Sunday 27 November 2011

ஜோதிடம் - பெரியார்

ஜோசியம் என்றால் என்ன? அது உண்மையா? அப்படி ஒன்று இருக்க முடியுமா? என்பன முதலாகிய விஷயங்களை ஆராய்ச்சி செய்து பார்ப்போம்.

ஜோசியம் என்பது உலக வழக்கில், அனுபவத்தில் ஒரு மனித ஜீவனுடைய பிறந்த காலத்தை ஆதாரமாக வைத்து அந்த மனிதனின் வாழ்க்கை, அதன் சம்பவம், பலன் முதலாகியவைகளை மொத்தமாய் வருஷ பலனாயும், மாத பலனாயும், தின பலனாயும், நிமிஷப் பலனாயும் சொல்லுவதும், அவற்றுள் துன்பம் வரத்தக்கது ஏதாவது நேர்ந்தால் அதற்கு ஏதாவது பரிகாரங்கள் செய்வதன் மூலம் விரோதம் நீங்கி சித்தியடைய முயற்சிப்பதும் ஆகிய காரியங்களுக்கு உபயோகப்படுத்திக் கொள்வதாகும். இந்த ஜோசியம் முன் சொன்னது போல் பிறந்த காலத்தைக் கொண்டு சொல்வதோடு, மற்றும் வேறு பல வழிகளிலும், அதாவது போர்நாமத்தைக் கொண்டும், கேட்கப்பட்ட நேரம், கேட்பவரின் இருப்புநிலை, கேட்ட சங்கதி, ஜோசியனுக்கு எட்டும் நேரம், கேட்பவரின் தாய் தகப்பன், சகோதரம், பந்து முதலானவர்களின் பிறந்த கால ஜாதகம் முதலியனவைகளைக் கொண்டும் பலன் சொல்வது உண்டு. இன்னும் இது போன்ற பல வகை, அதாவது ஏதாவது ஒரு எண், ஒரு புஷ்பம், ஒரு எழுத்து, ஆகியவைகளைக் கேட்டால் ஒரு அங்கத்தைத் தொடுதல் முதலானவைகளின் மூலமும் பலன் சொல்வதும் உண்டு. ஆகவே, மேற்கண்ட எல்லாவற்றின் மூலம் பலன் சொல்ல முடியுமா முடியாதா என்பதைப்பற்றி யோசிப்பதில் முதலாவதாக ஜீவன் பிறந்த காலத்தை ஆதாரமாக வைத்துப் பலன் சொல்லக் கூடுமா? என்பதைப்பற்றி முதலில் ஆராய்வோம்.

பிறந்த காலம்?
பிறந்த காலம் என்பது வயிற்றுக்குள் இருக்கும்போது ஜீவன் (உயிர்) ஏற்பட்ட காலமா? அல்லது வயிற்றிலிருந்து 7,8,9,10 மாதங்களில் எப்பொழுதானாலும் பிறக்கும் காலமா? அப்படிப் பிறக்கும் காலத்தில் தலை வெளியில் தெரியும் காலமா? அல்லது ஒருநாள், அரைநாள் அக்குழந்தை கீழே விழாமல் கஷ்டப்படும் காலத்தில், தலை வெளியாகி நிலத்தில்பட்டு, கால் நிலத்தில் விழாமல் தாய் சரீரத்தில் பட்டுக் கொண்டிருக்கும் காலமா? அல்லது கால், தலை ஆகிய எல்லாம் மருத்துவச்சி கையில் விழுந்த நேரமா? அல்லது மருத்துவச்சி கையில் இருந்து கீழே விழுந்த நேரமா? என்பனவாகிய கேள்விகள் ஒருபுறமிருக்க ஜீவனுடைய சரீரமெல்லாம் பூமியில் விழுந்த நேரம் என்பதாக வைத்துக்கொண்டே பார்ப்போமானாலும், இந்த நேரத்தைச் சரியாக எப்படிக் கண்டுபிடிக்க முடியும் என்பதை யோசிப்போம். குழந்தை கீழே விழுந்ததும் அது உயிருடனிருக்கிறதா? இல்லையா? ஆணா, பெண்ணா என்பன போன்றவைகளைப் பார்க்க சிறிது நேரமாவது செல்லும். பிறகு அந்தச் சேதியைக் கொண்டுவந்து வெளியில் இருக்கும் ஆண்களிடம் சொல்ல சிறிது நேரமாவது செல்லும். அந்தச் சேதியைக் கேட்டவுடன் நேரத்தைக் குறிக்க அங்கேயே அவனுக்குக் கடிகாரம் வேண்டும்.

அந்தக் கடிகாரம் சரியான மணியா என்பதும் தெரியவேண்டும். கடிகாரமில்லாவிட்டால், வானத்தைப் பார்த்து நேரம் கண்டுபிடிப்பதாயிருந்தால், அதற்குப் படிக்கும் நேரம் முதலியவை, அல்லது அக்கம் பக்கம் கடிகார நேரம், அதுவுமில்லாவிட்டால் உத்தேச சுமார் நேரம் ஆகியவைகளின் தாமதங்களும், பிசகுகளும் எப்படி நேராமல் இருக்க முடியும்? இவை ஒருபுறமிருக்க, அந்த நேரத்தில் பலன் சொல்லுவதானால் அந்த நேரத்தில் உலகத்தில் பிறக்கும் ஜீவன் எத்தனை இருக்கக் கூடும். மற்ற ஜீவன்களை யெல்லாம் தள்ளிவிட்டு, வெறும் மனித ஜீவனை மாத்திரம் எடுத்துக்கொண்டாலும் உலகத்தில் 270 கோடி மக்கள் இருக்கிறார்கள் என்ற கணக்குப்படிப் பார்ப்போமானால், சென்னை முதலிய பட்டணங்களின் சாதாரண அனுபவங்களின்படிக்கும் உலகத்தில் நாள் ஒன்றுக்கு 2,26,666 (இரண்டு லட்சத்து இருபத்தாறாயிரத்து அறுநூற்று அறுபத்து ஆறு) குழந்தைகள் பிறப்பதாகக் கணக்கு ஏற்படுகின்றது. (இந்தக் கணக்கானது அய்ந்து லட்சம் ஜனத்தொகை உள்ள சென்னை நகரத்திற்கு தினம் ஒன்றுக்கு 70 (எழுபது) குழந்தைகள் பிறப்பதாக கணக்குப் போடப்பட்டிருக்கிறது).

இதைத்தவிர கணக்குக்கு வராத விதவைகளின் குழந்தைகள், கல்யாணம் ஆகாத பெண்களின் குழந்தைகள், கணவன் சமீபத்தில் இல்லாத பெண்களின் குழந்தைகள் ஆகியவைகளைச் சேர்த்தால் இன்னமும் இந்தக் கணக்கு அதிகமாகும். இது ஒருபுறமிருக்க, மேற்படி சாதாரணக் கணக்குப்படிப் பார்த்தாலே ஒரு நாளைக்குப் பிறக்கும் குழந்தைகளைப் பங்கிட்டுப் பார்த்தால், ஒரு நிமிஷத்திற்கு சுமார் 160 குழந்தைகள் வீதம் பிறக்கிறதாகக் கணக்கு ஏற்படுகிறது. இதில் 33 கோடி கொண்ட நமது இந்தியாவிற்கு மாத்திரம் கணக்குப்படிப் பார்த்தால் நிமிஷத்திற்கு 33 குழந்தை வீதம் பிறக்கின்றதாக கணக்கு ஏற்படுகின்றது. ஆகவே, இந்த 33 குழந்தைகளுக்குமாவது ஜாதகப் பலன் ஒத்து இருக்க முடியுமா? இவைகளுக்குச் சரியான நேரம் கண்டு பிடிக்க முடியுமா? என்பதை யோசிக்க வேண்டும்.

1 நிமிஷக் கணக்கே இப்படி நிமிஷத்துக்கு 33 குழந்தைகள் பிறப்பதாயிருக்கும் பொழுது, ஒரு ஜோதிடம் சொல்லுவதற்குப் போதுமான காலமாகிய லக்கினம், நட்சத்திரம் ஆகியவைகளின் காலத்திற்குள் எத்தனை குழந்தைகள் பிறக்கக்கூடும் என்பதைப் பார்த்தால் இது சிறிதும் பொருத்தமற்ற தென்பதாகவே காணலாம்.

சாதாரணமாய் ஒரு ஜாதகம் என்பது வருஷம், மாதம், தேதி, கிழமை, மணி (அல்லது நாழிகை) அந்த சமயத்தில் லக்கினம், நட்சத்திரம் ஆகியவைகளைக் குறித்துள்ளதேயாகும். உதாரணமாக, பிரமாதி வருஷம், புரட்டாசி மாதம் 2_ஆந்தேதி புதன்கிழமை காலை சுமார் 10 மணிக்கு விருச்சிக லக்கினத்தில் அஸ்த நட்சத்திரத்தில் ஒருவன் பிறந்தான் என்பதாக ஒரு துண்டுச் சீட்டில் எழுதி ஒரு ஜோசியனிடம் கொடுத்துவிட்டால், இதன் பேரில் அந்த ஜோசியன் பலன் சொல்லிவிடக்கூடும் என்பதே அநேகமாக ஜோசியத்தின் லட்சணம்.

ஆகவே, இந்த விருச்சிக லக்கினம் என்பது 5 1/4 நாழிகை உடையதாகும். இந்த அய்ந்தே கால் நாழிகைக்குள், அதாவது 126 நிமிஷ நேரத்திற்குள் உலகத்திலே 20,160 (இருபது ஆயிரத்து நூற்று அறுபது) குழந்தைகள் பிறந்திருக்க வேண்டும். இது ஒருபுறமிருக்க, மேலும் இந்த லக்கினத்தில் நடப்பன, பறப்பன, ஊர்வன, நீர் வாழ்வன ஆகிய பூதக் கண்ணாடிப் பூச்சி முதல் யானை வரையில் உள்ள ஜீவன்களின் குழந்தைகள் பல நூறு கோடி ஜீவன்களுக்கு மேல் பிறந்திருக்க வேண்டும். இது ஒருபுறமிருக்க,

இந்தியாவில் மாத்திரம் அந்த விருச்சிக லக்கினத்தில் முன் சொல்லப்பட்ட கணக்குப்படிக்கு 4,158 (நாலாயிரத்து நூற்று அய்ம்பத்து எட்டு) குழந்தைகள் பிறந்திருக்க வேண்டும்.

ஆகவே, அன்றைய தினம் இந்த விருச்சிக லக்கினத்தில் பிறந்த காரணத்திற்காக 4,158 பேருக்கும் வாழ்க்கையில் ஒருவிதமான பலன் அனுபவமிருக்க முடியுமா? அந்தப்படி இருக்கின்றதா? என்பதை முதலில் யோசிக்க வேண்டும்

(2.10.49 விடுதலை)
(இருபது ஆண்டுகளுக்கு முன் பெரியார் எழுதியது)

வெண்மணி - பெரியாரின் எதிர்வினை

பெரியார் தலித்துகளுக்கான போராட்டங்களில் பாரபட்சத்துடன் நடந்துகொண்டாரென்று தொடங்கிய விவாதம், இன்றைய தலித் புத்திஜீவிகளென வர்ணிக்கப்படுபவர்களால், அவரை தலித் விரோதியெனவும் நிலப்பிரபுத்துவ ஆதரவாளரென்றும் பழிசுமத்துமளவிற்கு வந்துவிட்டது.

இந்து மதத்தையும் பார்ப்பன ஆதிக்கத்தையும் ஒழிக்காமல் ஜாதிப் படிநிலையைத் தவிர்க்கவியலாது என்பதிலும், பஞ்சமர்களின் விடுதலையின்றிச் சூத்திரர்களின் விடுதலை சாத்தியமில்லையென்பதிலும் பெரியார் கொண்டிருந்த தெளிவும் நம்பிக்கையும் அவரை மிகவும் மேலோட்டமாக வாசிக்கும் நபராலும் கூட இனங்கண்டு கொள்ளமுடியும் என்றிருக்க, இப் பழிசுமத்தல்களின் பின்னணி, திராவிடக் கட்சிகளில் சிதறிக்கிடக்கும் தலித்துக்களை ஒருங்கிணைத்து அவற்றிற்கிணையான ஓட்டுக்கட்சியாய்த் தம்மை ஸ்தாபித்து, ஆட்சியதிகாரங்களில் பங்குகேட்கும் மலிவான அரசியல் உத்தியேயன்றி, சுத்த சுயம்புவான தலித் எழுச்சிக்கான முன்னேற்பாடுகள் அல்ல.

ஈரோடு ஆதிதிராவிடர் வாலிபர் சங்க விழாவில் தந்தை பெரியார் ஆற்றிய உரையிலிருந்து (குடிஅரசு 4-12-1932) சிறுபகுதியொன்றைக் கோடிட்டுக்காட்டுவது இக்குற்றச்சாட்டுகளுக்குப் பதிலாக அமையும்:

“உலகமே வெறுத்துத் தள்ளிய சைமன் கமிஷனை, சுயமரியாதை இயக்கம்தான் உங்கள் நன்மைக்காக வரவேற்று, உங்கள் குறைபாடுகளைச் சொல்லிக் கொள்ளும்படி வேண்டிக் கொண்டதுடன், உங்கள் குறைபாடுகளையும் அது அறியும்படி செய்தது. அதன் பயன்தான் இப்போது எத்தனையோ பேர் தடுத்தும், சூழ்ச்சிசெய்தும் ஒரு அளவாவது நீங்கள் அவைகளிலும் ஸ்தானம் பெற முடிந்தது. உங்களுக்குத் தனிக்கிணறும், தனிக்கோவிலும் கட்ட வேண்டும் என்று சொன்ன தேசியங்களும் மாளவியாக்களும் உங்களுக்குப் பொதுக்கிணற்றில் உரிமையும், பொதுக் கோவில்களில் அனுமதியும் கொடுக்கிறோம் என்று வாயளவிலாவது சொல்லக்கூடிய நிலைமை எப்படி ஏற்பட்டது? சுயமரியாதை இயக்கம் உங்கள் நிலைமையை உத்தேசித்தும், தேசியத்தின் வண்டவாளத்தை வெளிப்படுத்தியும், தீண்டாமை விலக்கின் சூழ்ச்சியை வெளியாக்கியும் செய்த பிரச்சாரமல்லவா என்பதைச் சற்று யோசித்துப் பாருங்கள்”.

காந்தி தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதியாகக் கூறிக் கொண்டதை அம்பேத்கரைப் போலவே வன்மையாகக் கண்டித்த பெரியார், சூத்திரர்களுக்கும் பஞ்சமர்களுக்குமான வேறுபாட்டினை உணர்ந்திருந்ததன் காரணமாகத் தன்னை எச்சூழலிலும் தீண்டப்படாதவர்களின் பிரதிநிதியாகச் சொல்லிக் கொள்ளாத நேர்மையை, அவர் ஆதிதிராவிடர்கள் மாநாடுகளில் கலந்துகொண்டு பேசிய பொழுது, ‘நீங்கள்’, ‘உங்களுடைய’ என்ற வார்த்தைகளை உபயோகப்படுத்தியதன் மூலமாக விளங்கிக் கொள்ளலாம்.

சூத்திரன் என்பதற்கான பொருள் தாசிமகன், வேசிமகன் என்றிருப்பதால், ‘பறையர்’ என்பதைவிடவும் ‘சூத்திர’னென்பது இழிவானதென்றவர், ‘ஆதிதிராவிடர் நன்மையைக் கோரிப் பேசப்படும் பேச்சுக்களும் செய்யப்படும் முயற்சிகளும் ஆதிதிராவிடரல்லாத மக்களின் பார்ப்பனரல்லாத எல்லோருடைய நன்மைக்குமே’ (குடிஅரசு 11.10.1931) என்ற தாழ்த்தப்பட்டோரின் விடுதலைக்கான தவிர்க்கவியலாத காரணங்களையும் சுட்டிக்காட்டத் தவறியதில்லை.

பூனா ஒப்பந்தத்தின்போது, பெரியார் ஐரோப்பாவிலிருந்தபோதும், அம்பேத்கருக்கு ‘6, 7’ கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உயிரானது காந்தியாரின் உயிரைவிடக் கேவலமானதல்ல; காட்டுமிராண்டித்தனமான பூச்சாண்டிகட்குப் பயந்து சமூகத்தைக் கொலை செய்துவிடாதீர்கள்’ என்று தந்தி கொடுத்ததுடன் “மகாத்மாவின் பொக்கைவாய்ச் சிரிப்பில் மயங்கியும், மாளவியா, இராஜகோபாலாச்சாரியார் போன்ற பிரகஸ் பதிகளின் ஆசிர்வாதத்திற்கு ஏமாந்ததும், அம்பேத்கர் கையெழுத்து போட்டதும், தலித்துகளின் விடுதலையைப் பாழாக்கிவிட்டதென விமர்சனம் செய்தவர் பெரியார். மேலும் ‘பூனா ஒப்பந்தம் இதர இடங்களில் எப்படிப் போனாலும் சென்னை மாகாணத்தைப் பொறுத்தவரையாவது இரத்துச் செய்யப்பட வேண்டுமென’வும் (குடிஅரசு 03.02.1935) பார்ப்பனரல்லாத இந்துக்களுடைய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை விட, தீண்டாத சமூகத்தின் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் முக்கியமானதெனவும் வலியுறுத்தினார். (குடிஅரசு 8.11.1925).

பெரியாரின் சமகாலத்தியவர்களும், அவரால் மதிக்கப் பெற்ற தலைவர்களுமான, முகமது அலி ஜின்னாவும், அம்பேத்கரும் மதம், ஜாதி அடிப்படையில் முஸ்லீம்களாகவும், தலித்துகளாகவும் தம் மக்களை ஒருங்கிணைத்த சூழலில் பெரியாரோ, “பார்ப்பனரல்லாதார்” என்ற வகைப்பாட்டிற்குள் முகமதியர்கள், கிறிஸ்தவர்கள், ஆங்கிலோ-இந்தியர் முதலிய இந்துக்களல்லாதவர்களையும், இந்துமதத்திற்குள் பிராமணர் நீங்கிய பலஜாதியினரோடு தீண்டத்தகாதரெனத் தள்ளிவைக்கப்பட்டவர்களையும் ஒருங்கிணைக்கும் கடினமான செயல்திட்டடத்தை முன்வைக்க, அது இன்னும் நிறைவேறாமல் காலம் நீடிக்கிறது.

இந்நிலையில் பெரியாரின் மீது சுமத்தப்படும் தலித் விரோதியென்ற குற்றச்சாட்டை நிரூபிக்க 44 தலித்துகள் எரித்துக் கொல்லப்பட்ட வெண்மணி சம்பவம் குறித்து அவர் பேசவில்லையென்பது சான்றாக்கப்பட்டு வருகிறது. ‘நிறப்பிரிகை’யின் கூட்டு விவாதத்திலும் பலரால் இக்கருத்து சொல்லப்பட்டு, பெரியாரிய ஆய்வறிஞர்களுள் ஒருவரான பேரா.அ. மார்க்ஸ் அவர்களும் அதுகுறித்துத் தமக்குத் தெரியவில்லையென்று கூறியுள்ள சூழலில் (பெரியார் - நிறப்பிரிகை கட்டுரைகள் டிசம்.1995-விடியல் வெளியீடு) வெண்மணி குறித்த பெரியாரின் எதிர்வினையைக் கவனப்படுத்துவது அவசியமாகிறது.

