிருக்கும். இது போலவே ஏனைய விழாக்கள் பிழையான திகதியில் கொண்டாடப்படுகின்றன. இன்னும் 11.232 ஆண்டுகளில் புவியின் சம பகல் இரவு பின்னேகல் காரணமாக வேனில் சமபகல் இரவு துலா இராசியில்

0 பாகையில் சூரியன் புகும். அதாவது மேற்குல சோதிடத்தில் மார்ச்சு 20-21 இல் மேஷ இராசியில் சூரியன் புகும்போது இந்திய சோதிடத்தில் அதே சூரியன் தலா இராசியில் புகும். இரண்டும் எதிரெதிராக 180 பாகையில் இருக்கும்! பனி காலம் கோடை காலமாகவும் கோடைகாலம் பனிக் காலமாகவும் (வடகோளத்தில்)
மாறி விடும்!

Tuesday 10 January 2012

இந்தியா என்ற அமைப்புக்குள் இருந்து நாம் வெளியேறியாகவேண்டும். - பெரியார்


 மனிதன் காட்டுமிராண்டியாக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் பெற்று மனிதனாக வளர்ந்து வருகிறான். ஆதிகாலத்தில் மனிதன் மிருகத்துக்கும் அவனுக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு வாழ்ந்தான்.

உலகத்திலேயே வெறும் 50 இலட்சம் மக்கள் மட்டும் வாழ்ந்த காலம் உண்டு. அந்த காலத்தில் கடவுள் என்ற எண்ணம் கூட தோன்றவில்லை. வேதத்தில் கூட கடவுள் என்ற சொல் கிடையாது.

2000, 3000 வருடங்களுக்குள் தோன்றியதுதான் இந்த கடவுள் சங்கதி. அதுவும் இந்த கடவுளை நமது ஆள் உண்டாக்கவில்லை. வெள்ளைக்காரன்தான் இந்தக் கடவுளை உண்டாக்கியவன். அதைப் பார்ப்பான் ஒன்றுக்குப் பத்தாக பெருக்கிவிட்டான்.

வெள்ளைக்காரனும் காட்டுமிராண்டியாக இருந்த காலத்தில்தான் கடவுளைக் கற்பித்தான். அந்தக் கடவுளுக்கு நிறம் மஞ்சள் வர்ணம் என்று சொன்னான். அந்தக் கடவுளை காட்டுமனிதன் சிங்காரித்தான். அதற்கு உடை என்னடா என்றால் புலித்தோல் என்றான். தலையெல்லாம் சடை, காது எல்லாம் பெரிய ஓட்டை. நகைகள் எல்லாம் பாம்புகள். குடியிருக்கிற இடமோ சுடுகாடு. கையிலிருக்கிற கருவிகளோ மண்டை ஓடுகள். இவையெல்லாம் மனிதனுக்கு இருக்கிற யோக்கியதையா? இவையெல்லாம் காட்டுமிராண்டிதனமான சின்னங்கள் அல்லவா?

வெள்ளைக்காரனைப் பார்த்துதான் பார்ப்பான் இங்கு கடவுளை உண்டு பண்ணினான்.

வெள்ளைக்காரன் - கடவுள் ஜூபிடர்
பார்ப்பான் அதற்குக் கொடுத்த பெயர் இந்திரன்

வெள்ளைக்காரன் - மைனாஸ்
பார்ப்பான் - எமன்

வெள்ளைக்காரன் - நெப்டியூன்
பார்ப்பான் - வருணன்

வெள்ளைக்காரன் - லூனஸ்
பார்ப்பான் - சந்திரன்

வெள்ளைக்காரன் - சைனேஸ்
பார்ப்பான் - வாயு

வெள்ளைக்காரன் - அப்பலோ
பார்ப்பான் - கிருஷ்ணன்

வெள்ளைக்காரன் - மெர்க்குரி
பார்ப்பான் - நாரதன்

வெள்ளைக்காரன் - மார்ஸ்
பார்ப்பான் - கந்தன்

இப்படி வெள்ளைக்காரனைப் பார்த்து காப்பியடித்தவன்தான் இந்த பார்ப்பான். அப்படி காப்பியடித்த கடவுள்களுக்கும் கதை எழுதி, புராணங்கள் எழுதி பார்ப்பான் வயிறு வளர்க்க ஆரம்பித்துவிட்டான். அதை அப்படியே தமிழன் ஏற்றுக்கொண்டுவிட்டான்.

