Saturday 29 October 2011

மதம் மக்களுக்குச் சோறு போடுமா?- பெருந்தலைவர் காமராசர்




நீங்க பூசையெல்லாம் செய்யறதில்லையா? இது கேள்வி.

அதெல்லாம் வேலை வெட்டி இல்லாதவன் பண்ற துன்னேன். அடுத்த வேளைக்குச் சோறு இல்லாதவன் கடன் வாங்கி, ஷேத்ராடனம் போறான். எந்தக் கடவுள் இவன் கிட்டேவந்து, நீ ஏண்டா, என்னைப் பார்க்க வரலேன்னு கோவிச்சுக்கிட்டான். அபிஷேகம் பண்றதுக் குக் குடம் குடமா பாலை வாங்கி வீணாக்குகிறானே மடையன். அந்தப் பாலை நாலுப் பிள்ளைக் கிட்டே கொடுத்தா அதுங்க வலிமையா வளருமில்லியா?

பதினெட்டு வருஷமா மலைக்குப் போறேன்னு பெருமையா சொல்றான். அதுக்காக அவனுக்கு பி.எச்டி யா கொடுக்குறாங்க.பதினெட்டு வருஷமா கடன்காரனா இருக்கான்னு அர்த்தம்! பக்தி வேஷம் போடுறது நாலு பேர் பாராட்டணுமிங்கறத்துக்காகத்தான்.ஒரு அனாதை இல்லத்துக்கோ, முதியோர் இல்லத்துக்கோ கொடுக்கலா மில்லையா?

ஊருக்கு நூறு சாமி; வேளைக்கு நூறு பூசைன்னா, மனுஷன் என்னைக்கு உருப்படறது? நாட்டிலே வேலை யில்லாத் திண்டாட்டம், வறுமை, சுகாதாரக்கேடு, ஏற்றத் தாழ்வு இத்தனையும் வச்சுக்கிட்டு, பூசை என்ன வேண்டிக் கிடக்கு பூசைன்னேன்? ஆயிரக்கணக்கான இந்த சாமி கள் இதப் பாத்துக்கிட்டு ஏன் பேசாமே இருக்குன்னேன்?

லட்சுமி, சரஸ்வதி, பார்வதி, முருகன், விநாயகர், பராசக்தியெல்லாம் ஓவியர்கள் வரைஞ்சு வச்ச சித்திரங்கள். அதையெல்லாம் ஆண்டவன்னு நம்ம ஆளு கும்பிட ஆரம்பிச்சுட்டான்.
 
சுடலைமாடன், காத்தவராயன் பேர்ல அந்தந்த வட்டாரத்துல பிரபலமானஆசாமி இருந்திருப்பான். அவன் செத்ததும் கடவுளாக்கிட்டான் நம்ம ஆளு. கடவுள் கண்ணை உருட்டிக்கிட்டு, நாக்கை நீட்டிக்கிட்டுதான் இருப்பாரா? அரேபியாவிலே இருக்கிறவன் அல்லான் னான். செருசலத்திலே இருக்கிறவன் கர்த்தர்ன்னான், இதிலேயும் சில பேர் மேரியை கும்பிடாதேன்னான். கிறித்துவ மதத்திலேயே ஏழெட்டு டெனாமினேஷன் உண்டாக்கிட்டான்.
 
மத்திய ஆசியாவிலிருந்து வந்தவன் அக்னி பகவான், ருத்ரன், வாயு பகவான்னு நூறு சாமிகளைச் சொன்னான். நம்மநாட்டு பூர்வீகக் குடிமக்களான திராவிடர்கள் காத்தவராயன், கழுவடையான், முனியன், வீரன்னு கும்பிட்டான். எந்தக் கடவுள் இவன் கிட்டே வந்து என் பேரு இதுதான்னு சொன்னது?

மதம் மக்களுக்குச் சோறு போடுமா? அவன் கஷ்டங்களைப் போக்குமா? இந்தக் குறைஞ்சபட்ச அறிவு கூட வேணாமா மனுஷனுக்கு?