வெண்மணி சம்பவத்தின் போது பெரியார் உடல் நலம் மோசமாகி சென்னை பெரிய மருத்துவமனையில் சிகிச்சை செய்துவந்தாரென்பதும், 28.12.1968 அன்று மாலையே இல்லம் திரும்பினாரென்பதும், டிசம்பர் 27, 29 தேதிகளிட்ட விடுதலை நாளேட்டின் பக்கங்களில் திரு.கி. வீரமணி எழுதிய குறிப்புகளின் வழியாக அறியக்கிடைப்பதால், பெரியாரால் அறிக்கையெதுவும் எழுதவியலாததை அனுமானிக்கலாம். எனினும், 12.1.1969 அன்று செம்பனார் கோவிலில் அவர் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து (விடுதலை 20.1.1969) வெண்மணி குறித்த பெரியாரின் மதிப்பீடு வெளிப்படுகிறது.

“தஞ்சை மாவட்டத்தில் இடதுசாரி கம்யூனிஸ்ட்கள் விவசாய மக்களுக்கு நலன் செய்வதுபோல அவர்களுக்காகப் பாடுபடுவதுபோல ஏழை எளியவர்களின் வாழ்வை உயர்த்துவதுபோல மேடைகளிலே பேசுகிறார்கள். உங்கள் கூலியை உயர்த்துவது, வாழ்வை வளமாக்குவது எங்கள் கட்சியேயாகும் எனக்கூறி விவசாய மக்களை ஏமாற்றி, அவர்களைப் பலிவாங்கிக் கொண்டு வருகிறார்கள். கூலி உயர்வு என்பது ஒரு கட்சியால் ஏற்படுவதல்ல. இதனைத் தொழிலாளர்கள் உணர வேண்டும். நாட்டில் ஏற்படுகின்ற பொருளாதார மாற்றம், விலைவாசி உயர்வு - பற்றாக்குறை இவைகளைக் கொண்டுதான் கூலிகள் உயர்கின்றதே தவிர கட்சிகளால் அல்ல. தொழிலாளர்கள் தங்களுக்குக் கிடைக்கிற பொருளாதாரத்தில் எப்படி வாழவேண்டும் என்பதை கம்யூனிஸ்ட் தோழர்கள் உங்களுக்குக் கூறாமல் நாட்டிலே கலவரத்தையும் புரட்சியையும் ஏற்படுத்தி இன்றைய தினம் வலதானாலும் சரி, இடதானாலும் சரி, அதிதீவிர கம்யூனிஸ்ட்டுகளானாலும் சரி இந்த ஆட்சியினைக் கவிழ்த்துவிட வேண்டுமென்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அதற்கு விவசாயத் தோழர்களும் மற்ற தொழிலாள நண்பர்களும் இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கின்றேன். நாகை தாலுக்காவிலே கலகம் செய்யத் தூண்டியது கம்யூனிஸ்ட் கட்சி. அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர். கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஒத்துழைத்த கட்சி என்று அரசாங்கம் சும்மா இருந்துவிடவில்லை. தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கின்றது.

நாட்டில் அராஜகத்தைத் தூண்டும் பணியில் கம்யூனிஸ்ட் கட்சி மிகத் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றது. இதற்கு இடம்கொடுக்காமல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கம்யூனிஸ்ட்களின் குறி கீழத் தஞ்சைப் பகுதி பக்கம் திரும்ப இருக்கிறது. இங்குள்ள விவசாயத் தோழர்கள் இங்கு அந்த தீயசக்தி பரவ இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கின்றேன். இந்த ஆட்சியைப் பலவீனப்படுத்தக் கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டுள்ளது. அதற்கு நம்மக்கள் ஆதரவளிக்காமல் இவ்வாட்சிக்குத் தங்களின் ஆதரவினைக் கொடுப்பதன் மூலம் இந்த அரசை மேலும் பலம் பொருந்தியதாக்க வேண்டும். (குறிப்பு : “கீழ்வெண்மணி” பற்றிப் பெரியார் விடுத்த அறிக்கை 28.12.1968இல் “விடுதலை” இதழில் வெளிவந்துள்ளது. ‘பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்’ இரண்டாம் பதிப்பில் (2010) இது உள்ளது. - ஆ-ர்)

பெரியாரது வழமையான பாணியில் இவ்விமர்சனமும், பொதுப்புத்தி சார்ந்தும் சற்றே உணர்ச்சி வசப்பட்ட நிலையிலும் அமைந்திருக்கிறது. சோவியத் இரஷ்யாவை பல்வேறு சந்தர்ப்பங்களில் விதந்தோதிய பெரியார், இந்திய கம்யுனிஸ்டுகளை எப்பொழுதுமே ‘பொறுக்கித் தின்பவர்களென்றே’ அழைத்து வந்தார். அதைப் போலவே இந்திய கம்யூனிஸ்டுகளும் பெரியாரையும் அவர் வலியுறுத்திய இன, பிராந்திய உணர்வுகளையும் கண்டு கொண்டதில்லை. ‘இந்தியாவில் சமதர்மமும் பொதுவுடைமைத் தத்துவமும் ஏற்பட வேண்டுமானால், வருணாசிரமமும், பரம்பரைத் தொழில் முறையும், கைத்தொழில் முறையும் முதலில் ஒழிய வேண்டும்’ (குடிஅரசு 14.6.1931). ‘வருணாசிரமத்தையும் பார்ப்பனியத்தையும் பத்திரப்படுத்தி விட்டு எப்படிப்பட்ட பொதுவுடைமையை ஏற்படுத்தி விட்டாலும், திரும்பவும் அந்த உடைமைகள் வருணாசிரமப்படி பார்ப்பானிடம் தானாகவே வந்துவிடும் என்றும், சாதி இருக்கிற வரையில் எப்படிப்பட்ட பொதுவுடைமைத் திட்டம் ஏற்பட்டாலும் பார்ப்பனர்களுக்கு ஒரு கடுகளவு மாறுதலும் ஏற்படாமல் அவர்கள் வாழ்வு - முன்போலவே நடைபெறும் என்றும் தைரியம் கொள்ளச் செய்யும்...’ (குடிஅரசு 25.3.1934). அதனால்தான் பார்ப்பனர்களுக்குப் பொதுவுடைமைப் பிரச்சாரத்தில் அவ்வளவு உற்சாகம் ஏற்படுகிறதென்ற பெரியாரின் அவதானிப்பு, காலம்கடந்தே நமக்கு உறைக்கிறது.

‘கம்யூனிஸ்ட் - எவன் காலை நக்கியாவது வயிறு வளர்க்கிறதுதான் அவன் வேலை; இன்னாரோடுதான் இருக்கணும் என்கிற எண்ணம் இல்லை; நாம் வலுத்தால் நம்கிட்டே; பார்ப்பான் வலுத்தால் அவன் கிட்டே; இன்னொருவன் வலுத்தால் அவன்கிட்டே; உலகத்திலே கொள்கையே இல்லாத ஒரு கூட்டம் நம் கம்யூனிஸ்ட்டுதான்’ (4.11.1973 திருச்சி தேவர் மன்றம் “திருச்சி சிந்தனையாளர் கழக விழா”வில் பேசியது) என்ற கணிப்பும் இன்றைய வரைக்கும் நீடிக்கும் நிலைதான் இருக்கிறதெனினும், சமீப காலமாக, கம்யூனிஸ்ட்டுகள் பெரியாரை ஏற்றுக்கொள்வதும்; இனம், மொழி குறித்தெல்லாம் கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. இம்முடிவுகள் முன்னரே எடுக்கப்பட்டிருந்தால் அதனுடைய விளைவுகள் மிகச் சிறப்பாக இருந்திருக்குமே.

கூலி உயர்வுக்கான தொழிலாளர்களின் கிளர்ச்சிகளைப் பெரியார் ஒருபோதும் ஆதரித்ததில்லை. இது ஏதோ வெண்மணி விஷயத்தில் மட்டும் எடுக்கப்பட்ட முடிவல்ல. 1933ஆம் ஆண்டிலேயே கொச்சி, ஆலப்புழை, திருநெல்வேலி ஆகியவிடங்களில் கீழ்க்கண்டவாறு பேசியிருக்கிறார்.

“எந்தக் காரணத்தை முன்னிட்டாவது பாடுபடும் மக்கள் நிலை தாழ்ந்திருக்கவும் பாடுபடாத மக்கள் நிலை உயர்ந்திருக்கவும், ஆதிக்கம் செலுத்தவும் கூடாது என்பதுதான் தொழிலாளர்கள் கிளர்ச்சியின் முக்கியத்துவமாய் இருக்க வேண்டும். அப்படிக்கில்லாமல், ஏதோ 2 அணா 4 அணா கூலி உயர்த்தப்படுவதற்காகப் போராடுவதென்பது பயனற்றதேயாகும். ஏனெனில் நமது கிளர்ச்சியில் 2 அணா கூலி உயர்த்தித் தருவானேயானால், தொழிலாளிகளால் செய்யப்படும் சாமான்களின் பேரில் முதலாளிகள் ஒன்று சேர்ந்து நாலணா விலை அதிகப்படுத்திவிடுவார்கள். அந்த உயர்ந்த விலையைக் கொடுத்துச் சாமான் வாங்க வேண்டியவர்கள் தொழிலாளிகளேயாவார்கள். ஆகவே, முதலாளிகள் தொழிலாளிகளுக்கு வலது கையில் கூலி அதிகம் கொடுத்து, இடது கையில் அதைத் தட்டிப் பிடுங்கிக் கொள்வார்கள். முதலாளிகளுடன் கூலித்தகராறு என்பது முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையில் உள்ள புல்லுருவிக் கூட்டமான தரகர்களுடைய சூழ்ச்சியாகும்” (குடிஅரசு 01.10.1933).

“நிலங்கள் அனைவருக்கும் பிரித்தளிக்கப்பட வேண்டும்; விவசாயத்தில் ஈடுபட்ட கூலியாட்களுக்குக் கூலி தவிர விவசாயத்தில் ஒரு பங்கு இருக்கும்படிச் செய்ய வேண்டும்” என்ற “பகுத்தறிவு” கட்டுரையும் (2.12.1934) ‘முதலாளிக்கு ஏற்படும் இலாபத்தில் தொழிலாளர்களுக்குப் பங்கும் நிர்வாகத்தில் உரிமையும் வேண்டும்’ என்ற 1944-ஆம் ஆண்டு சேலம் மாநாட்டுத் தீர்மானமும், ‘அரசாங்கத்தின் சலுகையால் முதலாளி வாழ முடிகிறது. ஆகையால் முதலாளி கூடாதென்றால் அவனைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் மீது திரும்ப வேண்டு’மென்று பொன்மலையில் 27.9.1953 அன்று பேசியதும் இங்கு சேர்த்தெண்ணத்தக்கவை.

பெரியாரின் செம்பனார் கோயில் பேச்சிலிருந்து திராவிடக் கட்சிகளின்மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையை விளங்கிக் கொள்ள இயல்கிறது. அந்த நம்பிக்கையும் சிதறுண்டு போய், அவர் ‘ஓட்டுகளுக்காகக் கூட்டிக்கொடுக்கவும் செய்வார்கள்’ என்று இறுதிக்காலத்தில் (19.12.1973) பேச வைத்துவிட்டது. காங்கிரஸ் கட்சியை ஆட்சியிலிருந்து அகற்றி திராவிடக் கட்சிகள் ஆட்சியிலமர்ந்ததைச் சுயமரியாதை இயக்கத்தின் வெற்றியென அவர் கருதிக் கொண்டதும், அவர்கள் ஆட்சியிலிருப்பது சுயமரியாதை இயக்கப் பணிகளுக்கு ஆதரவாக இருக்குமென்பதும் அவர் நம்பிக்கைகளுக்குக் காரணமாயிருந்தன.

கம்யூனிஸ்ட்டுகளிடம் விவசாயக் கூலித் தொழிலாளிகள் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்ற பெரியாரின் அறிவுரையில், இப்பொழுது திராவிடக் கட்சிகளையும் தலித் அமைப்புகளையும் தயக்கமின்றி இணைத்துக் கொள்ளலாம். தலித் அமைப்புகள் பெரியாரை முற்றாகப் புறக்கணிப்பது பார்ப்பனியத்திற்குத் துணைசெய்வதே ஆகும். சாதி, மத ஒழிப்பிற்கான பெரியாரின் நுட்பமான அவதானிப்புகளைப் புறந்தள்ளுகிறபட்சத்தில், நெடிய காலம் தள்ளி அதன் பெருந்தீங்கை உணர வேண்டியிருக்கும்.

(நன்றி : “குதிரை வீரன் பயணம்”, 2006 சூன் இதழ்)

Sunday 20 November 2011

“அவசரம்; அவதாரம் எடுத்துவா கிருஷ்ணா!”

பகுத்தறிவாளருக்கும் - ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனருக்கும் நடக்கும் உரையாடல்

பகுத்தறிவாளன் : வாருமய்யா, ‘பாரத’ புத்திரரே! உமது பூமி மாதா வெப்பமாகி வருகிறாளே, தெரியுமா? இதே நிலை நீடித்தால் மனித இனமே அழிந்து விடும் என்று கூறுகிறார்களே?

பார்ப்பான்: பூமியைப் படைத்ததே - இறைவன் தான். ஆதிசேஷன் என்ற பாம்புதான் பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. பகவான் பூமியை அழிய விட மாட்டான். எல்லாம், அவன் பாத்துக்குவான், நீங்கள் ஏன் அலட்டிக்கிறீங்க?

பகுத்தறிவாளன் : அப்படியா? நீங்கள், எந்த கிரகத்தில் இருக்கிறீங்க? கடந்த பத்தாயிரம் ஆண்டுகளாக இல்லாத வகையில் பூமியின் மேற்பரப்பு வெப்பமாகி வருகிறதாம்! இதனால் பூமியில் மனித இனம் உயிர் வாழ்வதே கேள்விக்குறியாகியுள்ள தாம். பகவான் பார்த்துக் கொள்வான் என்றால், பூமி வெப்பமாவதை ஏற்கனவே தடுத்து நிறுத்தியிருக்க மாட்டானா? பூமியின் வெப்பம் அதிகரிக்கும்போது, ஆதிசேஷன் அதைத் தாங்கிக் கொண்டே இருக்கிறானா?

பார்ப்பான் : இப்படி எல்லாம் விதண்டாவாதம் பேசக் கூடாது. நாட்டில் தர்மம் கெட்டுப் போயிடுத்து. அதனால், பகவான் சோதிக்கிறான். இதை மனித குலம் எப்படி சந்திக்கப் போகிறதுன்னு சோதிக்கிறான்.

பகுத்தறிவாளன் : தர்மத்துக்கு ஆபத்து வரும்போதெல்லாம் பூமியில் அவதரித்து வருவேன் என்று கிருஷ்ண பகவான் கீதையிலே கூறியிருப்பதாக பிரச்சாரம் செய்து வருகிறீர்களே! இப்போது அவதாரம் எடுத்து வராமல் பகவான் சோதிக்கிறான் என்றால், இது என்ன குழப்பம்?

பார்ப்பான் : குழப்பம் உங்களுக்குத்தான்; எல்லாவற்றையும் பகவான் பார்த்துண்டுதான் இருக்கார், தெரியுமோன்னா?

பகுத்தறிவாளன் : பகவான் எங்கிருந்து பார்த்துண்டு இருக்கார்?

வெப்பமாகிக் கொண்டிருக்கும் பூமியிலிருந்தா? அல்லது வெப்பத்தைக் கக்கும் சூரியனிடமிருந்தா? அல்லது வேற்று கிரகங்களிலிருந்தா? எங்கிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறான்? உங்களுக்கு மட்டும் ஏதாவது ‘ஈ மெயில்’ அனுப்பியிருக்கிறானா? சொல்லுங்கோ? இதோ, பாருங்க, நான் கூறுவதை கொஞ்சம் காது கொடுத்து கேளுங்க.

பூமி மற்ற கோள்களிடமிருந்து மாறுபடுவதற்கு ஒரே காரணம், இங்கே தான் உயிரினங்கள் தோன்றி வாழத் தகுந்த தட்ப வெட்ப நிலை நிலவுகிறது. இந்த தட்பவெப்ப நிலைக்கு ஒரே காரணம் சூரியன்தான். சூரியனின் வெப்ப சக்தி பூமி மீது எல்லையின்றி விழுந்து கொண்டே இருக்கிறது. அவ்வளவு வெப்பமும் பூமியில் தங்கிவிட்டால், பூமியே எரிந்து போய்விடும். அவ்வளவு வெப்பமும் உடனுக்குடன் திரும்பிப் போய்விட்டால், அதுவும் ஆபத்துதான். பூமி பனியில் உறைந்து போய்விடும். இந்த இரண்டுமின்றி - பூமியில் உயிர் வாழ்வதற்கேற்ற தட்ப வெப்ப நிலை நிலவுவதற்கு பூமியின் மேலே சுற்றியுள்ள வளி மண்டலம் தான் காரணமாக இருக்கிறது. இந்த வளிமண்டலத்திலுள்ள நைட்ரஜன், ஆக்ஜிஜன், பசுமையில்ல (ழுசநநn ழடிரளந) வாயு ஆகியவைதான். சூரிய வெப்பத்தை அப்படியே பரவவிடாமல், உள்வாங்கிக் கொள்கின்றன. இதனால்தான் பூமியில் இதமான வெப்பம் நிலவுகிறது.

இப்போ என்னாச்சு தெரியுமா? பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயுவை அதிகமாகப் பயன்படுத்துவதாலும், எரிப்பதாலும், காடுகளில் மரங்களை எரிப்பதாலும் வெளியாகும் கரியமிலவாயு வெளியேற்றம் அதிகமாகிவிட்டது. இதேபோல், கேடு தரக்கூடிய மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, எஃப் வாயு போன்றவையும், மனிதர்களின் நவீன வாழ்க்கை முறைகளால் அதிகமாக வெளியேறி, பூமி வெப்பத்தை கட்டுப்படுத்தக்கூடிய பசுமையில்ல வாயுவை பாதிக்கச் செய்துவிட்டது. அதாவது, வெப்பத்தைப் பிடித்து வைக்கும் பசுமையில்ல வாயுக்களில், வெப்பத்தின் அளவு அதிகரித்துவிட்டது. இதனால் காலநிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு, பருவமழை தவறிப்போய், புயல், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் அதிகரித்து வருகின்றன. உலகமே இப்போது கவலையுடன், இதைப் பார்க்கிறது. நீங்கள், சூரியனையே பகவான் என்கிறீர்கள். குந்தி தேவி சூரிய பகவானுடன் சேர்ந்து கர்ணனைப் பெற்றதாக காதில் பூ சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள். நான் கேட்கிறேன், பூமியைப் படைத்தது கடவுள் என்றால், இப்போது பூமியின் ஆபத்துக்கும் பகவான்தான் காரணமா? இந்த பூமியைக் காப்பாற்றுவதற்கு, பகவான், தனி விமானத்தைப் பிடித்து, தரையிறங்கியிருக்க வேண்டாமா?

பார்ப்பான்: இப்படி எல்லாம் இந்துக்களைப் புண்படுத்தக் கூடாது. நீங்கள் சொன்னேளே, நைட்ரஜன், ஆக்சிஜன், பசுமையில்ல வாயு, இன்னும் ஏதேதோ. எல்லாமே வாயு பகவான் தான், தெரியுமோ? விவரம் தெரியாமல் தத்துப்பித்துன்னு உளறாதேள்!