கடவுளுக்கு நாட்டில் என்ன பொதுவாக இலக்கணம் சொல்கிறார்கள். கண்ணுக்குத் தெரியாது. கைக்கு சிக்காது. புத்திக்கு எட்டாது என்கிறான். அப்படியானால் எப்படி கடவுளை நம்புவது என்று கேட்டால் நம்பு என்கிறான். நம்பு என்பதில்தான் கடவுளை வைத்திருக்கிறான். இதையேதான் கிறிஸ்தவனும் துலுக்கனும சொல்கிறான். கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கு எப்படி உருவத்தை உண்டாக்கினான்?

கருணையே வடிவானவர் என்கிறான். அவன் கையில் ஏன் சூலாயுதம்? வேலாயுதம்? அரிவாள், மண்வெட்டி, கோடாரிகள் இவையெல்லாம் கருணையின் சின்னங்களா? கொலைகாரப் பசங்களுக்கு இருக்கவேண்டிய கருவிளெல்லாம் கடவுளுக்கு எதற்கு?

ஒன்றும் வேண்டாத கடவுளுக்கு ஆறுகால பூசை எதற்கு? எந்த மடையன் கடவுள் சோறு தின்னுவதைப் பார்த்தான்? பார்த்திருந்தால் சொல்லட்டுமே!

கடவுளுக்கு ஒழுக்கத்தையாவது நல்லமுறையில் கற்பித்திருக்கிறானா? எந்தக் கடவுள் இன்னொருத்தருடைய மனைவியைக் கெடுக்காமல் இருந்திருக்கிறான்? விபச்சாரம் செய்தாத கடவுள் ஒன்றாவது உண்டா? இருந்தால் சொல்லட்டுமே. ஏற்றுக்கொள்கிறேன்.

பார்ப்பானின் இந்தக் கடவுளை ஏற்றுக்கொண்டால் நாம் சாத்திரப்படி சூத்திரன்தானே.

இந்து என்று நாம் ஒப்புக்கொள்ளும் வரை இந்தியா என்ற ஒன்று இருக்கும் வரை நாம் சூத்திரன்தானே.

தோழர்களே! இன்றைக்கு நாம் சூத்திரர்களாக இருக்கிறோம் என்றால் அது பார்ப்பானால் மட்டுமல்ல. நாமே அதை ஒத்துக்கொண்டிருக்கிறோம். பார்ப்பான் நம்மை சூத்திரன் என்று சொல்ல பயந்துவிட்டான். ஆனால் நாமோ இந்து என்று ஒப்புக்கொண்டு கோயில்களுக்குச் செல்வதன் மூலமாகவும் நெற்றியில் சாம்பலைப் பூசிக்கொள்வதன் மூலமாகவும் சூத்திரன் என்பதை ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.

அவனவன் மந்திரியாகப் போகவும் பெரியமனிதனாகவும் ஆசைப்படுகிறானே தவிர இந்தப் பிறவி இழிவை ஒழிக்க யார் முன்வருகிறான்?

தோழர்களே! நமது இன இழிவை ஒழித்துக்கட்ட நாம் முன்வரவேண்டும். அதற்கு முதற்படியாக இந்தியா என்ற அமைப்புக்குள் இருந்து நாம் வெளியேறியாகவேண்டும்.

நமது நாடு நமக்காகி சட்டம் போட்டுக்கொண்டாலொழிய நமது இழிவு நீங்க வேறு மார்க்கம் கிடையாது.

தமிழ்நாடு இந்தியாவிலிருந்து பிரிந்து சுதந்திர நாடாக மாறியாகவேண்டும். நாடு பிரிந்து போனால் ஒன்றும் குடி முழுகிப்போகாது. நமக்கு எல்லா வளங்களும் இருக்கின்றன. நம்முடைய நாடு நமக்காகுமானால் நாம் நினைக்கிறபடி சட்டங்கள் இயற்றிக்கொள்ளலாம்.

நமது இனம் வாழ, நமக்கு மேலே எவரும் ஆதிக்கம் செய்யக்கூடாது. எல்லாம் தமிழர்களுக்காகவே இருக்கவேண்டும் என்ற நிலைமை உருவாக நாம் சுதந்திர நாடு பெற்றாகவேண்டும்.

29-08-1973 அன்று சிதம்பரத்தில் பெரியார் ஆற்றிய உரை.

Sunday 8 January 2012

அறிவும் மானமும் கெட்டது ஏன்? - தந்தை பெரியார்


ஜீவப் பிராணிகளில் மனிதனையும் மிருகம் பறவை முதலிய மற்ற பிராணிகளையும் பிரித்துக் காட்டுவதற்கு அறிகுறியாய் உள்ள குணங்கள் இரண்டே இரண்டு குணங்கள் தாம். அவை, பகுத்தறிவு - தன்மானம் என்பனவாகிய இரண்டுமேயாம். அதாவது, ‘அறிவும் மானமுமே மக்கள் தன்மை’ என்பதற்கு ஒப்ப அவை இரண்டும் இல்லாதார் மக்களல்லாதாரேயாவர். இன்றைய மனித வாழ்வில் அவ்விரண்டிற்கும் இடமில்லாமலே போய்விட்டது.