உலகத்திலே இருக்கிற ஒவ்வொரு மதமும் நான் பெரிசா நீ பெரிசான்னு மோதிக்கிட்டு ரத்தம் சிந்துதே! நாட்டுக்கு நாடு யுத்தமே வருதே! இப்படியெல்லாம் அடிச்சிக்கிட்டு சாகச் சொல்லி எந்த ஆண்டவன் சொன்னான்?
தீபாவளி கொண்டாடுவதில்லை . . .
நரகாசூரன் கதையை வச்சுத் தீபாவளி கொண்டாடுறான். நவராத்திரிக் கதையைச் செல்லி சரசுவதி பூசை பண்றான். விக்னேசுவரனைச் சொல்லி விநாயகருக்குக் கொழுக்கட்டை படைக்கிறான். இது மாதிரி செய்து பாமர மக்களைத் தம் மதத்தின் பிடிக்குள்ளே வச்சுப் பொழப்பு நடத்துறான்.

நான் தீபாவளி கொண்டாடுனதுமில்லே. எண்ணைத் தேய்ச்சுக் குளிச்சதுமில்லே. புதுசு கட்டனதுமில்லே. பொங்கல் மட்டும்தான் நம்மக் கலாச்சாரத்தோடு ஒட்டுன விழான்னேன்.

நான் தீ மிதி, பால் காவடி அப்படீன்னு போனதில்லே. மனிதனைச் சிந்திக்காத எந்த விஷயமும் தேவையில்லே. பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனாட்சிக் குத் தங்கத் தாலி வச்சிப் படைக்கலாமா? ஏழை வீட்டுப் பெண்ணுக்கு ஒரு தோடு, மூக்குத்திக்குக்கூட வழியில்லே. இவன் லட்சக்கணக்கான ரூவாயிலே வைர ஒட்டியாணம் செய்து காளியாத்தா இடுப்புக்குக் கட்டி விடுறான்.
 
திருப்பதி உண்டியலில் கருப்புப் பணம்!
கறுப்புப் பணம் வச்சிருக்கிறவன் திருப்பதி உண்டிய லில்லே கொண்டு போய்க் கொட்டுறான். அந்தக் காசிலே ரோடு போட்டுக் கொடுக்கலாம். ரெண்டு பள்ளிக் கூடம் கட்டிக் கொடுக்கலாம். அதையெல்லாம் செய்ய மாட்டான். சாமிக்குத்தம் வந்திடுமுன்னு பயந்துகிட்டுச் செய்வான்.

மதம் மனிதனைப் பயமுறுத்தி வைக்கிறதேத் தவிர தன்னம்பிக்கையை வளர்த்திருக்கா? படிச்சவனே அப்படித் தான் இருக்கான்னேன்!

கோயில், பிரார்த்தனை, நேர்த்திக் கடன் கழிக்கிறது. இதிலே உங்களுக்கு அனுபவமுண்டா? என்று தலை வரிடம் கேட்டதற்கு, பெருந் தலைவர் சொன்ன பதில் வியக்க வைக்கிறது - விலா நோக சிரிக்க வைக்கிறது.

சின்னப்பையனா இருந்தப்போ பத்ரகாளியம்மன் திருவிழா நடக்கும். அந்தச் சிலைக்கு நாடாரே பூசை செய்வார். அதிலே நான் கலந்துகிட்டிருக்கேன். 1930க்கு முன்னாலே சஞ்சீவிரெட்டியோடு திருப்பதி மலைக்குப் போனேன். அவர் மொட்டை போட்டுக்கிட்டார். என்னையும் போட்டுக்கச் சொன்னார். நானும் போட்டுக்கிட்டேன். அப்புறம்தான் நினைச்சுப் பார்த்தேன். இதெல்லாம் வேலையத்த வேலைன்னு தோணுச்சு. போயும் போயும் தலை முடியைத்தானா கடவுள் கேட்கிறாரு. எல்லாம் செட்டப் அப்படின்னு சிந்திச்சேன். விட்டுட்டேன் . . . தலையிலே இருக்கிற முடியை எல்லாரும் கொடுப்பான். ஆனா, ஆண்டவனுக்காக தலையையே கேட்டாக் கொடுப்பானா?