பகுத்தறிவாளன் : நைட்ரஜன் பகவான்; ஹைடிரஜன் பகவான்; பசுமையில்ல வாயு பகவான்ங்கிற பெயரெல்லாம், உங்க சாஸ்திருத்துல, வேதத்துல இருக்கா? சொல்லுங்க பார்க்கலாம்! இவையெல்லாம் விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகள். விஞ்ஞானம் கண்டுபிடித்த பிறகு, நீங்கள், மதத்துக்கு சொந்தம் கொண்டாடக் கிளம்பிடுவீங்க! சரி, அப்படியானால் ஒரு கேள்வி கேட்கிறேன், வாயுக்கள் எல்லாம் பகவான்னு சொன்னா, கரியமிலவாயுவும் பகவான் தானே! அந்தக் கரியமில வாயு - அதிகமாக வெளியேறுவதுதான் பூமிக்கு ஆபத்தை உருவாக்கி வருகிறது. அமெரிக்கா, கனடா, சீனா போன்ற பணக்கார நாடுகள். தங்களின் வேகமான வளர்ச்சி ஆடம்பர தேவைகளுக்காக, நிலக்கரி, எண்ணெய், டீசல், பெட்ரோல், எரிவாயுகளைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகளை அதிக அளவில் தொடங்கி, கரியமில வாயுவை அதிகமாக வெளியேற்றி வருகிறார்களாம்.

இதற்கு வரம்பு கட்டுவதற்காகவே இப்போது 192 நாடுகளின் பிரதிநிதிகள் டென்மார்க் நாட்டில் கோபன் ஹெகன் நகரில் கூடிப் பேசியுள்ளன. பகவானை கட்டுப்படுத்துவதா? இது தெய்வ நிந்தனை என்று கூறி, இதையும் எதிர்க்கப் போகிறீர்களா? இந்து விரோதிகள் டென்மார்க்கில் கூடுவதைத் தடை செய்ய வேண்டும் என்று உங்கள் இராமகோபாலன், மயிலாப்பூர் மாங் கொல்லையில் நின்று கொண்டு போராடப் போகிறாரா? போபால் விஷவாயுவும் உங்கள் பகவான் தானோ?

பார்ப்பான் : கரியமில வாயுவோ என்ன கண்றாவியோ. அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. இந்தப் பூமியில் எல்லாரும் ‘ஷேமமா’ இருக்கறதுக்கு நாங்க யாகம் நடத்துறோம். இதுக்கெல்லாம் வேதத்துலேயே மந்திரங்கள் இருக்கு தெரியுமோ! வேத மந்திரங்களோடு நாங்க மூட்டுற யாகப் புகை வெளியில கலந்து, அமைதியைக் கொண்டு வந்து சேர்க்கும். அதுக்காகத்தான், உலக அமைதிக்கு யாகங்கள் நடத்துறோம். நன்னா புரிஞ்சுக்கோங்க!

பகுத்தறிவாளன் : உங்களுடைய யாகமும், வேத மந்திரமும் கரியமில வாயு வெளியேற்றத்தை தடுத்து நிறுத்திடும்னா, இப்போ, உலக நாடுகள் டென்மார்க்குல கூட வேண்டிய அவசியமே இருந்திருக்காதே. நீங்கள் உலக அமைதிக்கு யாகம் நடத்துறதா கதை விட்டாலும், அமெரிக்காவுல இரட்டை கோபுர இடிப்பு நடந்தது. ஈராக்கிலும், ஆப்கானிஸ் தானத்திலும், பாகிஸ்தானத்திலும் அன்றாடம் குண்டு வெடிக்குது. உலகம் முழுதும் பயங்கரவாதம் பரவிகிட்டு வருதுன்னு, அமெரிக்காகாரன் கூப்பாடு போடுறான். பக்கத்துல ஈழ நாட்டில, ஒரே நாளில் 30000 தமிழர்களை சிங்களன் கொன்று குவிச்சானே, உலக அமைதிக்கான யாகத்தின் சக்தி எங்கே போனது?

பார்ப்பான் : இதோ பாருங்கோ, வீண் பேச்சு எல்லாம் பேசப்படாது. இந்தப் பூமியே பகவானுக்கு கட்டுப்பட்டது. நோக்கு தெரியுமா? இந்த பூமியையே அப்படியே பாயாக சுருட்டி, கடலுக்குள் கொண்டு போய் இரண்யாட்சன் என்ற அரக்கன் ஒளித்து வைத்தபோது, மகாவிஷ்ணுதான், பன்றி அவதாரமெடுத்து, பூமியைத் துளைத்துக் கொண்டு போய் அந்த அரக்கனை வீழ்த்தி, இந்த பூமியையே பத்திரமாக மீட்டு வந்தார். ஞாபகம் வச்சுக்கோங்க. அந்த வெற்றி விழாதான் தீபாவளிப் பண்டிகை!

பகுத்தறிவாளன் : சரிதான். அன்றைக்கு பூமியை மீட்டு வந்த மகாவிஷ்ணு, இன்று பூமிக்கு ஆபத்து வந்துள்ளபோது, எங்கே போனான்? ‘டாஸ்மாக்குல’ தண்ணி அடிக்கிறானா? உடனே டென்மார்க் நாட்டுக்குப் போகச் சொல்லுங்கய்யா. அங்கேதான், ஆலோசனை நடக்குது!

பார்ப்பான் : என்ன ஓய், உமக்கெல்லாம் எங்க கடவுள் அவ்வளவு அலட்சியமாயிட்டானா? அதெல்லாம் அந்த நாட்டுக்கெல்லாம் எங்க பகவான் வர மாட்டான். ‘மனுஷாள்’ செய்யற பாவத்துக்கு பகவான் என்ன செய்வான்? காலம் கலி காலம். தர்மம் கெட்டுப் போயிடுச்சு! உலகம் அழியப் போறது; அவ்வளவுதான். ஏன், பகவானை வம்புக்கு இழுக்குறேள்.

பகுத்தறிவாளன் : அப்போ, உலகத்தை அழிய விட்டுட வேண்டியதுதானா? அப்படியே பூமியே அழியறப்போ, ‘பூ தேவர்களான’ நீங்களும், உங்கள் தர்மமும், வேதமும், உங்கள் கோயில்களும் சேர்ந்து தான் அழியப் போகிறது! அப்போது, பகவான் வந்து, உங்கள மட்டும் காப்பாத்திடுவார்னு நம்புறீங்களா?

பார்ப்பான் : அய்யோ.... நிறுத்துங்கோ; நிறுத்துங்கோ! பயமுறுத்தாதேள்! அப்படி எல்லாம் ஆபத்தை விலைக்கு வாங்க நாங்க தயாராயில்லை. முதல்ல பூமிய எல்லாரும் சேர்ந்து காப்பாத்தட்டும். கரியமில வாயுக் கசிவை நிறுத்தட்டும். பணக்கார நாடுகளுக்கு கடிவாளம் போடட்டும். மனித இனத்தின் செயல்களால் பசுமையில்ல வாயு அதிகரித்து, பூமியின் வெப்ப சக்தி அதிகரிப்பை தடுத்து நிறுத்துவதற்கான உடன்பாடுகளை உலக நாடுகள் மேற்கொள்ளட்டும். பூமியை விஞ்ஞானிகளும், உலக நாடுகளும் பத்திரமாக்கித் தந்தால்தான், நாங்க அதன் மேலே நின்று கொண்டு, ‘தர்மம்’, ‘அவதாரம்’, ‘வேதம்’, ‘யாகம்’, ‘பூணூல்’, ‘வர்ணாஸ்ரம்’ எல்லாவற்றையும் பேசி உங்க தலையில் மிளகாய் அரைக்க முடியும்! சுவர் இருந்தா தானே சார், சித்திரம் வரைய முடியும்?

பகுத்தறிவாளன் : பூமியை பத்திரப்படுத்திப் பாதுகாத்துக் கொடுத்தால், அதன் பிறகு, நீங்கள் பூமியில் வாழுற மனிதனை அடிமையாக்க, சுரண்ட, தீண்டப்படாதவளாக்க, சூத்திரனாக்க கிளம் பிடுவீங்க! அப்படித் தானே! கரியமிலவாயுவைவிட நீங்கதானப்பா, ஆபத்தானவங்க! அந்த வாயு மண்ணைத்தான் அழிக்குது; நீங்க, மனிதர்களையே, அழிக்கிறீங்களேடா, “பாவி”!

- கோடங்குடி மாரிமுத்து
நன்றி - பெரியார் முழக்கம்

Saturday 19 November 2011

கிராமங்களில் ஜாதித் திமிரை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்?



சாதி ஒழிப்புத் தொடக்கம் - நடப்பு அதை ஒழிக்க வேண்டுமென்றால், என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் அம்பேத்கர் அவர்கள் நல்லவண்ணம் எழுதியிருக்கிறார்கள். முன்பு வடநாட்டின் பஞ்சாபில் சாதி ஒழிக்க ஓர் இயக்கம் ஏற்பாடு செய்தார்கள். அதைச் சாதி ஒழிக்கும் ஸ்தாபனம் என்று சொன்னார்கள். நன்கு வேலை செய்தார்கள். நம் பத்திரிகைகளை வாங்கி மொழிபெயர்த்து வெளியிட்டார்கள். நல்ல பகுத்தறிவுடன் கூடிய கார்ட்டூன்களைப் போட்டார்கள்; அதிலே என்னையும் உபதலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். நன்றாக நடந்து கொண்டிருந்தது. பிறகு பணக்காரர்கள் அதை விலைக்கு வாங்கி விட்டார்கள். அதற்கு உதவி செய்வதாகச் சொல்லி வந்தார்கள், விலைக்கு வாங்கினார்கள். இருந்தாலும், அதன் மூலம் சாதி ஒழிப்பு மாநாடு என்று கூட்டி, தலைமை வகிக்க அம்பேத்கரைக் கேட்டுக் கொண்டார்கள். அவர்களும் சம்மதித்தார்கள்.

அவர்கள் அந்த மாநாட்டில் பேச சொற்பொழிவை எழுதினார்கள். அதைக் கண்டதும் ரொம்பத் திடுக்கிட்டு விட்டார்கள். மதம், சாஸ்திரம் ஒழிந்தால்தான் சாதி ஒழியும்; அதிலே ஒன்று இருந்தால் கூட சாதி ஒழியாது என்று சொல்லி இருக்கிறார். “மநு நீதி, சுருதி, மதம் இவற்றை முதலில் நீங்கள் ஒழித்தாக வேண்டும். அதைச் செய்யாமல் சாதியை ஒழிக்க முடியாது; இதுவே எனது உறுதியான அபிப்பிராயம்’ என்று எழுதியிருக்கிறார்கள். இதைப் பார்த்த உடனே அங்கே சாதியை ஒழிக்க வேண்டுமென்ற ஸ்தாபனத்தை ஏற்படுத்தியவர்கள், மத விரோதமாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு அவரை அணுகியபோது, அவரும் “என்னைத் தலைமை தாங்கப் போடுவதால் என் கருத்தைச் சொன்னேன்’ என்றார். இந்தக் கருத்தை ஜீரணிக்க முடியாது என்று மாநாட்டினர் சொல்ல, “நீங்கள் வேண்டுமென்றால் இது தப்பு என்று தீர்மானம் நிறைவேற்றிக் கொள்ளுங்கள்; உங்கள் மாநாட்டிற்குத் தலைமைப் பதவிக்காக என் கருத்துக்கு விரோதமாகப் பேச முடியாது’ என்று சொல்லிவிட்டார். அவர்கள் கெஞ்சியும் முடியவில்லை. அதனால் அவர்கள் அந்த மாநாட்டையே நிறுத்தி விட்டார்கள்.

கிராமங்களில் சாதி ஒழிய வேண்டுமென்றால் கணக்குப் பிள்ளை வேலையைப் பறையனுக்கு கொடுக்க வேண்டும்; மணியம் வேலையைப் பள்ளர், சக்கிலி ஆகியவர்களுக்குக் கொடுக்க வேண்டும். கணக்குப் பிள்ளையாகப் பார்ப்பானும் முதலியும், மணியமாகப் பிள்ளையும், கவுண்டனும் இருப்பதால் தான் அங்கே இருந்து சாதி உரிமை தோன்றுகிறது. ஆனதனாலே ஒரு திட்டம் போட வேண்டும். கணக்குப் பிள்ளை, மணியம் வேலைகளை அப்படி ஒதுக்கி வைக்க வேண்டும். அப்படிச் செய்தால் எப்படிச் சாதி உணர்ச்சி இருக்கும்? அதேமாதி கான்ஸ்டேபிள், எட்கான்ஸ்டேபிள், சப்இன்ஸ்பெக்டர் வேலைகளையும் பறையனுக்கு, பள்ளனுக்கு, சக்கிலிக்கு கொடுக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்தால், சமுதாயத்தில் சாதித் திமிர் ஒழிந்துவிடும்.

அப்படிக்கு இல்லாமல் சாதியே ஒழிய வேண்டுமென்று சொல்லும் வார்த்தையில் அர்த்தமில்லை. அவர்களுக்கு இன்று ஜட்ஜ் வேலை கொடுக்க வில்லையா? ஜில்லா கலெக்டர் வேலை கொடுக்க வில்லையா? மந்திரி வேலை கொடுக்கவில்லையா? அதில் எல்லாம் என்ன ஓட்டை கண்டார்கள்? ஏதோ பொறுக்கித் தின்கிற வேலையாக இருந்தாலும், அவர்கள் பொறுக்குவதை இவர்கள் பொறுக்கித் தின்றுவிட்டுப் போகிறார்கள். இதில் என்ன அதிகத் தவறு? சாதி ஒழிய வேண்டுமென்றால் அரசாங்கம் என்ன செய்தால் ஒழியுமோ, அதைத் துணிச்சலோடு செய்ய வேண்டும். கோயில் பூசாரி வேலையைக்கூட பறையனுக்கே கொடுக்க வேண்டும்; எவனாவது சாமி கும்பிட மாட்டேன் என்றால் கும்பிடாமல் போகட்டுமே.

நம் வளர்ச்சியைப் பெருக்க எது வந்தால் ஆகுமோ அதை எடுத்துக் கொள்ள வேண்டும். நம் வளர்ச்சிக்கு ஏற்றாற்போல் ஒரு மொழி இருக்க வேண்டும். கடவுள் பேசும் மொழி என்று சொன்னால், அதைக் கேட்டு முட்டாளாகவே இருக்கிறானே! இதற்கு என்ன சமாதானம்? நம் உயர்ந்த மேதாவி - புலவன் எல்லாம் இலக்கியப் புராணங்களைப் படித்து முட்டாள்களாகத்தானே இருக்கிறார்கள். ராமாயணப் பிரச்சாரம் செய்கிறார்கள். புலவர்களுக்கு மானம், வெட்கம் கிடையாது. தங்கள் மணிபர்சு நிரம்ப வேண்டும் என்பதுதான். சாதி இருப்புக்குப் புலவர்களே காரணம்.

எந்த இலக்கியத்தை எடுத்துக் கொண்டாலும், கந்தன், ராமன், கிருஷ்ணன் முதலிய கதைகளை எடுத்துக் கொண்டாலும் எதில் சாதி ஒழிந்திருக்கிறது? நாயன்மார்கள், ஆழ்வார்கள், பரமஹம்சர்கள், மகாத்மாக்கள், வெங்காயம் இவர்கள் எல்லாம் இருந்தார்களே! எந்த ஆழ்வார், எந்த நாயன்மார், எந்த மகரிஷி சாதி ஒழிய வேண்டுமென்று சொன்னார்கள்? சாதி ஒழிய வேண்டும் என்று எழுதியதெல்லாம் குப்பைக்குப் போய் விட்டது. சாதி வேண்டும் என்பதெல்லாம் வெளியே தெரிகிறது; பிரச்சாரம் செய்யப்படுகிறது.

ஆகவே, பகுத்தறிவு பலமடைய வேண்டும். ஆராய்ச்சி, அறிவு என்ன சொல்கிறது? அதற்கு என்ன அவசியம்? இந்தத் தலைமுறைக்கு முற்போக்கு அடைவோமா என்று சிந்தித்துப் பார்த்தால், தானாகவே வந்துவிடும். நான் சொன்னதையெல்லாம் நம்பி விடாதீர்கள். இதெல்லாம் ஒரு மனிதனின் கருத்து. இதையெல்லாம் நீங்கள் சிந்திக்க வேண்டும். அறிவுக்குத் தடையில்லாமல் சிந்திக்க வேண்டும். ஏதோ தோன்றியதெல்லாம் சரி என்று சொல்லவில்லை. இதை நீங்கள் சிந்தித்து விஷயங்களை அறிந்து நான் சொல்லியதில் எது சரி? எது தப்பு? என்று ஆராய்ந்து, எது சரியென்று படுகிறதோ அதைப் பற்றிச் சிந்தியுங்கள். அந்த உணர்ச்சி வந்தால்தான் எடுக்கும் காரியம் வெற்றி பெறும்.


வில்லிவாக்கத்தில் நடைபெற்ற சாதி ஒழிப்பு மாநாட்டில் 11.4.1964ல் ஆற்றிய உரை

Sunday 13 November 2011

பார்ப்பன எதிர்ப்பு ஏன்?


பார்ப்பனத் தோழர்களே! நான் மனிதத் தன்மையில் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்லன். தமிழ்நாட்டிலேயே அநேக பார்ப்பனப் பிரமுகர்கள் - பெரியோர்கள் ஆகியோர்களுக்கு அன்பனாகவும், மதிப்புக்குரியவனாகவும் நண்பனாகவும் கூட இருந்து வருகிறேன். சிலர் என்னிடத்தில் அதிக நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள். சமுதாயத் துறையில் பார்ப்பனர்கள் அனுஷ்டிக்கிற உயர்வு, அவர்கள் அனுபவிக்கிற அளவுக்கு மேற்பட்ட விகிதம் - ஆகியவைகளில்தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. இது பார்ப்பனர்களிடம் மாத்திரமல்ல, இந்த நிலையில் உள்ள எல்லோரி டத்திலுமே நான் வெறுப்புக் கொள்கிறேன். இந்நிலை என்னிடத்தில் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம், ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக்கொன்று குறைவு, அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கைக் குணமாக இருக்குமோ, அது போலத்தான் எனக்கும் தோன்றுகிறது.

மற்றும், அந்தத் தாய் தனது மக்களில் உடல் நிலையில் இளைத்துப் போய், வலிவுக்குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு அளிக்கிற போஷணையை விட எப்படி அதிகமான போஷணையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரிசமானமுள்ள குழந் தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ, அது போலத் தான் நான் மற்ற வலுக்குறைவான பின் தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவு தான் நான் பார்ப்பனர்களிடமும், மற்ற வகுப்புகளிடமும் காட்டிக் கொள்ளும் உணர்ச்சி ஆகும்.

உண்மையிலேயே பார்ப்பனர் கள் தங்களை இந்நாட்டு மக்கள் என்றும், இந்நாட்டிலுள்ள மக்கள் யாவரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றும், தாயின் செல்வத்துக்கும், வளப்பத்துக்கும் தாங்கள் எல்லோரும் சரிபங்கு விகிதத்துக்கு உரிமை உடையவர்கள் என்றும் கருதுவார்களேயானால், இந்நாட்டிலே சமுதாயப் போராட்டமும், சமுதாய வெறுப்பும் ஏற்பட வாய்ப்பே இருக்காது.