மனிதன் பிறக்கும் போது அப்பிறப்பு இயற்கை அமைப்பில் அறிவு பெறும் சக்தி தான் அமையப் பெற்று இருக்கிறான். அனால், அறிவு பெற்று இருக்கவில்லை என்றாலும் வளர்ச்சியில் அறிவு பெற வேண்டியவனாகிறான்.

அப்படிப் பெறவேண்டிய அறிவில் தலையாயதும் வாழ்க்கைக்குப் பயன்படத்தக்கதும் ஆனது இயற்கையின் இயல்பை, தன்மையை உணர்வதேயாகும்.

ஆனால், மனிதப் பிறவியில் மனிதன் இயற்கையை உணர்ந்து கொள்ள முடியாதபடி மதத்தையும் கடவுளையும் கொண்டு தடுக்கப்பட்டுவிட்டான். கடவுளும் மதமும் தான் இயற்கையை அறியும் தன்மையைக் கெடுத்துவிட்டன. அவை மக்கள் அறிவு வளர்ச்சிக்கே முட்டுக் கட்டையாகிவிட்டன.

கடவுளும் மதமும் இயற்கையை அறியுந் தன்மையைக் கெடுத்து விட்டன என்பது மாத்திரமே அல்லாமல், நமது கல்வி என்பதும் ‘புண்ணில், புழுவும் ஏற்பட்டுவிட்டது’ என்று சொல்வதற்கு ஒப்ப, கடவுளையும் மதத்தையும் தாண்டித் தானாக வளர வாய்ப்பிருக்கும் துறையையும் அடைத்துவிட்டது. மதத்தால் ஏற்படும் முட்டாள் தனத்தைவிட, ‘கல்வி’யால் ஏற்படும் முட்டாள்தனம் மிகவும் கேடானது என்று சொல்லும்படியாகக் கல்வி ஏற்பட்டுவிட்டது.

எப்படி எனில், மதத்தால் அறிவு வளர்ச்சி குன்றுகிறது என்று ஏற்பட்டு விட்டால், ‘கல்வியால்’ அயோக்கியத் தன்மை - அதாவது மனிதனை மனிதன் மோசடி செய்து வாழும் தன்மை ஏற்பட்டு, பொய் பித்தலாட்டங்களாலேயே மனிதன் வாழ்வு நடத்தும்படியான - நடத்தித் தீர வேண்டியதான தன்மை ஏற்பட்டு வருகிறது.

இதற்குக் காரணம், கல்வியை மதக் கல்வியாக - மதத்தை அனுசரித்த கல்வியாக ஆக்கியதும், ஆசிரியர்கள் உண்மையான ஆசிரியர்களாய் இல்லாமல் வயிறு வளர்க்க ஆசிரியர் வேலை கற்ற ஆசிரியர்களைக் கொண்டும் - அந்த ஆசிரியர்களும் அடிமைக் கல்வி கற்ற அடிமை ஆசிரியர்களாக இருந்ததும், இருப்பது மேயாகும்.

ஆசிரியன் என்பவன் இயற்கை அறிவு பெற்றவனாக - அதில் மேம்பட்டவனாக - உலக அனுபவம் பெற்றவனாக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவன்தான் ஆசிரியர் தன்மைக்கு அருகதை உடையவனாவான். நம் ஆசிரியர்களுக்கு - அதாவது, ‘வைஸ்சான்ஸ்லர்’, ‘டைரக்டன் ஆஃப் எஜுகேஷன்’, ‘பிரின்ஸ் பால்கள்’ முதற்கொண்டு ‘செகண்டரி கிரேட் டீச்சர்’, ‘எஜுகேஷன் மினிஸ்டர்’ என்பவர்கள் வரை யாருக்காவது அத்தன்மை உண்டா? சிலருக்குக் கொஞ்சம் உண்டு என்றாலும் - அதை அவர்கள் கல்வித் துறையில் பயன்படுத்த உரிமை உண்டு என்றாவது, யாராலாவது சொல்ல முடியுமா?

ஆகவேதான், மக்கள் அறிவு வளர்ச்சியைக் கடவுள், மதம் ஆகியவை கெடுத்ததானது ஒரு பகுதி என்றும், ‘கல்வி’ கெடுத்தது மற்ற மீதிப் பகுதி என்றும் சொல்ல வேண்டியதாயிற்று.