இரட்டைச் சகோதரிகளாக மறுபிறவி எடுத்த இரண்டு சகோதரிகள் - டாக்டர் கோவூர்

நம்ப முடியாத அதிசயக் கதைகளை வெளியிடுவது என்றால் உலகம் முழுவதிலும் உள்ள ஞாயிறு மலர்களுக்கு அலாதி ஆர்வம். ஆவிகள், மறுபிறப்புகள், பேயோட்டல்கள், அருள்வாக்குகள் முதலியவை பற்றிய ‘‘நடந்த நிகழ்ச்சிகள்’’ அவற்றுக்கு ருசிகர செய்திகளாக இருக்கின்றன.
1965 ஏப்ரல் 4ஆம் தேதிய ‘சிலோன் அப்சர்வர்’ இதழ் ஜான் மக்ளின் என்பவரின் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. வைட்லி குடாவைச் சேர்ந்த ஜான் போலக்குக்கும் அவரது மனைவி பிளாரன்சுக்கும் பிறந்த இரட்டைப் பெண்களின் மறுபிறப்பு பற்றிய கட்டுரையாகும் அது. போலக்கின் இரட்டைக் குழந்தைகளான கிலியன், ஜெனிபர் ஆகியோரின் கதை, ‘மறுபிறப்புக் கோட்பாட்டை ஆதரிக்கும் தொடர்ச்சியான ஆதாரங்களின் வலுவான இணைப்புக் கண்ணியாகும்’ என்று அதில் எழுதி இருந்தது.
‘‘11 வயது நிரம்பிய ஜோனா போலக்கும் 6 வயது நிரம்பிய அவளது தங்கை ஜாக்குலினும் பூசைக்கு போய்க் கொண்டிருந்தார்கள். அன்று 1957 மே மாதத்தில் ஒரு ஞாயிறு...’’ ஒரு கார் ஒரு மூலையில் வளையும்போது குழந்தைகள் மேல் ஏறிவிட்டது. இருவரும் இறந்து போனார்கள்.
‘‘இந்த சோக நிகழ்ச்சி நடந்து 17 மாதங்களுக்குப் பிறகு கிலியனும் ஜெனிபரும் பிறந்தார்கள். ஜோனாவும் ஜாக்குலினும் தான் மீண்டும் தம்மிடம் கிலியனாகவும் ஜெனிபராகவும் திரும்பி வந்திருக்கிறார்கள் என்றே போலக்கு தம்பதிகள் உறுதியாக நம்பினார்கள்.’’
இந்த முட்டாள் பெற்றோர்கள் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இப்படி நம்பினார்கள்? பின்வரும் காரணங்களைத் தருகிறார்கள் அவர்கள்:
‘‘5 வயதான இரட்டையரில் 10 நிமிடம் இளையவளான (கழித்துப்பிறந்த) ஜெனிபர், ஜாக்குலினின் சாயலோடே இருக்கிறாள். அந்த உருவ ஒற்றுமையை ஒளி (புகை)ப்படங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. இரவில் ஜெனிபர் பிறந்ததில் இருந்து அவள் நெற்றியில் ஓர் அசாதாரணமான தழும்பு காணப்பட்டது. ஜாக்குலினுக்கும் அப்படி ஒரு தழும்பு அவள் கீழே விழுந்ததால் ஏற்பட்டிருந்தது. இன்னும் சில அதிகமான ஒப்புமைகளும் உள்ளன: ஜெனிபரின் இடுப்பில் ஒரு நாணயத்தின் அளவுக்கு செம்பழுப்பு நிறத்தில் ஒரு மச்சம் உள்ளது. அதே மாதிரி ஒன்று ஜாக்குலினுக்கும் இருந்தது.’’
‘‘ஜாக்குலின் போலவே ஜெனிபருக்கும் எழுதுவது என்றால் பிடிக்கும். யாரும் சொல்லித் தராமலே பென்சிலை வலது கையின் நடு விரல்களுக்கு இடையில் பிடிக்கும் விசித்திர பழக்கம் அவளுக்கு ஏற்பட்டுள்ளது. ஜாக்குலினும் அப்படித்தான் பிடித்தாள்.’’
‘‘கிலியனும் பல வகைகளில் ஜோனாவைப் போலவே நடந்து கொள்கிறாள். அவளது பல வெளிப்பாடுகள், நடை யாவும் அதேபோலவே உள்ளன. அவளிடம் யாரும் ஒருபோதும் தெரிவித்திராதபோது அந்த விபத்துபற்றி அடிக்கடி விலாவாரியாக பேசுகிறாள்.’’
‘‘‘..க்கு என்ன ஆனது? விபத்தைப் பற்றி இன்னமும் அவர் கவலைப்பட்ட படியேதான் இருக்கிறாரா?’ என்று ஒரு தடவை ஜெனிபர் தன் தாயிடம் கேட்டாள்! அவள் கேட்டது காரை ஓட்டி வந்தவரைப் பற்றி அவர் வசித்து வந்த இடம், அவர் ஓட்டிய காரின் பெயர் எல்லாம் அவளுக்கு தெரிந்திருந்தது.’’