நான் காங்கிரஸில் இருந்த காலத்தில் - அதாவது எனது நல்ல நடுத்தர வயதான 40-வது வயது காலத்தில் - நான் ஒரு சுயநலமும் எதிர்பாராமல், எதிர்பார்க்க வேண்டிய அவசியமும் இல்லாமல் (உயர்ந்த அந்தஸ்தில்) இருக்கும் போதே, பார்ப்பன சமுதாயத்தில் இரண்டறக் கலந்து, எவ்வளவு தொண்டு செய்திருக்கிறேன் என்பது எல்லாப் பார்ப்பனர்களுக்கும் தெரியும். நான் காங்கிரஸிலிருந்து பிரிந்ததே, பார்ப்பன வெறுப்புணர்ச்சி ஏற்பட்டுத்தான் பிரிந்தேனேயொழிய, மற்றபடி எந்தவிதமான சுயநலம் காரணமாகவும் பிரியவில்லை. பிரிந்த பிறகு பார்ப்பன வெறுப்புணர்ச்சியோடு தொண்டாற்றுகிறேன் என்றால், அத்தொண்டில் எனக்குச் சுயநலம் என்ன இருக்கிறது? அல்லது எனது தொண்டில் நான் வெளிப்படையாகச் சொல்லுகின்ற கருத்தல்லாமல் வேறு உட்கருத்து என்ன இருக்கிறது?

என்னைப் போலவே என் கருத்துகளுக்கெதிரான கொள்கைகளின் மீது உண்மையாகப் பாடுபடுகிற இராஜாஜி அவர்களுக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். எப்படியோ நாங்கள் இரு பிளவாகப் பிளந்து ஒன்றுக் கொன்று ஒட்டமுடியாத அளவு விலகிப் போய்க் கொண்டிருக்கிறோம்.

எனக்கு, "நான் தோல்வியடைய மாட்டேன்; நிதானமாகவாவது வெற்றியடைவேன்" என்கிற நம் பிக்கை உண்டு. இராஜாஜியோ, எப்படியோ யோசனையின்றி ஆத்திரப்பட்டுத் தவறான வழியில் இறங்கிவிட்டார். உண்மையிலேயே வருணாசிரம சாதி முறையைப் புதுப்பித்து நிலைநிறுத்துவது சாத்தியமாகுமா? காந்தி இப்படிச் சொல்லித் தப்பித்துக் கொண்டார் என்றால், அது இன்றைக்கு 35 ஆண்டுகளுக்கு முந்திய காலம். இந்தக் காரணத்தினால் தான், அவர் கொல்லப்பட்டதற்குத் தமிழர்கள் அவ்வளவாக வருந்தவில்லை. இன்றைய இராஜாஜியின் கருத்தை, என்னை அவர் காங்கிரஸில் இழுத்த காலத்தில் சொல்லியிருப்பாரேயானால், அவருக்கு ஏற்பட்ட பெருமையும், பதவி வாய்ப்பும், செல்வ வளர்ச்சியும் ஏற்பட்டு இருக்க முடியுமா? ஆகவே அவருடைய இன்றைய நிலைமை மக்களை ஏய்த்து வளர்த்தவர் என்றுதானே பொருள்? நான் அப்படியொன்றும் ஏய்க்கவில்லையே; உளறவும் இல்லையே?

நான் - எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் - என்னுடைய 10 ஆவது வயதிலிருந்தே நாத்திகன்; சாதி, சமயச் சடங்கு முதலியவற்றில் நம்பிக்கையில்லாதவன். ஒழுக்க சம்பந்தமான காரியங்களில் கூட, மற்றவர்களுக்குத் துன்பமோ, தொல்லையோ தரப்படாது என்பதைத் தவிர, மற்றபடி வேறு காரியங்களில் ஒழுக்கத்துக்கு மதிப்பு கொடுத்தவனும் அல்லன். பணம், காசு, பண்டம் முதலியவைகளில் எனக்குப் பேராசை இருக்கிறது என்றாலும், அவைகளைச் சம்பாதிப்பதில் சாமர்த்தியத்தையாவது காட்டியிருப்பேனேயொழிய, நாணயக் குறைவையோ, நம்பிக்கைத் துரோகத்தையோ காட்டியிருக்க மாட்டேன். யாரையும் ஏமாற்றலாம் என்பதில் நான் சிறிதுகூட முற்பட்டிருக்க மாட்டேன். வியாபாரத் துறையில் பொய் பேசி இருந்தாலும், பொது வாழ்வுத் துறையில் பொய்யையோ, மனதறிந்த மாற்றுக் கருத்தையோ வெளியிட்டிருக்கமாட்டேன்.

இப்படிப்பட்ட நான், எதற்காக ஒரு சமுதாயத்தாரிடம் விரோதமோ, குரோதமோ கொள்ள வேண்டும்? நான் நமது நாட்டையும், சமுதாயத்தையும் ஆங்கில நாட்டுத் தன்மைக்கும், நாகரிகத்திற்கும் கொண்டு வர வேண்டும் என்கிற ஆசையுடையவன். இதற்கு முட்டுக் கட்டையாகப் பார்ப்பன சமுதாயம் இருக்கிறது என்று சரியாகவோ, தப்பாகவோ கருதுகிறேன்.

தாங்கள் அப்படி இல்லையென்பதைப் பார்ப்பனர்கள் காட்டிக் கொள்ள வேண்டாமா? உண்மையிலேயே எனக்கு மாத்திரம் பார்ப்பனர்களுடைய ஆதரவு இருந்திருக்குமானால் நம் நாட்டை எவ்வளவோ முன்னுக்குக் கொண்டு வர என்னால் முடிந்திருக்கும்.

நம் நாடு இன்று அடைந்திருக்கிற இந்தப் போலி சுதந்திரம் என்பது ஒன்றைத் தவிர - மற்ற எல்லா வளர்ச்சிக்கும் பார்ப்பன சமுதாயம் எதிரியாக இருந்திருக்கிறது. இதுமாத்திரம் அல்லாமல், நாட்டில் சமயம், தர்மம், நீதி, அரசியல் என்னும் பேரால் இருந்து வளர்ந்து வரும் எல்லாக் கேடுகளுக்கும் பார்ப்பன சமுதாயம் ஆதரவளித்தே வந்தி ருக்கிறது, வருகிறது. அவர்களின் எதிர்ப்பையும் சமாளித்துத்தான் இந்த நாடும் இந்தச் சமுதாயமும் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இனி வளர்ச்சியை மெதுவாக்கலாமே தவிர, யாராலும் தடுக்க முடியாது என்கிற நிலைமையைக் காண்கிறேன்.

உதவி வேண்டும்போது இந்து; உரிமை கேட்டால் சாமி செத்துடும்!


ஆதிதிராவிடர் மக்களும் மனிதர்களே; ஆயினும் சமூக வாழ்க்கையில் மிருகங்களை விடக் கேவலமாகத்தான் நடத்தப்படுகிறீர்கள். இதை நீங்களே ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகின்றேன். உங்களுள் சிலர் ராவ் பகதூர்களாகவும், ராவ் சாகிப்களாகவும், மோட்டார் வாகனங்களிலும், கோச்சுகளிலும் செல்லத்தக்க பணக்காரர்களாயும் இருக்கலாம். மற்றும் உங்களுள் ஞானமுள்ள அறிவாளிகளும், படிப்பாளிகளும் இருக்கலாம். எவ்வாறிருந்தாலும் அத்தகையவர்களையும் பிறந்த சாதியை ஒட்டித் தாழ்மையாகத்தான் கருதப்பட்டு வருகின்றீர்கள் என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள். அதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது என்று சொல்ல வேண்டும். அது, சாதி வித்தியாசக் கொடுமையே ஆகும்.

ஒவ்வொருவரும், ‘நமக்கென்ன? நம் பிழைப்பிற்கு வழியைப் பார்ப்போம்' என்று இழிவிற்கு இடங்கொடுத்துக் கொண்டு போகும் வரை, சமூகம் ஒரு காலத்திலும் முன்னேறாது. சாதிக் கொடுமைகள் ஒருபோதும் ஒழிய மார்க்கம் ஏற்படாது என்பது திண்ணம். சாதிக் கொடுமைகளை ஒழித்து சமத்துவத்தினை நிலைநாட்டும் பொருட்டுத் தான், சுயமரியாதை இயக்கம் தோன்றியது. சுயமரியாதை இயக்கத்தினால் மக்களுக்கு யோசித்துப் பார்க்கும் தன்மையாவது வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

உலகத்தில் அவன் உயர்ந்தவன் இவன் தாழ்ந்தவன் என்று பந்தயம் போட்டுக் கொண்டு, சாதி வித்தியாசக் கொடுமைகளை நிலைநாட்டி சமூக முன்னேற்றத்துக்கும், விடுதலைக்கும் தடையாயிருக்கும் எந்த சாஸ்திர புராணங்களையும் சுட்டெரிக்க, சுயமரியாதைக்காரர்களாகிய நாங்கள் தயாராய் இருக்கிறோம். மக்கள் முன்னேற்றத்தில் மதம் வந்து தடை செய்தால், அது எந்த மதமாயிருந் தாலும் அதனை ஒழித்துத்தான் ஆகவேண்டும்.

‘கடவுள் உன்னைப் பறையனாய்ப் படைத்தார். சுவாமி என்னைச் சூத்திரனாய்ப் படைத்தார். அவனைப் பார்ப்பனனாய்ப் படைத்தார்’ என்று கடவுள் மேல் பழிபோட்டு, கொடுமைகள் நிலைக்கச் செய்வதை விட்டுக் கொடுத்துக் கொண்டு, அக்கொடுமைகளுக்கு ஆதரவாயும் அக்கிரமங்களுக்கு அனுகூலமாயும் இருக்கும் கடவுளைதான் ஒழிக்க வேண்டும் என்கிறோம். கொடுமை செய்யும் மதத்தையும் சாஸ்திரத்தையும் – கடவுளையும் ஒழிப்பதற்குப் பயந்தோமானால் நாம் நிரந்தரமாய்ப் பறையனாயும், சூத்திரனாயும், தாழ்ந்தவனாயும் பல கொடுமைகளுக்கு உட்பட்டுக் கேவலமாகத்தான் இருக்க வேண்டும். நம்மை இத்தகைய கேவலமான நிலைமைக்குக் கொண்டு வந்த கடவுளும், மதமும் போகவேண்டியதுதான். இதை ஒளித்துப் பேசுவதில் பயனில்லை.

நமது பெரியார்கள் சொல்லியவை கணக்காக வாயளவில் பாராயணம் செய்யப்படுகின்றனவே அன்றி, செய்கையில் அதனால் ஒரு பலனும் ஏற்பட்டதாய்த் தெரியவில்லை. இன்றைக்கும் சாதிக் கொடுமையினால், இவன் இந்தத் தெருவில் வந்தால் தீட்டுப் பட்டுவிடும்; அவன் அந்தத் தெருவில் போனால் சாமி செத்துவிடுமென்ற அநியாயங்கள்தான் தலைவிரித்தாடுகின்றன. ஒருவர், ‘ஆதிதிராவிடர்கள் இழிவுபடுத்தப்படுகின்றனரா? இல்லை இல்லை. நந்தனாரை நாங்கள் அறுபத்து நாயன்மார்களுள் ஒருவராகப் பூசித்து வரவில்லையா?’ என்று வாய் வேதாந்தம் பேசுகின்றார். ‘பறையனாய் இருந்த நந்தனார் திருநாளைப் போவார் ஆகிவிடவில்லையா? அப்படியிருக்க புராணத்தை ஏன் குற்றம் சொல்ல வேண்டும்?’ என்கிறான்.

அந்த அறிவாளி அந்த நந்தனுடைய பின் சந்ததியினராகிய பேரப் பிள்ளைகளை, அந்த திருநாளைப் போவாராகிய நந்தன் இருக்கும் இடத்தைக்கூட ஏன் பார்க்க விடுவதில்லை? அப்படிக் கேட்டால் அந்த நந்தன் வேறு ஜென்மம், இவர்கள் வேறு’ என்று பல புராணப் புரட்டுகள் பேசுகின்றார்கள். ஆலயங்களின் பெயரால் செய்யப்படும் அக்கிரமங்களுக்கும், கொடுமைகளுக்கும் எல்லையில்லை. உதாரணமாய், மதுரை மீனாட்சி கோயிலை எடுத்துக் கொள்வோம்.

அக்கோயிலின் ஒரு கோபுர வாசலுக்குக் குறைந்தது அரை மைலுக்கு அதிகமான தூரமிருக்கும். இவ்வழி சாதாரண ரஸ்தாவைவிட அகன்று வண்டிகள் தாராளமாய்ப் போய் வரத்தக்கதாய் இருக்கின்றது. இவ்வழியாகப் பிற மதத்தினரான முஸ்லிம் மக்களும், கிறித்துவர்களும் மிதியடி போட்டுக் கொண்டு துவஸ்தம்பம் வரையிலும் தாராளமாகப் போக அனுமதிக்கப்படுகிறது. ஆனால், இந்துக்களாகிய நாடார்கள் என்னும் வகுப்பாரும், மற்ற தாழ்த்தப்பட்ட வகுப்பாரும் மட்டிலும், அந்தக் கோயில் மதில் சுவர் அருகில் வந்தாலும் சாமி செத்துப் போகும் என்கிறார்கள். அது சாமியா? போக்கிரித்தனமா? நம்முடைய உதவி வேண்டும்போது, இந்து மதத்தைச் சேர்ந்தவர்களென்று நம்மையும் சேர்த்துப் பேசுவதும், நம் சுதந்திரத்தையும், உரிமையையும் கேட்டால் சாமி செத்துப் போகும் என்பதும் என்ன அயோக்கியத்தனம்?

(3.8.1929 அன்று கண்ணப்பர் வாசக சாலை திறப்பு விழாவில் பெரியார் ஆற்றிய உரை)

Sunday 6 November 2011

திராவிடரும் - தமிழரும்: குழம்பி நிற்போர், தெளிவு பெறுவார்களா?



‘திராவிட’ எதிர்ப்பு என்ற குரல் பெரியாருக்கு எதிராக மீண்டும் சில மேடைகளில் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. பெரியார் ‘திராவிடர்’ என்ற குறிப்புச் சொல்லை பயன்படுத்த நேர்ந்ததை விளக்குகிறார், இக்கட்டுரையில்! கன்னட, மலையாளிகள் சுயமரியாதை உணர்வற்றவர்கள் என்று கூறும் பெரியார், தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயரில்லாததால், தமக்கு நேர்ந்த மனத் துயரையும் சுட்டிக் காட்டுகிறார். பெரியாருக்கு எதிரான விமர்சனங்களை முன் வைப்போருக்கு, இந்த அறிக்கை உரிய பதிலைத் தருகிறது. 

"நாடு பிரிவினைக் கமிட்டி அறிக்கையைப் பார்த்தேன். இந்த அறிக்கை வெளியாவதற்கு முன்பே அறிக்கை பற்றிய சேதிகளின் சுருக்கம் ஒருவாறு எனக்குத் தெரியவந்தது. பொதுவாக ஆந்திரா பிரிந்ததிலிருந்தே நாட்டுப் பிரிவினையில் எனக்குக் கவலை இல்லாமல் போய் விட்டது. பிறகு கன்னடமும், மலையாளமும் (கர்நாடகமும், கேரளாவும்) பிரிவதில் இரண்டு மூன்று காரணங்களால் - சீக்கிரத்தில் பிரிந்தால் தேவலாம் என்கின்ற எண்ணம் தோன்றிவிட்டது. என்ன காரணம் என்றால், ஒன்று - கன்னடியனுக்கும், மலையாளிக்கும் இனப்பற்றோ, இன சுயமரியாதையோ, பகுத்தறிவு உணர்ச்சியோ இல்லை என்பதாகும். எப்படியெனில், அவர்களுக்கு வருணாசிரம வெறுப்பு கிடையாது. சூத்திரன் என்பது பற்றி இழிவோ, வெட்கமோ பெரும்பாலோருக்குக் கிடையாது. மத மூடநம்பிக்கையில் ஊறிவிட்டவர்கள். இரண்டு - அவர்கள் இருவரும் மத்திய ஆட்சி என்னும் வடவர் ஆட்சிக்குத் தங்கள் நாடு அடிமையாக இருப்பது பற்றியும் அவர்களுக்குச் சிறிதும் கவலை இல்லை. ஆகவே, இவ்விரு துறையிலும் நமக்கு எதிர்ப்பான எண்ணங் கொண்டவர்கள் - எதிரிகள் என்றே சொல்லலாம்.
மூன்றாவது - இவர்கள் இருநாட்டவர்களும் பெயரளவில் இருநாட்டவர்கள் ஆனாலும், அளவில் எஞ்சிய சென்னை மாநிலம் என்பதில் 14 மாவட்டங்களில் (ஜில்லாக்களில்) இரண்டே ஜில்லாக்காரர்கள் ஆவார்கள். 1. சென்னை, 2. செங்கல்பட்டு, 3. வட ஆர்க்காடு, 4. சேலம், 5. கோவை, 6. நீலகிரி, 7. திருச்சி, 8. மதுரை, 9. ராமநாதபுரம், 10. திருநெல்வேலி, 11. தஞ்சை 12. தென்னார்க்காடு, 13. தென் கன்னடம், 14. மலபார். அப்படி 14-ல் 7-ல் ஒரு பாகஸ்தர்களாக இருந்து கொண்டு, தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதாரம், உத்யோகம் முதலியவைகளில் 3-ல் 2 பாகத்தை அடைந்து கொண்டு, இவை கலந்து இருப்பதால் நம் நாட்டை தமிழ்நாடு என்றுகூட சொல்வதற்கு இடமில்லாமல் தடுத்து ஆண்டு கொண்டிருக்கிறார்கள். இதை நான் ஆந்திரா பிரிந்தது முதல் சொல்லிக் கொண்டே வந்திருக்கிறேன். ஆதலால், இவர்கள் சீக்கிரம் ஒழியட்டுமென்றே கருதி வந்தேன். அந்தப்படி நல்ல சம்பவமாக பிரிய நேர்ந்து விட்டார்கள். ஆதலால் நான் இந்தப் பிரிவினையை வரவேற்கிறேன்.

இந்தப் பிரிவினை நடப்பதில் சேர்க்கை சம்பந்தமாக ஏதாவது சிறு குறைபாடு இருந்தாலும் அதை, மேற்கண்ட பெரும் நலத்தை முன்னிட்டு கூடுமானவரை ஒத்துப் போகலாம் என்றே எனக்குத் தோன்றிவிட்டது. மற்றும் இந்தப் பிரிவினை முடிந்து தமிழ்நாடு தனி நாடாக ஆகிவிட்டால் - நமது சமய, சமுதாய, தேசிய, சுதந்திர முயற்சிக்கும் அவை சம்பந்தமான கிளர்ச்சிக்கும், புரட்சிக்கும் நமது நாட்டில் எதிர்ப்பு இருக்காதென்றும், இருந்தாலும் அதற்கு பலமும், ஆதரவும் இருக்காதென்றும் கருதுகிறேன். நிற்க, இந்தப் பிரிவினை அமைப்பு ஏற்பாட்டில் எனக்கிருக்கும் சகிக்க முடியாத குறை என்ன இருக்கிறது என்றால், நாட்டினுடையவும், மொழியினுடையவும் பெயர் அடியோடு மறைக்கப்பட்டுப் போய்விடுகிறது என்கின்ற குறைபாட்டு ஆத்திரம்தான்.