அறிவின் தன்மை இத்தகையது என்றால், இனி மானத்தின் தன்மை எத்தகையது என்று பார்த்தால், அடியோடு மானம் கெட்டவனே சிறந்த மனிதனாகப் பாவிக்கும் படியான அளவுக்கு மானமற்ற தன்மை மதிப்புப் பெற்று விட்டது.

மனிதனுக்கு மானம் எவ்வளவு முக்கியமானது என்பதை மக்கள் உணர்ந்து அதற்கு மதிப்புக் கொடுத்தால், மனித வாழ்வில் கடுகளவுகூட குறையும் ஒழுக்கக்கேடும், அசவுகரியமும் ஏற்பட இடமிருக்காது. மனிதன் மானத்தில் இலட்சியமற்றவனாக ஆகிவிட்டதினாலேயே பகுத்தறிவுள்ள மனித ஜீவனின் கூட்டு வாழ்வு - காட்டில் கெட்ட மிருகங்களிடையில் வாழும் தற்காப்பற்ற சாது ஜீவன்கள் தன்மையாக மனிதன் நிலைமை ஆகிவிட்டது. நம் நாட்டில் மக்களிடத்தில் மான உணர்ச்சியைத் தூண்ட சாதனமே இல்லாமல் போய்விட்டது. இதற்கு நம் சமுதாய வாழ்வு அமைப்பும், பொருளாதார அமைப்பும் பெரும் காரணமாக இருந்தாலும், இன்றைய அரசியலமைப்பு எல்லாவற்றையும் விட மேம்பட்ட காரணமாக இருந்துவருகிறது.

சமுதாயத் துறையில், மேல்பிறப்பு - கீழ்ப்பிறப்பு என மக்களைப் பிரித்து அமைத்த பிறகு, கீழ்ப்பிறப்பில் பட்ட மக்களுக்குமான உணர்ச்சி என்பது செயற்கையால் போலியாகத் தோன்றி மறையுமே அல்லாது இயற்கையான உணர்ச்சி அச்சமுதாயதுக்கு எப்படி இருக்க முடியும்? மனித சமுதாயத்தில் அதோடு கூடவே ‘குச்சிக்கார தாசி பிழைப்பு’ - அதற்கொரு சமுதாயம்; துரோக எண்ணமே கை முதலாக உடைய வியாபாரத்துறை - அதற்கொடு கூட்டம்; பொய்யும் பித்தலாட்டமும் மனதறிந்து பயன்படுத்தித் தொழில் செய்து வாழும் வக்கீல் துறை - அதற்குப் பெரும் ஸ்தாபனம் ஆகிய இவைகளுக்கு சமுதாயத்தில் மரியாதையும் உயர் வாழ்வும் ஆகிய தன்மைகளும் இருந்து வருமானால், மக்களுக்கு மானத்தைப் பற்றிய, ஒழுக்கத்தைப் பற்றிய கவலை எதற்காக வரவேண்டும்?

ஒழுக்ககேடு என்பது மானத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒழுக்கமுள்ளவன் மானியாய் இருப்பான்; மானி, ஒழுக்கமுள்ளவனாக இருப்பான். அறிவு என்பது இயற்கையைப் பற்றிய தெளிவை அடிப்படையாகக் கொண்டது.

அறிவுள்ளவன், இயற்கைவாதியாய் இருப்பான்; இயற்கைவாதி, அறிவாளியாய் இருப்பான். ஒழுக்கம் என்றால் மானம் என்றும் -ஒழுக்கமுடையவன் என்றால் மானி என்றும் கொள்ளலாம். அதுபோல், அறிவு என்றால் இயற்கை என்றும் அறிவாளி என்றால் இயற்கையை அறிந்தவன் என்றும் கொள்ளலாம்.

ஆகவே, மனித சமுதாயத்துக்கு அல்லது தனி மனிதனுக்கு கூட்டு வாழ்க்கைக்கும் மனிதன் ஓர் உயர்ந்த பிறவி என்பதற்கும் அத்தியாவசியமானவை அறிவும் மானம் ஆம் என்பதும், இவை இரண்டும் இன்று மக்களிடையில் இல்லாமல் போய்விட்டன என்பதும், அதற்கு முக்கியக் காரணம் கடவுளும் மதமும் கல்வியும் சமுதாய - பொருளாதார அரசியல் அமைப்பும் ஆம் என்பதும் எனது அபிப்பிராயமாகும்.

(‘விடுதலை’ - தலையங்கம், 2.1.1950)