மேற்சொன்ன கதையை கவனமாக வாசிக்கும் எவரும், புத்தகங்கள் பத்திரிகைகள் செய்தித்தாள்களில் நாம் வாசிக்கும் கணக்கற்ற சந்தேகத்துக்கிடமான மறுபிறவிக் கதைகளில் இருந்து இது எவ்வகையிலும் வேறுபட்டில்லை என்பதை காண முடியும். அந்த அப்பாவிப் பெற்றோரின் ஆதாரத்தை ஏற்பதைத் தவிர வேறெந்த நடுநிலையான அறிவியல் ஆய்வு நடத்தவும் இதில் இடமில்லை. இறந்து போன இரண்டு மகள்கள் பற்றி அவர்களின் தாயும் தந்தையும் கூறுவதை பேசாமல் கேட்டுக் கொள்ள வேண்டியது தான். மேலே சொன்ன மேலோட்டமான ஆதாரத்தைக் கொண்டு அந்த இரட்டைக் குழந்தைகள் மறுபிறவிகள் தான் என கண்மூடித்தனமாக நம்பும் பெற்றோர்களின் சாட்சியத்துக்கு வேறு என்ன மதிப்பு தர முடியும்?
முந்திய பிறவியில் இருந்த அதே உடலும் மனமும் அப்படியே திரும்ப வந்துள்ளதாக உரிமை கோரப்பட்ட முதல் சம்பவம் இது. இந்த கோரிக்கை சரியானால் பின் ஓர் உயிரி இறந்தபின் வேறொரு உயிரினத்தில் போய் பிறக்கும் என்று பரவலாக புழக்கத்தில் உள்ள நம்பிக்கைக்கு அடிப்படை இல்லாமல் போகிறது. பிறந்தபோதும் பின் வளரும்போதும் தம் உடலில் ஏற்படும்வந்துசேரும் எல்லா அடையாளங்களோடும்தான் உயிரிகள் மறுபடியும் பிறக்கும் என்றால், தலவாகலியைச் சேர்ந்த பையன் தில்லகரத்னே, கொத்மலயில் ஞானதில்லகி என்ற பெண்ணாக பிறந்தபோது பால் உறுப்புகள் மட்டும் எப்படி மாறியது? கடந்தகால பதிவுகளில் இதுபோல் இல்லை என்றாலும் இந்த புதிய கோரிக்கை உண்மையானால், மாந்த இனம் போலவே ஒரு சிறுத்தையும் தன் அடுத்தடுத்த பிறவிகளில் தன் அத்தனை புள்ளிகளும் மாறாமல் பிறப்பது முடியுமா? இரட்டைக் குழந்தைகள் தம் முற்பிறவி நிகழ்ச்சிகளை அப்படியே நினைவில் வைத்துள்ள அற்புதத்தை யாராவது சந்தேகிக்க முடியுமா? ஏனெனில் இறந்து சிதைந்த பிறகும் இரண்டு சகோதரிகளின் முற்பிறவி உடல்கள் அப்படியே மீண்டும் வந்து தோன்ற முடியும் என்றால், அவர்களுடைய மூளை சிதைந்த பிறகும் அவர்களின் நினைவுகள் சாகாமல் பிழைக்க முடியும் என்பதை ஏற்பதில் என்ன சிரமம் இருக்க முடியும்?
சாவை எதிர்கொண்ட நிலையிலும்கூட ஒரு ஆறு வயது சிறுமிக்கு இருந்த அவதான திறன் அபாரம்! மற்ற குழந்தைகள் போல் அஞ்சி அலறி ஓடுவதற்குப் பதில், மூலையில் கார் வளைந்து வரும்போதே அதைப் பார்த்து பதறாமல் ஓட்டுநரையும் வாகனத்தின் பெயரையும் கூர்ந்து கவனித்திருக்கிறாள் ஜாக்குலின்! காரின் பதிவு எண்ணை நினைவில் கொள்ள அவள் தவறிவிட்டாலும், ஓட்டுநரின் பெயரையும் அவர் வசித்த ஊரையும் அவளால் நினைவில் வைக்க முடிந்திருக்கிறது. எத்தகைய ஒரு அசாதாரண குழந்தையாக அவள் இருந்திருக்க வேண்டும்!
ஜோனாவும் ஜாக்குலினுமாக இருந்தவர்கள்தான் மறுபடியும் பிறந்துள்ளோம் என்று குழந்தைகள் கூறிக் கொள்ளாவிட்டாலும், அவர்கள்தான் நீங்கள் என அவர்களுக்கு கூறுவதில் தகப்பனார் குறியாக இருக்கிறார். அவர் கூறுகிறார்: ‘‘உண்மையாகவே மீண்டும் பூமிக்கு வந்துள்ள அவர்களின் இரு சகோதரிகள்தான் அவர்கள் என்னும் என் நம்பிக்கையை அவர்களிடம் நான் தெரிவிப்பேன். அப்போது ஒருவித வசிய நிலைக்கு அவர்கள் தம்மைத்தாமே உட்படுத்திக் கொள்வதன்மூலம், தம் முந்திய பிறவிகள் பற்றி இன்னும் அதிகமாய் வெளிப்படுத்த வரலாம்.’’
அறிவியில் முறையில் மூளைச் சலவை செய்வதன் மூலம் ஒரு மறுபிறவிக் கதையை உருவாக்கும் உத்தியில்லையா இது?
--------------- நூல்: டாக்டர்