நம் நாட்டுக்கு, சமுதாயத்திற்கு, இனத்திற்கு திராவிடம் என்று இருந்த பெயர், அது தமிழல்ல என்பதனாலும், நமக்கு அது ஒரு பொது குறிப்புச் சொல்லும், ஆரிய எதிர்ப்பு உணர்ச்சிச் சொல்லுமாக இருக்கிறதே என்று வலியுறுத்தி வந்தேன். அதை ஆந்திர, கர்நாடக, கேரள நாட்டு மக்கள் அல்லாமல் தமிழ் மக்களில் சிலரும் எதிர்த்தார்கள். பின்னவர்கள் என்ன எண்ணம் கொண்டு எதிர்த்தாலும், அவர்களுக்கு மற்ற மூன்று நாட்டார் ஆதரவு இருந்தால் அதை வலியுறுத்துவதில் எனக்குச் சிறிது சங்கடமிருந்தது. அவர்கள் மூவரும் ஒழிந்த பிறகு அவர்களையும் சேர்த்துக் குறிப்பிடத்தக்க ஒரு சொல் நமக்குத் தேவை இல்லை என்றாலும், திராவிடன் என்று சொல்லை விட்டுவிட்டு, தமிழன் என்று சொல்லியாவது தமிழ் இனத்தைப் பிரிக்கலாம் என்றால், அது வெற்றிகரமாக முடிவதற்கு இல்லாமல் பார்ப்பான் (ஆரியன்) வந்து, நானும் தமிழன் தான் என்று கூறிக் கொண்டு உள்ளே புகுந்து விடுகிறான்.

இந்த சங்கடத்திற்கு - தொல்லைக்கு என்ன செய்வது என்று யோசித்துக் கவலைப்பட்டுக் கொண்டு இருக்கும்போது, இப்போது மற்றொரு மாபெருந் தொல்லை நெஞ்சில் இடிவிழுந்தது போன்று வந்து தோன்றியிருக்கிறது. அதுதான் திராவிடத்தை அல்லது தமிழ்நாட்டை விட்டு ஆந்திரர், கர்நாடகர், மலையாளிகள் பிரிந்து போன பின்புங்கூட, மீதியுள்ள யாருடைய ஆட்சேபணைக்கும் இடமில்லாத தமிழகத்திற்கு, தமிழ்நாடு என்ற பெயர்கூட இருக்கக் கூடாது என்று பார்ப்பானும், வடநாட்டானும் சூழ்ச்சி செய்து, இப்போது அந்தப் பெயரையே மறைத்து ஒழித்து பிரிவினையில் சென்னை நாடு என்று பெயர் கொடுத்திருக்கிறதாகத் தெரிகிறது.

இது சகிக்க முடியாத மாபெரும் அக்கிரமமாகும் - எந்தத் தமிழனும் அவன் எப்படிப்பட்ட தமிழனனாலும் இந்த அக்கிரமத்தை சகித்துக் கொண்டிருக்க மாட்டான் என்றே கருதுகிறேன். அப்படி யார் சகித்துக் கொண்டிருந்தாலும் என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாதென்று சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். இதைத் திருத்த தமிழ்நாட்டு மந்திரிகளையும், சென்னை, டில்லி, சட்டசபை, கீழ் - மேல் சபை அங்கத்தினர்களையும், மிக மிக வணக்கத்தோடு இறைஞ்சி வேண்டிக் கொள்கிறேன். தமிழ், தமிழ்நாடு என்கின்ற பெயர்கூட இந்நாட்டுக்கு, சமுதாயத்திற்கு இருக்க இடமில்லாதபடி எதிரிகள் சூழ்ச்சி செய்து வெற்றி பெற்றுவிட்டார்கள் என்கிற நிலைமை ஏற்பட்டுவிடுமானால், பிறகு என்னுடையவோ, என்னுடைய கழகத்தினுடையவோ, என்னைப் பின்பற்றும் நண்பர்களுடையவோ வாழ்வு வேறு எதற்காக இருக்க வேண்டும்? என்று எனக்குத் தோன்றவில்லை. இந்த காரியம் மாபெரும் அக்கிரமமான காரியம் என்பதோடு, மாபெரும் சூழ்ச்சி மீது செய்யப்பட்ட காரியம் என்றே கருதுகிறேன். “நம்நாடு எது நமது மொழி எது? நமது இனம் எது? என்பதையே மறைத்து விடுவதென்றால், பிறகு தமிழன் எதற்காக உயிர் வாழ வேண்டும்? என்பது எனக்குப் புரியவில்லை. ஆகவே இக்கேடு முளையிலேயே கிள்ளப்பட்டு விடும்படி முயற்சி செய்யும்படியாக எல்லாத் தமிழர்களையும் உண்மையிலேயே வணங்கி வேண்டிக் கொள்கிறேன்."

- பெரியார், ‘விடுதலை’ 12.10.55

Saturday 5 November 2011

விவேகம் வாங்கலையோ, விவேகம்!

கலைஞர் கருணாநிதி - இப்போது கடுமை யான மவுன வலியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித் துள்ளார்.  ‘ஆனால் - இந்த வலி, யாருக்குத் தெரியப் போகிறது; எனக்கு மட்டும் தான் தெரியும்’ என்பதும் அவரது ஆழ்ந்த துயரமாக இருக்கிறது. இப்படி ஒரு மவுன வலியைத் தந்தது யார்?  எதற்காக இந்த வலி?

ஈழத்திலே - ஒரு லட்சம் தமிழர்களைப் படு கொலை செய்து, 3 லட்சம் தமிழர்களை அகதிகளாக்கி, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையே அழித்து, ஒழித்து விட்ட சிங்கள ராணுவத்தின் இனப்படுகொலை ‘தமிழினத் தலைவருக்கு’ இந்த வலியைத் தந்ததா? அல்லது, இந்த இனப் படுகொலைக்கு எல்லா உதவிகளையும் வழங்கி, தனது பழிவாங்கும் படலத்தை முடித்துக் கொண்டுவிட்ட இந்தியப் பார்ப்பனிய ஆட்சியின் துரோகத்தினால் வலி ஏற்பட்டதா? அல்லது, இந்த துரோகத்தைக் கண்டிக்காது - கைகட்டி, வாய் பொத்தி, அவர்களின் கூட்டணி ஆட்சியில் பங்கேற்று இருந்து விட்டோமே என்பதால் ஏற்பட்ட வலியா? அல்லது இனப்படுகொலை உச்ச கட்டத்தில் நடந்தபோதுகூட, சோனியாவை தமிழ் நாட்டுக்கு அழைத்து வந்து, ‘இதோ பாருங்கள்; இவரன்றோ நமது தலைவி’ என்று பெருமை பேசி தமிழ்நாட்டு மக்களிடம் வாக்கு கேட்டோமே அதனால் வந்த வலியா?

அல்லது “இந்திய அரசு போர் நிறுத்தத்தை இலங்கை அரசிடம் வலியுறுத்தித்தான் வருகிறது. இன்னொரு நாட்டின் மீது நாம் ஓரளவுக்கு மேல் வற்புறுத்த முடியுமா?” என்று சோனியாவின் துரோகத்தை மூடி மறைத்ததால் ஏற்பட்ட வலியா? அல்லது தமிழின அழித்தொழிப்பு நடந்து கொண் டிருக்கும் போதே, நான்கு மணி நேர உண்ணா விரதத்தை அரங்கேற்றி, அங்கே போர் நிறுத்தமே வந்துவிட்டது; நான் வீட்டுக்கு கிளம்புகிறேன் என்று, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி விட்டோமே என்பதால் ஏற்பட்ட வலியா? அல்லது ‘பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டார்’ என்ற செய்தியை இலங்கை ராணுவம் அறிவித்து, அது தொலைக் காட்சியில் உலகம் முழுதும் தலைப்பு செய்தியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நேரத்திலே, நகரும் நாற்காலியில், டெல்லியில் மன்மோகன்சிங்கையும், சோனியாவையும் சந்தித்து, குடும்பத்து பிள்ளை களுக்கு அமைச்சர் பதவிக்கு பேரம் பேசிக் கொண்டிருந்து விட்டோமே என்று ‘மனசாட்சி’ உலுக்கியதால் ஏற்பட்ட வலியா?

அதெல்லாம் கிடையவே கிடையாது; இவை யெல்லாம் வெறும் அற்பக் காரணங்கள்; கூட்டணி தர்மத்தின் முன் கால் தூசு மதிப்புக் கூட இதற்கு கிடையாது. பின் எதற்காக முத்தமிழ் அறிஞருக்கு வலி ஏற்பட்டிருக் கிறது? அய்யகோ, விடுதலைப்புலிகளிடம் விவேகம் இல்லாமல் போய் விட்டதே என்ற கவலையில் ஏற்பட்ட வலி இது!“வீரத்தைப் பயன்படுத்திய அளவுக்கு, இது போன்ற போர்முனைகளில், விவேகத்தைப் பயன் படுத்த வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தியதை, என்ன காரணத்தினாலோ, விடுதலைப் புலிகள் அலட்சியப்படுத்தி விட்டார்கள்” அதனால் ஏற்பட்டதே, இந்த வலி என்கிறார். (‘முரசொலி’ நவ. 18)

உண்மைதான்; கலைஞர் கருணாநிதிக்கு இப்படி ஒரு வலியை விடுதலைப் புலிகள் ஏற்படுத்தி யிருக்கவே கூடாது தான்! அவர் தொடர்ந்து முன் வைத்த விவேகமான சிந்தனைகளை ஒழுங்காகக் கேட்டு செயல்படாதது, சாதாரண குற்றமல்ல; பெருங்குற்றம்.

முதலில் விவேகம் என்றால் என்ன என்பதை சரியாக துல்லியமாக ஒழுங்காகப் புரிந்து கொள்ள வேண்டும் தெரியுமா? அதாவது தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி நடத்தும் தேர்தல் அரசியலுக்கு ‘பக்கவாத்தியம்’ வாசிப்பதுதான் விவேகம். அவர் எம்.ஜி.ஆரை, காங்கிரசை எதிர்த்து அரசியல் நடத்தினால், அதற்குத்துணை நிற்க வேண்டும். அவரே காங்கிரசு ஆதரவு அரசியல் நடத்தினால், அதற்கும் ‘சலாம்’ போட வேண்டும். வீரத்தையே மிஞ்சி நிற்கக் கூடியதுதான் விவேகம்! எப்படித் தெரியுமா? ரணில் விக்ரமசிங்கே போன்ற சிங்களர்கள்தான் விடுதலைப் புலிகளைவிட உண்மையான ஈழ விடுதலைப் போராளி என்று ‘வீரத்துடன்’ கூறுவதுதான் - விவேகம்! அந்த ரணில் விக்ரமசிங்கேவுக்கு ‘ஜெ’ போட்டிருக்க வேண்டும் என்று எடுத்துக் கூறுவதுதான் விவேகம்.  “நான் சொன்னதை விடுதலைப்புலிகள் கேட்டார்களா? இல்லை; ஆனால், நான் சொன்னதை ராஜபக்சே கேட்டு, அகதிகள் மீது கருணை காட்டிவிட்டாரே! ஆக, விடுதலைப் புலிகளைவிட, விவேகத்தின் இமயமாக ராஜபக்சே உயர்ந்து நிற்கிறார், உடன் பிறப்பே” என்று, அடுத்து, விவேகமான கடிதங் களைக்கூட தலைவர்களிடமிருந்து எதிர்பார்க்கலாம். பெரியாருக்கு கூட அவ்வளவு விவேகம் போதாது என்றுதான் கூற வேண்டும்.

ராஜகோபாலாச்சாரி பேச்சை பெரியார் ஒழுங்காக விவேகத்துடன் கேட்டிருப்பாரேயானால், அவர் காங்கிரசை விட்டு விலகியிருக்காமல், வசதியான தேசியத் தலைவராகியிருக்கலாம்.  எல்லாம் விவேகப் பற்றாக்குறை தான். அந்தக் காலத்திலிருந்தே இந்த ‘விவேகம்’ தமிழனுக்கு இல்லாமல் போய்த் தொலைந்து விட்டதே என்பதை நினைக்கும் போது மவுன வலி மேலும் அதிகமாவதுதான் மிச்சம்!

இதை எல்லாம் செய்யாமல், எத்தனை வீரம் காட்டினாலும் அவர்கள் உண்மையானத் தமிழர்கள் என்ற வரையறைக்குள் வரவே முடியாது - என்பது மட்டும் உறுதி! உறுதி!!

•                     உலகத்திலே எந்த ஒரு விடுதலை இயக்கத்திலும் இல்லாத ராணுவக் கட்டமைப்பை விடுதலைப் புலிகள் கட்டி எழுப்பியிருக்கலாம்;
•                     தரைப்படை, கப்பல் படை, விமானப் படை - என்ற முப்படைகளையும் கொண்டிருந்த ஒரே, விடுதலை இயக்கம் தமிழன் கண்ட புலிகள் இயக்கம் தான் என்று கூறிக் கொள்ளலாம்;
•                     தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டு, ராணுவ இலக்குகளைத் தகர்ப்பதற்கு  கரும்புலிகளை உருவாக்கி காவியம் படைத்திருக்கலாம்;
•                     ஆண்களுக்கு நிகராக பெண்களின் விடுதலைப் படையணிகள் ஆயுதமேந்தி களமாடியிருக்கலாம்;
•                     தமிழ் ஈழத்தின் விடுதலைச் சமரில் 25000க்கும் மேற்பட்ட வீரர்களும், வீராங்கணைகளும் தங்கள், உயிரை அர்ப்பணித்து மாவீரர்களாகியிருக்கலாம்;
•                     கொரில்லாப் படையாகத் தொடங்கிய இயக்கம் வளர்ச்சிப் பெற்று மரபு வழி ராணுவமாக உருவெடுத்திருக்கலாம்;
•                     உலகின் எந்த ஒரு நாட்டின் பிடியிலும் சிக்கிக் கொள்ளாமல், தங்களுக்கான ஆயுதங்கள் வாங்கவும், தங்களுக்கான நிர்வாகக் கட்ட மைப்புகளை அமைத்துக் கொள்ளவும், தங் களது சொந்தக் கால்களிலேயே நின்றிருக்கலாம்;
•                     நீதி, நிர்வாகங்களோடு தமிழர்களுக்கான தனி ஆட்சியையே தனித்துவமான அடையாளத் தோடு நடத்திக் காட்டியிருக்கலாம்;

- இப்படி எல்லாம் தமிழின உணர்வாளர்கள் வீணாக பெருமை பேச வேண்டாம். இவையெல்லாம் கிடக்கட்டும்; ஒரே ஒரு கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா?

விடுதலைப் புலிகளுக்கு கலைஞர் கருணாநிதியை போன்ற விவேகம் இருந்ததா?

அது தானய்யா கேள்வி!

தங்களைத் தாங்களே குண்டுவைத்து தகர்த்துக் கொண்டு, ராணுவத்தின் நிலைகளை அழித்தது வீரம் என்று கூறுவீர்களேயானால், சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் தலைவர் தூக்கி எறிந்தாரே, அந்த விவேகத்தின் முன் இந்த வீரம் நிற்க முடியுமா?

ஆணைஇறவைப் பிடித்திருக்கலாம்; ஆனால், 1986 ஆம் ஆண்டில் மதுரையில் ‘தமிழினத் தலைவர்’ கலைஞர் கருணாநிதி பங்கேற்ற மாநாட்டில் பிரபாகரனே வராமல் வேறு ஒரு தலைவர் திலகரை அனுப்பி வைத்தாரே, ஈழ விடுதலைப் போராட்டம் பின்னடையத் தொடங்கியதே, அப்போது தானே?

விவேகத்தைப் பற்றி இன்னும் விளக்கம் வேண்டுமா? என்ன செய்வது; புரியாதவர்களுக்கு உணர்த்த வேண்டியிருக்கிறதே? சரி; அதையும் கூறி தொலைக்கிறோம்.

காங்கிரசை எதிர்க்கும் அணியில் இருக்கும் போது ‘இந்திய அமைதிப் படையை’ இலங்கைக்கு அனுப்பக் கூடாது என்று முழங்க வேண்டும். அமைதிப் படையை வரவேற்க முதல்வராக இருந்தாலும் போகமாட்டேன் என்று பேச வேண்டும். ஆனால், காங்கிரசின் ஆதரவு அணியில் இருக்கும்போது ஏற்கனவே கூறியதை அப்படியே முட்டாள்தனமாக திருப்பிக் கூறிக் கொண்டிருக்கக் கூடாது. அப்போது எவ்வளவு ராணுவ உதவிகள் செய்தாலும் எதிர்க்காமல் மவுனத்தோடு சம்மதம் தெரிவிக்க வேண்டும். அது தானய்யா விவேகம்!

அமெரிக்காவும், பிரிட்டனும், சுவிட்சர் லாந்தும், அய்ரோப்பிய ஒன்றியமும், அய்.நா.வின் மனித உரிமை அமைப்புகளும்கூட சிங்கள ராணுவத்தின் தமிழினப் படுகொலைகளைக் கண்டிக்கலாம். வெட்டிப் பயல்கள்! அதற்காக உணர்ச்சி வசப்பட்டு, சிங்கள ராணுவத்தை நாமும் கண்டித்து விடக் கூடாது. அடக்கமாக - அமைதி காக்க வேண்டும். அங்கே தான் விவேகமே அடங்கியிருக்கிறது.

ஒரு பக்கம் மனித சங்கிலி; உண்ணாவிரதம்; போர் நிறுத்தம் என்று பேசிக் கொண்டே மறுபக்கம் மன்மோகன் சிங் ஆட்சியிடம் கை குலுக்கிட வேண்டும். அதற்காக கூட்டணியிலிருந்து விலகி விடக் கூடாது.

அது ...... அது..... விவேகம்! இவை எல்லாவற்றையும் விட மற்றொரு முக்கிய ‘விவேகம்’ இருக்கிறது. அதுதான் முக்கியம். ஈழத்தில் இனப் படுகொலைக்கே காரணம் - விடுதலைப் புலிகள்தான் என்று பழியைத் தூக்கி அவர்கள் தலையிலே போட்டு, மண்ணை வாரித் தூற்றிட வேண்டும்.

சூடு சொரணை உள்ள எவனாவது எதிர்த்தால், ஜெயலலிதா பிரபாகரனை எத்தனை முறை கண்டித்துள்ளார் தெரியுமா? என்ற பட்டியலை எடுத்து, எதிர்ப்பவர்கள் முகத்தில் வீச வேண்டும். அப்படியானால், தாங்களும் ஜெயலலிதா போட்டுத் தந்த பாதையில்தான் பயணம் செய்கிறீர்களா என்று மீண்டும் எவனாவது கேட்டால், ‘போடா, தமிழினத் துரோகி; அரண்மனை நாயே; அடக்கடா வாயை’ என்று மட்டையடி ‘முரசொலி’யில் கொடுத்துவிட வேண்டியது தான்.  இந்த விவேகங்களைப் புரியாமல், விமானப் படை யாவது, கரும்புலியாவது, வெண்டைக்காவாவது; எல்லாமே, வீண்!

எல்லாவற்றுக்கும் மேலாக கடைசியாக ஒரு விவேகமான “அஸ்திரம்” கைவசம் இருக்கிறது. அதை எடுத்து வீசி விட்டால், பீரங்கிகள் கூட அதற்கு முன்னால் நிற்க முடியாது. அதுதான் ‘சகோதர யுத்தம்’ எனும், சக்தி வாய்ந்த ஆயுதம்; அதாவது நன்றாக விளங்குமாறு கூறுவோமே!

வீரபாண்டிய கட்டபொம்மனை பிரிட்டிஷாரி டம் எட்டப்பன் காட்டிக் கொடுத்த கதை தெரியுமல்லவா? அந்த வரலாற்றை கட்டபொம்மன் வீரன் என்றும்; எட்டப்பன் துரோகி என்றும் கூறிக் கொண்டிருக்கக் கூடாது. கட்டபொம்மனுக்கும் எட்டப்பனுக்கும் நடந்த ‘சகோதர யுத்தம்’ என்று இருவரையும் குற்றக்கூண்டில் நிறுத்திவிட வேண்டும். அப்போதுதானே  கட்டபொம்மனை தூக்கில் போட்ட பிரிட்டிஷ் ஆட்சியைக் குற்றத்திலிருந்து காப்பாற்ற முடியும்.

அங்கே தான்...... அங்கே தான்..... விவேகம். இன்னும் ‘சகோதர யுத்தம்’ என்பதற்கு விளக்கம் தேவையா? அப்படியானால், எம்.ஜி.ஆர், நாவலர் நெடுஞ்செழியன்  குடும்பத்தினரிடம் போய் கேட்கலாம்; வைகோவிடம்கூட விசாரிக்கலாம்.

மதுரை தா. கிருட்டிணன் குடும்பத்திடம் கேட்டால், மேலும் தெளிவான விளக்கங்களைப் பெறலாம் அய்யா!

- கோடங்குடி மாரிமுத்து

திங்கள், 30 நவம்பர் 2009
நன்றி - பெரியார் முழக்கம்

பிறவி ஜாதியை ஒழிப்பதற்கு நாம் நாத்திகர்களாகியே தீர வேண்டும்


சமதர்மம் என்கின்ற வார்த்தை ஒரு பொது வார்த்தை. இது, ஆங்கிலத்தில் உள்ள ‘சோஷலிசம்' என்னும் வார்த்தைக்கு தமிழ் மொழி பெயர்ப்பாகக் கையாளப்படுகிறது என்றாலும், சோஷலிசம் என்ற வார்த்தையே தேசத்துக்கு ஒருவிதமான அர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகிறது. அனேகமாக அவ்வார்த்தை அந்தந்த தேச தகுதிக்கும், சவுகரியத்துக்கும், அரசாங்கத்துக்கும் தகுந்த படிதான் பிரயோகிக்கப்படுகின்றது. சில இடங்களில் சட்டதிட்டங்களுக்கு மீறினதாயும் உள்ள பொருள்களுடன் சமதர்மம் என்கின்ற வார்த்தை பிரயோகிக்கப்படுகின்றது. இங்கு சமதர்மம் என்ற வார்த்தைக்கு, சமூகத் துறையிலும், பொருளாதாரத் துறையிலும், மக்கள் உயர்வு தாழ்வு இல்லாமல் சமத்துவமாய் வாழ வேண்டும் என்பதையே சமதர்மம் என்று நான் கருத்துக் கொண்டு, சமதர்மம் என்கின்ற வார்த்தையை இங்கு பிரயோகிக்கின்றேன்.

ஏனெனில், மற்ற நாட்டில் சமூகத் துறையில் நம் நாட்டில் உள்ளது போன்ற பிறவி, உயர்வு, தாழ்வு பேதம் இல்லை. பொருளாதார சம்பந்தமே பெரிதும் மற்ற நாடுகளில் இருக்கின்றன. நம் நாட்டுச் சமுதாய உயர்வு தாழ்வானது, பிறவியிலேயே வகுக்கப்பட்டு, அதை மதத்தோடு பொருத்தி, அதற்கு அரசியல் பாதுகாப்பளிக்கப்பட்டு இருந்து வருகிறது.

அரசியலில் உள்ள பாதுகாப்பை உடைப்பது என்று முதலில் ஆரம்பித்தால், அதற்கு நம் நாட்டு மக்கள், அதுவும் பொருளாதாரத்தால் மிகவும் நொந்து ஏழ்மை நிலையில் இருக்கும் மத நம்பிக்கை கொண்ட பாமர மக்கள் என்பவர்களே சிறிதுகூட ஒப்பமாட்டார்கள் என்பதோடு மாத்திரமல்லாமல், அவர்களே நமக்கு எதிரிகளாயும் இருப்பார்கள். ஏனெனில், பிறவி காரணமாய் உள்ள உயர்வு தாழ்வு மதத்தில் சம்பந்தப்பட்டு, அம்மதம் பாமர மக்கள் ரத்தத்தில் ஊறி இருக்கிறபடியாலும், அதுவே அரசியலுக்கு ஆதாரமாய் இருப்பதாலும், அதை மாற்றாமல், அதை மாற்றுவதற்குத் தகுந்த முயற்சி எடுக்காமல் மேல்நாட்டுச் சமதர்மம் பேசுவது, பாலைவனத்தில் இருந்து சத்தம் போடுவது போலவே ஆகும். முதலில் சமுதாயத்தில் பிறவியின் பேரால் உள்ள பேதங்களை ஒழித்தாக வேண்டும். அதுவே இந்நாட்டு சமதர்மத்துக்கு முதற்படியாகும்.

நிற்க. பொதுவாகவே சமதர்மம் என்பது எந்தக் கருத்தில் இருந்தாலும், சமுதாயம் முக்கியமானாலும், அதற்குக் கடவுள் உணர்ச்சி, மத நம்பிக்கை என்பவற்றின் எதிராகவே இருந்து வருகின்றன. சர்வதேச மதவாதிகளும் பெரிதும் கடவுள் உணர்ச்சியும், மத நம்பிக்கையையும், சமதர்மத்திற்கு விரோதமானது என்றுதான் சொல்லி இருக்கிறார்கள். ஆதலால், எந்த சமதர்மவாதிக்கும் இதைப் பொறுத்தவரையில் அபிப்பிராய பேதம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இந்த வேலை அபிப்பிராய பேதமில்லாமல் நடந்துதான் தீரும்.

நம் நாட்டிற்கு இன்று முதலில் ஜாதி பேதங்கள் ஒழிந்து, மக்கள் யாவரும் பிறவியில் சமம் என்பதான சமதர்ம முயற்சியே முதலில் செய்ய வேண்டியதாயிற்று. ஜாதி, பேதம், பிரிவு ஆகியவை ஒழிந்தால்தான் சமூக வாழ்க்கையில் சமதர்மமாய் மனிதன் வாழ முடியும். பொருளாதார பேதத்துக்கும், சமூக ஜாதி பேத முறைதான் பெரிதும் காரணமாய் காவலாய் இருந்து வந்திருக்கிறது. இன்றும் பெருவாரியான மக்களுக்கு ஜாதி பேதமே, பொருளாதார சமதர்ம முறையை நினைக்கக்கூட இடம் தராமல் அடக்கி வருகின்றதுடன் பொருளாதார பேதத்துக்கு இடமளித்தும் வருகிறது.

எந்தக் காரணத்தைக் கொண்டாவது இன்று நாட்டிலுள்ள பொருள்களையெல்லாம் எல்லா மக்களுக்கும் சமமாக்கி வைத்துவிட்டாலும், நமது ஜாதி முறைகள் மறுபடியும் வெகுசீக்கிரத்தில் பழைய நிலைமையைத்தான் உண்டு பண்ணிவிடும். மற்ற நாட்டு மக்களுக்கு பொருளாதார சமதர்ம உணர்ச்சி ஏற்பட்ட காரணம் எல்லாம், அவர்களின் பிறவியில் கீழ்மேல் நிலை இருக்கும்படியான ஜாதி பேதம் இல்லாததேயாகும். நம் மக்களுக்கு வெறும் பொருளாதார சமதர்மம் சுலபத்தில் புரியவே புரியாது. ஜாதி பேதம் ஒழிப்பது என்ற சமதர்மத்தைச் சொல்லி, பொருளாதார சமதர்மம் சொன்னால்தான் உண்மையாகக் கஷ்டப்படுகின்ற மக்களுக்கு உணர்ச்சி உண்டாக்க முடிகின்றது.

ஆகவே, சமூக சமதர்மம் ஏற்பட ஆசைப்படுகிற நாம், ஜாதி பேதத்தை ஒழிக்க வேண்டும் என்று கருதுகிற நாம், பொருளாதார சமதர்மத்துக்காகவே, பிறவி ஜாதியை ஒழிக்க வேண்டியிருக்கிறது என்றும், பிறவி ஜாதியை ஒழிப்பதற்கு அதற்கு ஆதாரமான மதத்தைப் பற்றியோ, மதத்தில் உள்ள ஏதாவது ஒரு கொள்கையைப் பற்றியோ பேசினாலும், அதை ஒழிக்க வேண்டும் என்று சொன்னாலும், அதை நாத்திகம் என்று சொல்லி விடுகிறார்கள். அதனால்தான் சமதர்மம் பேசுகின்ற யாரும் கண்டிப்பாய் நாத்திகர்களாகியே தீரவேண்டி இருக்கிறது.


(குடிஅரசு - 18.6.1949)

Friday 4 November 2011

காஞ்சிக்கு தனி ஆட்சி!

காஞ்சி ஜெயேந்திரனும் கருவறை புகழ் அர்ச்சகர் தேவநாதனும் நீதிமன்றம் வந்தபோது சந்தித்துப் பேசுகிறார்கள்

ஜெயேந்திரன் : அம்பி, தேவநாதா, நம்ம காஞ்சிபுரத்து பெருமையை பரப்புறதுல நீயும், என்னோட சேர்ந்துட்டே போலிருக்கே!

தேவநாதன் : எல்லாம், தாங்கள் காட்டிய வழி சுவாமி! ஜெயேந்திரன் : போடா, அபிஷ்டு. நானாவது மடத்துக்குள்ளே அப்படி இப்படின்னு இருந்தேன். நீ கர்ப்பக கிரகத்துக்குள்ளேயே திருவிளை யாடல்களைத் தொடங்கிட்டியே, அபார துணிச்சல்டா, நோக்கு!

தேவநாதன் : இதுக்கு என்ன சாமி, துணிச்சல் வேண்டியிருக்கு. நம்ம பகவான்கள் செய்யாததையா நாம் செய்துட்டோம். பகவான்கள் கற்பழிப்பு நடத்தினா, ‘புனிதம்’ங்கிறான்! நாம் செய்தால் கிரிமினல் குற்றம்ங்கிறான். சே... பகவானோட நெருங்கி இருக்குற, நமக்கு, இந்த அற்ப உரிமைகள் கூட கிடையாதா?

ஜெயேந்திரன் : விவரம் தெரியாமப் பேசாதடா அம்பி! பகவானே, இப்ப நேரில் வந்து அந்த திருவிளையாடல்களை நடத்துனா, சட்டத்துலே யிருந்து, எவனும் தப்பிக்க முடியாது தெரியுமோன்னோ?

தேவநாதன் : பகவான் தப்ப முடியாதுங்கிறது, சரிதான்! ஆனா, நீர் தப்பிட்டேளே! கோயிலுக் குள்ளேயே சங்கர்ராமன் கொலை செய்யப்பட்ட வழக்கில் உங்களுக்கு எதிரான சாட்சிகள் எல்லாம், பல்டி அடிக்க ஆரம்பிச்சுட்டாளே! தி.மு.க. ஆட்சியிலே, காத்து உங்க பக்கம் வீசுறதே!

ஜெயேந்திரன் : அம்பி, அதுக்கெல்லாம் கொடுத்து வைக்கனும்டா! இப்போ நேக்கு எதிரான சாட்சியெல்லாம் பல்டி அடிச்சுட்டாளே; இதை எவனாவது எதிர்த்து வாயை திறக்குறானா பாத்தியா? ஒரு பயலும் பேச மாட்டான். சுப்ரமணியசாமியி லிருந்து சோ ராமசாமி வரைக்கும் எல்லோரும் வாயை மூடிட்டா... என்னைக் கைது செஞ்ச அந்த அம்மாளே, இப்போ, எனக்கு எதிரா வாய திறக்குறதுல்லேயே! போலீசு எல்லாம்கூட இப்ப என் பக்கம் சாஞ்சிடுச்சு! ‘தினமணி’, ‘தினமலர்’ எல்லாம் மீண்டும் நம்மள புகழத் தொடங்கிட்டானே! கவனிச்சியோ!

தேவநாதன்: ம்... கவனிச்சுண்டுதான் இருக்கேன்.... தினகரன் எரிப்பு வழக்குல கூட குற்றவாளி எல்லாம் தப்பிச்சுட்டா! போலீசே பல்டி அடிச்சுடுத்து. அதேபோல உங்களுக்கும் அடிக்குது யோகம்!

ஜெயேந்திரன் : அம்பி, தினகரன் எரிப்பு வழக்குல, போலீசே பல்டி அடிச்சத துக்ளக் சோ கண்டிச்சு எழுதிட்டான். ஆனால் என் விஷயத்துல கண்டுக்கவே இல்லயே கவனிச்சியோ?

தேவநாதன் : அது, எப்படி சாமி கவனிக்காம இருப்பேன். நான் கர்ப்பகிரகத்துக்குள்ளே ‘கசமுசா’ செய்தேனே; அதை நம்ம ராமகோபாலன்னோ, துக்ளக் ராமசாமியோ, சு.சாமியோ கண்டுக்கலியே? இந்து விரோதின்னு எவனாவது சுண்டு விரலை அசைத்தானா? இல்லையே, சாமி! இப்படி நமக்குள்ள ஒரு நல்ல ‘அன்டர்ஸ்டான்டிங்’ இருக்கற துனாலதான் நம்ம, வண்டி ஓடிகிட்டு இருக்கு. ஆனா லும், நீங்க தப்பிச்சுட்ட மாதிரி, நான் தப்பிக்கிற துக்கும், ஏதேனும் வழி செய்ய மாட்டேளா சாமி.

ஜெயேந்திரன்: மடையா, செல்போன ஆத்துலேயே விட்டுட்டு வராம - ஏண்டா கர்ப்ப கிரகத்துக்குள்ளே எடுத்துட்டு போன! பூணூலை மட்டும் மாட்டிட்டு வந்தா போதாதோ? அது தானே வினையா வந்து ‘முடிஞ்சுருச்சு’! சமஸ்கிருத மந்திரம் மட்டும் ஒலிக்க வேண்டிய இடத்துல, ‘செல்போன்’ அபசுரம் கேட்கலாமோ!

தேவநாதன்: நீங்க சொல்றது சரிதான் சாமி! ஆனா ‘பார்ட்டிகளை’ அவசரமாக அழைக் கிறதுக்கு, செல்போன் வேணுமே சாமி. பக்தர்கள், கூட்டம் இல்லாத நேரம்பார்த்து, பகவான் மட்டும் தனியா இருக்குற நேரத்துல அவசரமா ‘பார்ட்டிகள’ அழைக்கணும்னா, பகவானையா அனுப்ப முடியும்? அவன்தான் போவானா? அவன் இருக்கிற இடத்துல கல்லா தானே உட்கார்ந்திருப்பான்! விவரம் தெரியாம பேசறேளே! அவசரத்துக்கு செல்போன் உதவுமே தவிர, ஆண்டவனா உதவுவான்?

ஜெயேந்திரன்: அந்த ஆண்டவன்தான் எதுக்கும் உதவ மாட்டான்ங்குறது நமக்குத் தெரியாதா? நன்னாவே தெரியும். அதனால் தானே, நீயும், நானும் மடத்தையும் கருவறையையும் நமக்கு வசதியா பயன்படுத்த முடியுது! ஆனா, காலம் கெட்டுப் போச்சுடா! இனி நம்ம இஷ்டம்போல விளையாட முடியாது போலிருக்கு.
தேவநாதன் : என்ன சொல்றேள்?

ஜெயேந்திரன் : கர்ப்பகிரகம், மடத்துக்குள்ளே எல்லாம், வீடியோ கேமராவைப் பொருத்திட்டான்னு வச்சுக்கோ, நம்ம கதை அம்போ தான்!

தேவநாதன்: அந்த அளவுக்கு ஏமாந்துருவோமா? அதெல்லாம் சாஸ்திரத்துக்கு விரோதம்னு நம்ம, இராமகோபாலன், துக்ளக், ராமசாமி எல்லாம் கூச்சல் போட வச்சுட்டா போச்சு!

ஜெயேந்திரன்: ஆமாண்டா, அம்பி! கவர்ன்மென்ட்ல அப்போ பயந்துடுவான்ல. இந்த “சாஸ்திர விரோதம்”, “ஆச்சார விரோதம்”, “பழக்க வழக்க விரோதம்” என்கிறதையெல்லாம் நாம இறுக்கிப் பிடிச்சுக்கனும். இல்லாட்டா, நம்ம பாடு அவ்வளவுதான்!

தேவநாதன்: அதாவது, இந்த “விரோதங்”களை யெல்லாம் செய்யறதுக்கு பூதேவராகிய நமக்கு மட்டுமே உரிமை. மற்றவர்களுக்கு இல்லேங்கிறேள். அப்படித்தானே?

ஜெயேந்திரன் : இதையெல்லாம் நோக்கு விளக்கி விலாவாரியாக சொல்லணுமாடா? புரிஞ்சுக்க வேண்டியது தான்.

தேவநாதன்: புரிஞ்சுகிட்டேன் சாமி. அப்படியே என்னை வழக்கிலேயிருந்து காப்பாத்துறதுக்கு ஏதாவது வழிசொல்லுங்களேன்.

ஜெயேந்திரன் : யோசனை இருக்குடா, அம்பி! காஞ்சிபுரத்தை - தமிழ்நாட்டிலேயிருந்து தனியா பிரிச்சு, நம்ம தலைமையிலே தனி ஆட்சியக் கொண்டு வந்துட்டோம்னா, ஒரு பயலும் நம்மை அசைச்சுக்க முடியாதுடா. அதைத்தான் ஆலோசனை பண்ணிகிட்டு இருக்கேன்.

தேவநாதன் : சபாஷ்! சரியான யோசனை சாமி. அதுல, என்னையும் சேர்த்துக்கோங்க! காஞ்சிபுரத்த நாம் எல்லாம் சேர்ந்து “புண்ணிய” பூமியா மாத்திடுவோம்! அப்ப, எந்த கூட்டம், எந்த போலீசு வந்துடுவான், பார்த்துடுவோம்!

- கோடாங்குடி மாரிமுத்து
நன்றி பெரியார் முழக்கம்

Thursday 3 November 2011

கொலைக்கார கிருஷ்ணன் - குத்தூசி குருசாமி

 
ஆரியப் பார்ப்பனர்களால் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் எல்லாப் பண்டிகைகளிலும் மிகவும் ஆபாசமானதும் தமிழர்களுக்கு மானக் கேடானதுமான பண்டிகையே தீபாவளி.

தமிழனை ஆரியன் ஆடக்கியாண்டதை நினைவுபடுத்துவதாகுமிது. இதற்கான கற்பனைக் கதையில் முக்கிய பாத்திரமாக வரும் ஆரியக் கடவுளின் கொலைகாரத் தன்மையை மக்கள் நன்கு படித்து உணர வேண்டும்.

தீபாவளிப் பண்டிகையின் தத்துவம் மகாவிஷ்ணுவான கடவுள் கிருஷ்ணன் என்கிற அவதாரமெடுத்து உலகுக்கு வந்து, நரகாசுரன் என்கின்ற ஓர் அசுரனைக் கொன்றான் என்பதாகும்.

நரகாசூரன் என்பவன் ஒரு திராவிடன், ஆரியக் கொள்கைகளை எதிர்த்தவன். ஆகையால்தான் அவனை ஆரியப் பாதுகாவலனான கிருஷ்ணன் தன் மனைவி சத்தியபாமா உதவியுடன் கொன்றான்.

ஆனால், இந்தக் கடவுள் அவதாரமென்கிற கிருஷ்ணன் யார்? எப்படிப்பட்டவன் என்பதைத் தமிழர்கள், திராவிடர்கள் உணர வேண்டாமா?