கந்தசஷ்டி

இந்த சுப்ரமணியன் பிறப்பு அல்லது கந்தசஷ்டி என்பது புராண ஆபாசங்களில் மோசமான ஒன்றாகும். ஒரு சமயம் தேவர்கள் எல்லாம் போய் சிவனிடம் கேட்டார்களாம். “உலகில் ராட்சதர் கொடுமை அதிகமாகி விட்டது. அதை எங்களால் தாங்க முடியவில்லை. ஆகவே அதைத் தாங்கக்கூடிய அளவுக்கு அவர்களை அழிக்கக்கூடிய வல்லமை பொருந்திய ஒரு பிள்ளையைப் பெற்றுத் தரவேண்டும்" என்று வேண்டினார்கள் . அதற்குச் சிவனும் இணங்கி பார்வதியைத் திருமணம் செய்துகொண்டு பிள்ளைபெறும் முயற்சியில் அவளோடு கலவிசெய்ய இறங்கினானாம்.

தொடர்ந்து 1,000 வருடங்கள் கலவிசெய்துகொண்டே சிவனும் பார்வதியும் இருந்தார்களாம். ஆனால் குழந்தை பிறக்காததைக் கண்டு தேவர்கள், இனி பிள்ளை பிறந்தால் இந்த உலகே தாங்காது அவ்வளவு வலிமை உள்ளதாக இருக்கும். அது இந்த உலகத்தையே அழித்தாலும் அழித்துவிடும் என்று தேவர்கள் கருதி சிவனிடம்சென்று வேண்டிக் கலவி செய்வதை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டனர்.

அதற்கு சிவன், "நீங்கள் சொல்லுவது போல் நிறுத்திக் கொள்வதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. நிறுத்தினால் அதிலிருந்து வரும் வீரியத்தை என்ன செய்வது" என்றதும், உடனே தேவர்கள் தங்கள் கைகளை ஏந்தி அதில் விடும்படிக் கேட்டார்களாம். அதன்படி தேவர்கள் அனைவரின் கையிலும் வீரியத்தைவிட்டு, சிவன் குடிக்கும்படி கூற அவர்களும் குடித்தனராம். மீதி வீரியத்தை சிவன் கங்கையில் விட்டானாம்.