கிருஷ்ணன் அற்ப சொற்ப ஆசாமியல்ல. சாட்சாத் மகா விஷ்ணுவின் அவதாரமாகும்.

ஏசுநாதர் கிருஸ்துவ மதத்தை உண்டாக்கியவர், இவரைப் பற்றிய கதை என்ன சொல்கிறது? இவர் தம்மைத் தாமே வருத்திக் கொண்டார். எதிரிகளின் தாக்குதலுக்கும் தூற்றுதலுக்கும் ஆளானார். இறுதியில் சிலுவையில் அடித்துக் கொல்லப்பட்டார்.

இதுபோல் முகமது நபியும் பல தியாகங்களுக்கு உள்ளானார். எதிரிகளின் கல்லடிக்கும் சொல்லடிக்கும் ஆளானார் என்பதுதான் அவரைப் பற்றிய கதை.

ஆனால், இன்று விழா கொண்டாடப்படுகின்ற கிருஷ்ணøன்ப பற்றிய கதை என்ன சொல்கிறது? குழந்தைப் பருவத்தில் பூதனை, சகடாசூரன், திருணாவர்த்தன் முதலியவர்களைக் கொன்றான்.

கன்றுருவத்துடன் வந்த வற்சாசுரனை விளாமரத்தில் மோதிக் கொன்றான்.

கொக்கு உருவத்துடன் வந்த பகாசுரன் வாயை பிளந்து கொன்றான்.

மலைப்பாம்பு உருவில் வந்த அகாசுரனின் வாயில் புகுந்து கொன்றான்.

குதிரையுருக் கொண்டு வந்த கேசியைக் கொன்றான்.

வியாமுரசுரனின் கழுத்தை நெரித்துக் கொன்றான்.

கம்சனின் பட்டத்து யானையின் கொம்பை முறித்துக் கொன்று அதன் பாகனையும் கொன்றான்.

மற்போருக்கு வந்த சானூரனைக் கொன்றான்.

சபலன், கோசனை ஆகிய இருவரையும் காலால் மோதிக் கொன்றான்.

தன் மாமனாகிய கம்சனைப் படுக்கையிலிருந்து இழுத்துத் தள்ளி கொன்றான்.

பஞ்சகன் என்பவனைக் கடலில் சென்று கொன்றான்.

சராசந்தனின் சேனைகளையெல்லாம் கொன்றான்.

முராசுரனையும் அவனது குமாரர்களையும் கொன்றான்.

நரகாசுரனைக் கொன்றான்.

வாசுதேவனுக்குத் துணையாக வந்த பவுண்டரகனையும் சுதட்சணையையும் கொன்றான்.

சாளுவனைக் கொன்றான்.

சிசுபாலனைக் கொன்றான்.

துரியோதனனின் சிங்காதனத்தின் கீழிருந்த அரக்கர்களைக் கொன்றான்!

இவ்வளவுதான் இவனது படுகொலைகள் என்று கருதாதீர்கள்! இன்னும் பலவுள்ளன இங்கு எழுத இடமில்லை.

இப்பேர்ப்பட்ட கொலைக்காரனைத்தான் சிலர் போற்றுகிறார்கள். “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நான நன்னயஞ் செய்து விடல்'' என்ற உயர கருத்து பரவியிருந்த தமிழகத்தில் கொலைக்காரக் கிருஷ்ணன் கதையைப் புகுத்தி விட்டார்கள் தமிழகத்தில் புகுந்த அன்னியர்.

கிருஷ்ணன் கொலைக்காரன் மட்டுமா? இல்லை! கற்பிற்கு அணிகலன்(?) நல்லொழுக்கத்தின் சிகரம் (?) எப்படியெனில் – குளித்துக் கொண்டிருந்த பெண்களுடைய சேலைகளையும் ரவிக்கைகளையும் தூக்கிக் கொண்டு போய் மரத்தின் மேல் ஏறிக் கொண்டான்; நிர்வாணமாகத் தண்ணீரில் நின்ற அப்பெண்கள் தங்கள் இரு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி கும்பிட்டால்தான் தருவேன் என்று கூறி அவ்விதமே செய்ய வைத்துக் கண் குளிரப் பார்த்தான்!

ராதை, ருக்மணி, சத்தியபாமை, சாம்பவதி, காளிந்தி, மித்திர, விந்தை, சத்தியவதி, பத்திரி, லட்சுமணை, நப்பின்னை, சோபை, பிரனை, சாந்தி, க்ஷமை ஆகிய பெண்களை மணந்து கொண்டான்.

பிறகு சில்லரையாக நரகாசூரன் பட்டணத்திலிருந்து கொண்டு வந்து 16,000 பெண்களையும் மணந்து கொண்டான்.

இவர்களும் போதாமல் பகதத்தனின் நகரத்திற்குச் சென்று அங்கு சிறையிலிருந்த 1160 இராசக் கன்னிகைகளையும் மணந்து கொண்டான்.

இவர்களைத் தவிர பல்லாயிரக்கணக்கான கோபிகாஸ்தீரிகளுடன் லீலைகள் புரிந்தான்.

கொலையும் விபசாரமும் மட்டுமல்ல, கொலை செய்யவும் தூண்டினான் கீதையின் மூலமாக!

கொலை செய்யப்பட்டவர்களெல்லாம் அசுரர்கள் (திராவிடர்கள்) என்று கூறலாம். அப்படினால் அக்கிரகாரத்தார் மட்டுந்தானே இவனைப் புகழ வேண்டும்? மற்றவர்கள் புகழலாமா? கொண்டாடலாமா?

கடவுள் தன்மைக்குப் பொருந்துமா?

உண்மையான கடவுள் தனக்கு எதிரியான அசுரனைப் படைப்பானேன்? அதன் பிறகு அவனைக் கொல்வதற்காக அவதாரமெடுப்பானேன்? இது கடவுள் தன்மைக்கு அவரின் சர்வ வல்லமைக்குத் தயாபர குணத்துக்குச் சிறிதாவது பொருந்துமா?

பிற மதக்காரர்களும் மதமற்ற பகுத்தறிவாளர்களும் விஞ்ஞானிகளும், பேரறிஞர்களும் இப்பேர்ப்பட்ட ஆபாசக் கற்பனைக் கதையை ஏற்றுக் கொள்வார்களா? காறித் துப்ப மாட்டார்களா?

கடவுள் என்றால் – கடவுள் அவதாரம் என்றால் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அல்லவா இருக்க வேண்டும்? ஒருவனுக்கு இரண்டு மனைவிகளே இருக்கக் கூடாது என்று சட்டமிருக்கும் போது, கண்டவளையெல்லாம் தன் மனைவியாக்கிக் கொண்டவனை மானமுள்ள பெண்கள் கும்பிடலாமா? அவன் சம்பந்தப்பட்ட தீபாவளியைக் கொண்டாடலாமா?

ஆத்திரப்படாமல் சிறிது பொறுமையாக ஆலோசித்துப் பாருங்கள். பக்தர்களே ஆபாசக் கடவுள்களை ஒழித்துத் தலைமுழுகுங்கள்!

இம்மாதிரிக் கடவுள்களைக் கண்டு வெட்கப்பட்டுத் தானே லட்சக்கணக்கான மக்கள் பிற மதங்களைத் தழுவியிருக்கிறார்கள்.

ஆகவே மானமுள்ள பகுத்தறிவுள்ள தமிழர்கள் திராவிடர்கள் கொலைக்காரக் கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட தீபாவளியைக் கொண்டலாமா? கண்டிப்பாய்க் கூடாது.

சிந்தித்துப் பாருங்கள் தமிழர்களே! தமிழர்களே!

"விடுதலை' 27.10.1958

“ஆவி” விஸ்கி, சோடா குடிக்கும் ‘ஆவி’யை படம் பிடிக்கலாம் என்பது மோசடி!

 
‘ஆவி நம்பிக்கை மனநோய் தொடர்பானது’ என்று ஒரு மனநல மருத்துவர் என்ற முறையில் தான் சந்தித்த மனநோயாளிகள் பற்றி டாக்டர் கோவூர் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அதில் இது ஒரு‘ஆவி’யின் கதை

இறந்த மனைவியருடன் பேசியவர்கள்...!

“ஆவிகள் விஸ்கி, சோடா குடிக்கும்.”

“ஆவிகளுக்குப் பாலுணர்வு உண்டு.”

“ஆவி உலகில் உணவு, நீர், மது அனைத்தும் உண்டு.”

“மிருகங்களுக்கு ஆவியாக மாறும் சக்தி யில்லை.”

“ஆவிகள் ஆங்கிலத்தில்தான் பேசும்.”

திரு. கோவூர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் திருமதி தோமஸின் ஆவி இப்படித்தான் பதில் கூறியது. ஆனால், திருமதி தோமஸின் ஆவியை கோவூர் கண்களால் பார்க்கவில்லை. அவரது கணவர் திரு.தோமஸ் மூலமாகத்தான் இந்தப் பதில்கள் கோவூருக்குக் கிடைத்தன.

கால் நூற்றாண்டுக்கு முன்பு யாழ்ப்பாண மாவட்ட நீதிபதியாக இருந்த திரு. ராஜ்பக்ஸ் என்பவர் தனது மனைவியின் ஆவியுடன் பேசியதாகவும், பல கேள்விகளைக் கேட்டதாகவும் அந்த இளம் மனைவி வாழ்ந்தபோது கூறாத பல முக்கிய விஷயங்களை ஆவியின் உருவில் தன்னிடம் கூறியதாகவும், கோவூரிடம் கூறியதை அடுத்தே கோவூர் தோமஸின் மனைவியின் ஆவியுடன் பேச வேண்டிய சூழ்நிலை உருவாகியது.

யாழ்ப்பாணம் கொன்வன்ட் வீதியில் திரு.ராஜபக்ஸ் வசித்து வந்தார். அதே வீதியில்தான் கோவூரும் வசித்து வந்தார். கோவூர் அப்போது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார். கோவூரும், ராஜபக்ஸூவும் நெருங்கிய நண்பர்கள்.

ஒரு நாள், திரு. ராஜபக்ஸூவின் இளம் மனைவி திடீரெனக் காலமானார். கணவன், மனைவியென்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று உலகுக்கு எடுத்துக் காட்டுவதுபோல் அந்நியோன்யமாக வாழ்ந் தவர்கள் ராஜபக்ஸ் தம்பதிகள். திரு. ராஜபக்ஸ் தன் மனைவி மீது அசைக்க முடியாத பாசத்தை வைத்திருந்தார். இவ்வளவு அன்புடன் வாழ்ந்த தன் மனைவி திடீரென இறந்தது திரு.ராஜபக்ஸூவை நிலை குலையச் செய்தது. மனைவியின் பிரிவு காரணமாக வாழ்க்கையில் எவ்விதப் பிடிப்புமின்றி வாழ முற்பட்டார். திடீரென தன் மனைவி உயிருடன் இருப்பது போன்றே அவருக்குத் தோன்றும். சில சமயங்களில் மனைவியின் ஆவியாவது தன்னை வந்து சந்திக்காதா என்ற ஆசை அவருக்கு உதிக்கும். இந்த நப்பாசை அவரிடம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. இதனால் ஆவிகள் பற்றி அறிந்து கொள்ள அவர் பெரிதும் ஆர்வம் கொண்டார். இந்த ஆர்வம் நாட்கள் செல்ல செல்ல அதிகரித்தது. யாழ்ப்பாணம் பொது வாசக சாலையில் இருந்த ‘ஆவிகள்’ சம்பந்தமான சகல புத்தகங்களையும் வாசிக்க ஆரம்பித்தார். குறிப்பாக “லண்டன் ஆவிகள் ஆராய்ச்சிக் கழகம்” வெளியிட்ட புகத்தங்களை அவர் வாசிக்கத் தவறுவதில்லை.

திருவாளர்கள் மயர்ஸ், சோல், சிஜ்விங், பொட்மோர், ஒலிவர் லொட்ஜ்,அலெக்சாண்டர் கெனன், கொனன் டொயல், ஹரிபிறைஸ்போன்றவர்கள் ஆவிகள் உலவுகின்றன என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார்கள். இவர்களின் புத்தகங்களையெல்லாம் வாசித்த திரு. ராஜபக்ஸ், தனது நம்பிக்கையை மேலும் வலுப்படுத்திக் கொண்டார். இந்த நிலையில் 1941 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதி காலை திரு.ராஜபக்ஸ், மூச்சு வாங்க, கோவூரின் இல்லத்துக்கு ஓடி வந்தார். “ஏபிரஹாம்... ஏபிரஹாம்” என் கூவியபடி ஓடி வந்த அவரின் முகத்தில் குதூகலமும், அதே நேரத்தில் கலவரமும் குடி கொண்டிருந்தன.

“ஏபிரஹாம்... கடைசியில் என் மனைவியைச் சந்தித்து விட்டேன்”என்று கூவியபடி கோவூரின் வீட்டுக்குள் நுழைந்தார். பலமுறை அதையே சொல்லிக் கொண்டிருந்தார்.

திரு. ராஜபக்ஸூவின் பேச்சு, கோவூரைப் பெரும் ஆச்சரியத்துக்கும்,அதிர்ச்சிக்கும் ஆளாக்கியது. இச் சமயத்தில் திரு.ராஜபக்ஸ்பொறுப்புள்ள ஒரு நீதிபதிபோல் அல்லாமல், ஒரு சிறு குழந்தை போலவே தோன்றினார்.

“ஏபிஹாம்! என் மனைவி என்னிடம் ஒரு மணி நேரம் பேசினாள். தனது மரணத்துக்கு முன்பு சொல்லத் தவறிய பல விஷயங்களைச் சொன்னாள். இன்னொரு முறைகூட அவளைச் சந்திக்கப் போகிறேன். ‘அப்பாய்ன்ட்மென்ட்’ வைத்துவிட்டு வந்தேன்” இப்படி பரபரப்புடன் கூறினார் ராஜ்பக்ஸ்.

‘என்னையும் அப்போது அழைத்துச் செல்லு கிறீர்களா?’ என்று கோவூர் அவரிடம்கேட்டார்.

“இல்லை. இல்லை ஏபிரஹாம், அடுத்த முறை அவளிடம் நான் பல இரகசியங்களைக் கேட்கப் போகிறேன். என்னுடன் அப்போது யாரும் இருக்கக் கூடாது” என்று கெஞ்சுவதுபோல் பதிலளித்தார் திரு.ராஜபக்ஸ்.

இதைக் கூறி முடித்ததும் அவரின் கண்கள் கலங்கியிருந்தன. மிகவும் களைப்படைந்தும் காணப்பட்டார். இருவரும் காப்பியை அருந்தினர். இதன் பின் ராஜபக்ஸ் சிறிது தெளிவு பெற்றிருந்தார். சிறிது நேரம் மவுனம் நிலவியது. திரு. ராஜபக்ஸ் பேச்சை ஆரம்பித்தார்.

“ஏபிரஹாம்... எனது நண்பர் தோமஸின் உதவியால் தான் எனது மனைவியுடன் பேசினேன். திரு. தோமஸ்தான் ‘மீடியமாக’ இருந்து என்னுடன் என் அன்பு மனைவி பேச வழி செய்து கொடுத்தார்.”

இப்படிக் கூறிய திரு. ராஜபக்ஸ், தாம் தோமஸை சந்தித்த கதையையும், தன் மனைவியுடன் பேசியதையும் விவரமாக விளக்கினார்.

இதையெல்லாம் புன்சிரிப்பை உதிர்த்தபடியே கேட்டுக் கொண்டிருந்த கோவூர், திரு. ராஜ பக்ஸ்வுக்கு ‘மீடியமாக’ இருந்த திரு. தோமஸின் விலாசத்தைப் பெற்றுக் கொண்டார். திரு. ராஜபக்ஸ் விடைபெற்றுச் சென்ற சிறிது நேரத்தில் தம் கைப்படவே தோமஸூக்கு கடிதம் எழுதினார் கோவூர். ஒரு வாரம் கடந்தது, தோமஸிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

ஒரு நாள் காலை திடீரெனக் கோவூரின் இல்லத்துக்குள் நுழைந்தார் தோமஸ். இச்சமயம் கோவூர், வரவேற்பறையில் அமர்ந்து புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தார். வீட்டுக்குள் நுழைந்து கோவூரைப் பார்த்ததுதான் தாமதம், “அதோ உங்கள் தலைக்குப் பின்னால் தெய்வீகமான ஒரு மஞ்சள் சக்கரம் சுழலுவதைக் காண்கிறேன்”என்றார் தோமஸ்.

தோமஸை வரவேற்ற கோவூர், அவரை அமரச் செய்தார். தெய்வீக சக்கரம் பற்றிக் கூறியபடியே அமர்ந்த தோமஸ், தொடர்ந்து தம்மைப் பற்றிய விவரங்களைச் சொல்ல முற்பட்டார். திரு. தோமஸ் தீவிர மதப்பற்றுள்ள ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர். தீவிரமான மத நம்பிக்கை யுடன் பெற்றோரால் வளர்க்கப்பட்டார். யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல கிறிஸ்தவ கல்லூரியில் கல்வி பயின்றார். கிறிஸ்தவ இயக்க மொன்றினால் சிறந்த மாணவனாகத் தெரிவு செய்யப்பட்டார்.

இளம் பிராயத்தை எட்டியதும் திரு. தோமஸ் மத குருவாகிவிட விரும்பினார். ஆனால், அவரின் மற்றொரு சகோதரர் மதகுருவாகிவிடவே, திரு. தோமஸ் குடும்ப வாழ்வில் ஈடுபட்டார்.

மனைவியோடு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருந்தபோது தான்1926 ஆம் ஆண்டு அவரது மனைவி திடீரென இறந்தாள். மனைவி இறந்துவிட்டாலும், அவளின் நினைவு அகலவே இல்லை. காலப்போக்கில் இரண்டாவது திருமணமும் செய்தார். அப்பொழுதும் முதல் மனைவியின் நினைவுதான் ஆட்சி புரிந்து கொண் டிருந்தது.

தோமஸூம் ஆவிகள் பற்றி நம்பிக்கைக் கொண்டவர். ஆவிகள் பற்றிய நூற்றுக்கணக்கான நூல்களைப் படித்திருந்தார். தனது முதல் மனைவியின் ஆவியும் வாழ்வதாக நம்பினார்.

1934 ஆம் ஆண்டு தான், தனது மனைவியின் ஆவியுடன் முதல்முறையாகத் தொடர்பு கொண் டதாகத் தெரிவித்தார். அதன் பிறகு அடிக்கடி அந்த ஆவியுடன் தொடர்பு கொள்ளலானார்.

இச்சமயம் லண்டனில் ஆவிகளைப் பட மெடுக்கும் பல அற்புத நிபுணர்கள் இருந்தனர். அங்கு தன் மாமனாரினதும், மனைவியினதும் அடை யாளங்களை எழுதி, அவர்களுடைய ஆவிகளின் படங்களை வரவழைத்தார்.

மாமனாரின் படத்தில் தோமஸூக்கு சந்தேகம் இருந்தது. ஆனாலும் மனைவியினுடைய ஆவியின் படம் சரியாகவே இருந்ததாகவே நம்பினார். நினைத்த பொழுதெல்லாம் தன் மனைவியின் ஆவியைச் சந்தித்துப் பேசும் சக்தி அவருக்கு ஏற்பட்டது.

தனது மகளின் திருமணத்தைக்கூட ஆவியைச் சந்தித்துப் பேசிய பின்னரே ஏற்பாடு செய்தார்.

தனது மனைவியோடு மட்டுமன்றி வேறு சில ஆவிகளுடன் பேச‘மீடியமாக’ அவரே இருந்தார். இதில் ஒன்றுதான் திரு. ராஜபக்ஸ்,தனது மனைவி யின் ஆவியுடன் பேச ‘மீடியாமாக’ இருந்தது.

இப்படி தன் கதையைச் சொல்லி முடித்த தோமஸ், லண்டனிலிருந்து வரவழைத்த ஆவிகளின் படங்களையும் காட்டினார். படங்களில், மாமனாரின் ஆவி சூட்டுடன் தொப்பி அணிந்திருந்தது. மனைவியின் ஆவி வெள்ளைக் கவுன் அணிந்திருந்தது. தோமஸ் பேசி முடித்த பின்னர், அவர் காட்டிய ஆவியின் படங்களை ஆராய்ந்த கோவூர், “உங்கள் மனைவியின் ஆவியுடன் இப்பொழுது தொடர்பு கொள்ள முடியுமா?” என்று கேட்டார்

“முடியும்! ஒரு தனி அறைக்குள் அழைத்துச் செல்லுங்கள்” என்றார் தோமஸ்

உடனே தோமஸூடன் எழுந்த கோவூர், அவரைத் தனது வாசக சாலைக்குள்அழைத்துச் சென்றார். அங்குச் சென்றதும் ஒரு நாற்காலியில் அமர்ந்து “ஜன்னல்களை எல்லாம் மூடுங்கள்” என்றார் தோமஸ்.

ஜன்னல் அனைத்தும் மூடப்பட்டன. தனக்கு நேரெதிராக இருந்த சுவரை உற்று நோக்கினார் தோமஸ். சில வினாடிகள் கழிந்தன.

“அதோ! அதோ!! அவள் நிற்கிறாள். என்னைப் பார்க்கிறாள்” என்று கூறினார் தோமஸ்.

அவர் காண்பித்த திசையைக் கோவூர் நோக்கிய போது, அங்கே தனது தந்தையின் படம் தொங்குவதைக் கண்டு, அதனருகில் நெருங்கி அதைத் தொட்டுப் பார்க்க முயன்றார்.

“தொடாதீர்கள்... தொடாதீர்கள்” என்று குரல் எழுப்பிய தோமஸ், “ஆவிகளைப் புனிதமில்லாத மனிதர்கள் தொடக் கூடாது” என்று அதட்டி எச்சரித்தார்.

“அங்கே சுவருமில்லை; படமுமில்லை. நீல நிறமான ஆகாயம் தெரிகிறது. வெள்ளை உடை உடுத்தி என் அழகிய மனைவி நிற்கிறாள்” என்ற பதில் வந்தது. அடுத்த வினாடி, “என் மனைவியின் ஆவி, கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தயாராகிவிட்டது” என்று கூறினார்.

உடனே கோவூர் கேள்விகளைக் கேட்டார்.

கோவூர் கேட்ட சில கேள்விகளுக்குத்தான், “ஆவிகள் விஸ்கி, சோடா குடிக்கும், ஆவிகளுக்குப் பாலுணர்வு உண்டு” என்பன போன்ற பதில்களை தோமஸ் மூலமாக அவர் மனைவியின் ஆவி கூறியது.

இந்தச் சுவையான பதில்கள் அனைத்தும் தோமஸின் வாயிலாகத்தான் வந்தன.

கோவூர் மேலும் கேட்ட சில கேள்விகளுக்கு கிடைத்த பதில்கள்:

• கிறிஸ்தவ மதம்தான் உண்மையானது.

• மறுபிறவி என்பதே இல்லை.

• தோமஸ் இறந்தவுடன், நான் ஒரு ஆவியை மணந்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபடப் போகிறேன்.

• வேறு சில கிரகங்களிலும் மனிதர்கள் வாழ் கின்றனர்.



கோவூரின் கேள்விகள் முடிந்த சிறிது நேரத்தில் தோமஸ்சுயநினைவுக்கு வந்தார். இதனையடுத்து இருவருமே அந்த அறையவிட்டு வெளி அறைக்கு வந்தனர். ஆவியுடன் பேசுவதற்கு முன்னும் - பேசும் போதும், பேசிய பின்னும் தோமஸூக்கு ஏற்படும் அனுபவங்கள் பற்றிக் கேட்டார் கோவூர்.

“மனைவியுடன் தொடர்பு கொள்ள நினைத்து, சிந்தனையை அதில் மட்டும் செலுத்தி வெறித்துப் பார்க்க ஆரம்பிப்பேன். அப்பொழுது நான் நோக்குமிடத்தில் வர்ணஜாலம் மிக்க புதுமையான ஒரு ஒளி பிரகாசிக்கும், ஆவி அங்கே தோன்றும், அந்த ஆவியுடன் பேச, அதன் முழு உருவமும் தெரிய வேண்டிய அவசியமில்லை. ஆவியுடன் பேசி முடிந்ததும் மிகக் களைப்பாகவே இருக்கும். தண்ணீர்த் தாகமெடுக்கும். உடனே நித்திரை வரும்.” இப்படித் தனது அனுபவங்களைக் கூறிய தோமஸ், கண்களை மூடியவாறு ஓய்வெடுத்தார்.

தோமஸின் நடவடிக்கைகளையும், அவரது கதையையும்,அனுபவங்களையும் நன்கு கண்டு, கேட்டு அறிந்த பின்னர் திரு. ராஜபக்ஸ், திரு. தோமஸ் போன்றவர்கள் எவ்வாறு ஆவியுடன் பேசுகிறார்கள் என்பது கோவூருக்கு விளங்கியது.

“ராஜபக்ஸ், தோமஸ் இருவருமே தங்கள் மனைவிமார் மீது தீராத ஆசை வைத்திருந்தனர். ஆனால் இருவருமே இளம் வயதிலேயே மனைவியரைஇழந்துவிட்டனர். அவர்கள்மீது கொண்டிருந்த அளவுக்கு மீறிய அன்பாகப்பட்டது. தங்கள் மனைவியர் ஆவிகளாகவாவது வந்து தங்களுடன் பேச மாட்டார்களா என்ற நப்பாசை பிறந்தது.”

“இதற்கு உறுதுணையாக ஆவிகள் பற்றிய புத்தகங்கள் அவர்களுக்கு நம்பிக்கையூட்டின.”

“தோமஸ் தீவிரமான மதப்பற்றுள்ள குடும்பத்தில் பிறந்தவராதலால்,அவர் தெய்வீகமென்பது உண்மையெனத் தீவிரமாக நம்பினார்.”

“எந்தவொரு பொருளையுமே நீங்கள் உற்று நோக்கியபடி இருந்தால் அந்த இடத்தில் உங்கள் கண்களுக்கு அபூர்வமான ஒளி தென்படும்.”

“அதற்குமேல் எதையும் நீங்கள் கற்பனை செய்தால் நீங்கள் நினைப்பதே உங்கள் கண்முன் நிற்பது போன்று தெரியும்.”

“தோமஸூக்கு, தாடி வளர்த்த எனது தந்தையின் படம் அவர் மனைவியாகக் காட்சியளித்ததும் இப்படித்தான்.”

“மனிதரின் கண்களுக்கும், மூளை நரம்புகளுக்கும் எப்பொழுதுமே ஒரு தொடர்பு உண்டு. கண்கள் பார்ப்பதை மூளை சிந்திக்கும். அதுவும் அந்தக் கண்களுக்குத் தெரிய நீங்கள் பார்க்கும் பொருள்களின் மீது ஒளி விழ வேண்டும்.”

“இப்படித்தான் தோமஸ் தனது மனைவியைக் கற்பனையில் கண்டார்.”

“புளியைச் சாப்பிடுவதாக நினைத்துக் கொண் டால், உங்கள் வாயும்,முகமும் உங்களை அறியாமலே சுருங்கிப் பலவித முக பாவங்களையும் ஏற்படுத்தும்.”

“இதே போன்றுதான் தோமஸ் தனது இறந்த மனைவியை நினைத்துக் கொண்டு, எனது கேள்வி களுக்கு மனைவியின் ஆவி போன்று பதிலளித்தார். அந்த ஆவி, எனது கேள்விகளுக்கு அளித்த பதில் களை ஆராய்ந்தால் பல உண்மைகள் புலப்படும்.”

“தோமஸ் ஒரு தீவிர கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவரென்பதால்தான், கிறிஸ்தவ மதம் உண்மையானதென்றும்,மிருகங்களுக்கு ஆவியாக உலவும் சக்தி இல்லையென்றும் சொன்னார்.”

“அவர் ஒரு இந்துவாக இருந்திருந்தால் இந்து மதம்தான் சிறந்ததென்றும், மிருகங்களுக்கும் ஆவி யாகும் சக்தி கிடைக்குமென்றும் கூறியிருப்பார்.”

“இதிலிருந்து இவை மதப்பற்றால் கூறப்பட்ட பதில்கள் என்பது தெளிவாகிறது.”

“ஆவிகளின் உலகில் உணவு, நீர், மது உண்டென்றார். உணவு உண்ண முடியுமானால், அது பூவுலகப் பிறவியாகத்தான் இருக்க வேண்டுமே தவிர ஆவியாக இருக்க முடியாது.”

“ஆவிகளுக்குப் பாலுணர்வும், உடலமைப்பும் உண்டென்று கூறியதை அவதானிக்கும்போது, மனிதன் அடக்கம் அல்லது தகனம் செய்யப்பட்ட தும் அவனது உடல் அழிந்து விடுகிறது. பிறகு எப்படி உடலமைப்பும், பாலுணர்வும் இருக்க முடியும்?”

“அதிகமான கிறிஸ்தவர்கள் அக்காலத்தில் பேசியது ஆங்கிலம். அதனால்தான் ஆவிகளின் மொழி ஆங்கிலமென்றும், உடை, சூட்,கவுண் என்றும் பதில் கூறப்பட்டது.”

“இந்தப் பதில்களெல்லாம் கிறிஸ்தவ மதத்தின் நம்பிக்கையே.”

“ஆவியுலகில் விஸ்கியும், சோடாவும் உண் டென்றால், கசிப்பும் இருக்க வேண்டும்? தோமஸ் கிறிஸ்தவர்களின் அன்றைய முக்கிய மதுபானமான விஸ்கியைத்தான் ஞாபகமாகக் கொண்டு, அந்தப் பதிலைக் கூறியிருக்கிறார்.”

“தோமஸ் எனக்குக் காட்டிய அவரின் மாமனார் மனைவி ஆகியோரின் ஆவிகளின் புகைப்படங்கள் எப்படி எடுக்கப்பட்டன என்பது பெரும் கேள்வியாக எழலாம்!”

“லண்டனில் இப்படியொரு ஏமாற்றும் கோஷ்டியே பிழைப்பு நடத்தியது. சில காலத்திற்குப் பின்பு இக்கோஷ்டி போலீசாரால் பிடிக்கப்பட்டு பல உண்மைகள் வெளியாகின.”

“இக்கோஷ்டியின் தலைவர்கள் எனக் கருதப்பட்ட திரு.பிரட்பலோ,மேஜர் ரம்ளிங் ரோஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.”

“ஒரு வேடிக்கை என்னவென்றால், வேட்டி, சட்டை அணிந்து வாழ்ந்த தோமஸின் தந்தையின் ஆவி, சூட்டும் தொப்பியும் அணிந்திருந்ததுதான்.”

“தோமஸூக்கு ‘மோனா மேனியாக்’ என்ற ஒருவித மனோ வியாதியே பீடித்திருந்தது.”

“மதத்தின் மீது கொண்ட நம்பிக்கையால், அவர் ஆவிகள் பற்றிய மூட நம்பிக்கையில் ஈடுபட்டார். ஆவிகள் பற்றிய புத்தகங்களும் அவருக்கு நம்பிக்கையூட்டின.”

லண்டன் ‘ஆவிகள் ஆராய்ச்சிச் சங்கம்’ அன்று வெளியிட்ட புத்தகங்களும் அவரது நம்பிக்கையை வலுப்படுத்தின.

“இன்று இதே சங்கம் வெளியிட்டுள்ள திருவாளர்கள்; அந்தனி புளு,கட்னர், சைமன்ஸ், வட்வட்ரூஷ், ஹென்ஸல், ஸ்பென்ஸர் பிரவுண் ஆகியோரின் புத்தகங்களை இவர் படித்திருந்தால் இப்படியான மூடநம்பிக்கைகளுக்கு இடமே கொடுத்திருக்க மாட்டார்.”

“தோமஸின் மூடநம்பிக்கைகளுக்கு ஒரு பொறுப்புள்ள நீதிபதியும் அடிமைப்பட்டிருக்க மாட்டார்.”

“என்னைப் பார்த்தவுடன் எனது தலைக்குப் பின்னால் தெய்வீக சக்கரம் சுழல்கிறதென்று கூறியதிலிருந்து அவர் ஒரு ‘மோனோ மேனியாக்’ என்பதை நான் உணர்ந்து கொண்ட பின்பே, அவரை ஆராய்ந்து இந்த உண்மைகளை அறிந்தேன்.”

இப்படி விளக்கமளித்த கோவூர், பின்பு ஹிப்னாடிஸ் முறையில் தோமஸ், ராஜபக்ஸ் ஆகியோரின் உள்ளுணர்வுகளுக்கு இந்த மூட நம்பிக்கைகள் பற்றி எடுத்துக் கூறி, அவர்கள் இருவரும் இந்த மனோ வியாதியிலிருந்து விடுபட வழிசெய்தார்.

ஆணுக்கு ஆண் கூடிப் பிறந்தவன் அய்யப்பன்


அய்யப்பன் சீசன் துவங்கி விட்டது. பக்தர்கள் என்ற போர்வையில் ஒவ்வொரு நகரத்தையும் அசுத்தம் செய்து சுகாதரக்கேடு உண்டாக்கி அந்தந்த பகுதி மக்களுக்கு நோயைப் பரப்பி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க மாலையைப் போட்டுக்கொண்டு ஒழுக்கமாக இருப்பதாகச் சொல்லிக் கொண்டு அனைத்து ஒழுக்ககேடுகளும் செய்து வருகிறனர். பொது இடங்களில் புகைபிடிக்ககூடாது என்ற சட்டம் இருக்கிறது ஆனால் அதை சிறிதும் பொருட்படுத்தாமல் வாயில் பீடியுடன் திரிகின்றனர். இரண்டு சக்கர வாகனங்களில் செல்லும் போது கூட புகையை ஊதித் தள்ளி மக்களுக்கு இன்னல் விளைவிக்கின்றனர். இது போல் பல உள்ளன. எழுதிக்கொண்டே போகலாம்.நிற்க.

இப்போது அய்யப்பன் கதைக்கு வருவோம்.

அய்யப்பன் எப்படி பிறந்தான்? ஏன் பிறந்தான்? அய்யப்பன் கதையின் கரு என்ன? என்பது பற்றி பார்ப்போம்.

"அய்யப்பன் கதை

பத்மாசூரன் என்கிற அசுரன், சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தான். சிவன் அவன் முன் தோன்றி 'உனக்கு என்ன வரம் வேண்டும்? கேள்' என்றான் அதற்கு பத்மாசூரன் 'நான் யார் தலையில் கை வைக்கின்றேனோ அவன் எரிந்து சாம்பலாகும்படியாக வரம் அளித்தருள வேண்டும்' என்றானாம்.

சிவனும் 'அவ்வளவுதானே! அளித்தேன் போ!' என்று கூறலானான். பத்மாசூரனுக்கு ஓர் சந்தேகம் உண்டாயிற்று. சிவன் அளித்த வரமானது உண்மைதானா? பலிக்குமா?
என்று சோதனை செய்ய எண்ணினான். உடனே அவன் சிவன் தலையிலேயே கை வைத்துச் சோதிக்க முற்பட்டான். சிவன் பயந்து போய் பல இடங் களுக்கும் ஓடினான்.
பத்மாசூரன் விட்டபாடில்லை. பிறகு விஷ்ணு விடம் அலைந்து சென்று, தாம் முட்டாள்தனமாக அளித்த வரத்தினைப் பற்றியும், பத்மாசூரன் தன் தலையில் கை வைக்க விரட்டி வருவது பற்றியும் கூறி, அதற்குப் பரிகாரம் தேடித் தன்னைக் காக்கும்படி வேண்டினான்.

அதற்கு விஷ்ணுவானவன் 'அதுதானா பிரமாதம் இதோ ஒரு நொடிப் பொழுதில் அவனை ஒழித்துவிட்டு வருகின்றேன்.'என்று கூறி அழகிய மோகினிப் பெண் உருவம் எடுத்து பத்மாசூரன் முன் சென்று நின்றான். அந்த மோகினிப்பெண்ணைக் கண்ட அசுரன் அவளை கட்டி அணைக்க எத்தனித்தான். அதற்கு அவள் நான் உனக்கு உடன்படுகின்றேன். ஆனால் ஒரு நிபந்தனை. நீ மிகவும் அழுக்காய் இருக்கின்றாய். எனவே நீ அருகில் உள்ள நீர் நிலையில் இறங்கிக் குளித்து விட்டுவா என்று கூறினாள்.

அதன்படியே பத்மாசூரன் தண்ணீரில் இறங்கிக் குளிக்கும் போது தம் தலையில் கைவைத்துத் தேய்த்துத் தண்ணீரில் மூழ்கி எழ முற்பட்டான். அவனது கை அவனது தலையில் பட்டவுடனே அவன் தலை எரிந்து மடியலானான். விஷ்ணு சிவனிடம் சென்று பயத்தை விட்டு வெளியே வாருங்கள் நான் அவனைப் பெண் வேடம் எடுத்துக் கொன்று விட்டு வந்துவிட்டேன் என்று கூறினான்.

அதற்கு சிவன், 'எப்படிப் பெண்வேடம் போட்டு சென்றாய்? அந்த வேடத்தை எனக்குக் கொஞ்சம் காட்டுங்கள்' என்றான் விஷ்ணு தான் போட்டுச் சென்ற பெண் வேடத்தைப் போட்டுக்காட்டினான் . அதனைக் கண்ட சிவனானவன், விஷ்ணுவாகிய மோகினிமீது மையல் கொண்டு கட்டியணைக்க முற்பட்டான்.
ஒருவருக்கு ஒருவர் துரத்திக் கொண்டு ஓட இருவருக்கும் ஆடைகள் நெகிழ்ந்துவிட இருவரும் கலவி செய்தனர். உடனே ஓர் குழந்தை பிறந்தது.
அதனைச் சிவன் கையில் தாங்கினானாம். அந்தக் குழந்தை கையில் பிறந்ததனால், கையனார் என்று அழைக்கப்பட்டு, பிறகு அய்யனார் என்றும், அய்யப்பன் என்றும் ஆனது.

இப்படி அரிக்கும் சிவனுக்கும் பிறந்த பிள்ளையாதலால், அய்யனார் அல்லது அய்யப்பனை ஹரிஹரன் என்றும் அழைப்பதுண்டு. எனவே இந்தப் பிறப்புப் பற்றிக் கூறப்படும் கதையோ நல்லறிவும். நல்லொழுக்கமும் உடையோர் கேட்கவும் மனம்கூட வெட்கப்படவேண்டியதாம். இயற்கை விபரீத நடத்தை வர்ணனை, ஆணுக்கு ஆண் கூடிப் பிறந்தவனாம் இவன் . இதை இயற்கை ஒப்புமா? மற்ற எந்த ஜீவராசிகளும் இப்படி நடப்பதில்லையே.

தந்தைபெரியார் -நூல்:- "இந்துமதப்பண்டிகைகள்" பக்கம்: 41-43