கங்கை அதைத் தாங்காமல் கொதிக்க ஆரம்பித்து விட்டதாம். வீரியத்தைக் குடித்த தேவர்களுக்குக் கர்ப்பநோய் வந்துவிட்டதாம். அவர்கள் சிவபிரானிடம் சென்று வணங்கி, தங்கள் கர்ப்பநோய்க்கு மருந்து கேட்க, அவர் அதற்கு 'காஞ்சிபுரத்திலுள்ள சுரகரீஸ்வரர் குளத்தில் மூழ்கினால் கர்ப்பம் கலையும்' என்று கூறினாராம். அதன்படி தேவர்கள் அக்குளத்தில் மூழ்கிக் கர்ப்பத்தைக் கலைத்துக் கொண்டார்களாம்.

கங்கையில் ஓடிய சிவ வீரியமானது, ஆறு கிளைகளாகப் பிரிந்து ஓடியதால், ஆறு குழந்தைகள் ஆயிற்றாம். அதனை ஆறு பெண்கள் எடுத்து பால் கொடுத்து வளர்த்தனராம். ஆறுபேர்கள் பால் கொடுப்பது என்பது சிரமமாக இருப்பதாக எண்ணி அவர்கள் ஆறுபேரையும் ஒன்றாக அணைத்துப் பால் கொடுக்கையில், முகம் 6 ஆகவும்(தலைகள்) கைகள் 12 ஆகவும், உடல் ஒன்றாகவும் ஆனதுதான் ஆறுமுகத்தின் கதையாம். ஸ்கலிதத்திலிருந்து உதித்ததால் ஸ்கந்தன் என்று பெயர் உண்டாயிற்றாம்.

ஸ்கந்தம் என்றால், விந்து என்று பொருள். கந்தன் என்ற சுப்பிரமணியக் கடவுளின் பிறப்பு யோக்கியதையைக் கண்டீர்களா?

தந்தைபெரியார் - நூல்: "இந்துமதப் பண்டிகைகள்" பக்கம் 40-41

Friday 28 October 2011

நகை அணிவதுதான் அழகா?


பெண்கள் முன்னேற்றம் என்றால், ஆண்களைப் போன்ற எல்லா உரிமைகளும் வசதிகளும் பெற்றிருப்பதுதான். “நள்ளிரவில் அழகான ஒரு சிறு பெண் தன்னந்தனியே சில மைல்கள் நடந்து செல்லக்கூடிய சமூக அமைப்பு ஏற்பட்டாலொழிய நம் நாட்டில் நாகரிகம் வளர்ந்திருக்கிறது என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.” என்று காந்தியார் எழுதியிருப்பதாக நமக்கு நினைவிருக்கிறது. இன்று படிப்பும் நாகரிகமும் வளர வளர, பெண்களின் உரிமை குறைந்து கொண்டு தானிருக்கிறது. இதற்கு ஆண்களின் தீய நடத்தை மட்டுமே காரணமல்ல. பெண்களின் தவறான வாழ்க்கை இலட்சியமும் ஒரு காரணமாகும்.

“படித்த பெண்களும், பட்டதாரிப் பெண்களும், பணம் படைத்தவர் வீட்டுப் பெண்களும் மனித சமுதாயத்துக்காகப் பணியாற்றுவதே கிடையாது. மோட்டார் கார், நகை நட்டுகள், உயர்தர உடைகள், உல்லாசப் பொழுதுபோக்கு, (சினிமா, நாடகம், இசைவிழா, அரட்டைக் கச்சேரி போன்றவை) ஆகிய ஆசைகளைத் தவிர இவர்களுக்கு வாழ்க்கை இலட்சியம் என்பதே பெரும்பாலும் இருப்பதில்லை.”

கொத்துக் கொத்தாக நகை அணியும் பித்து நம்குலப் பெண்களை அட்டைபோல் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அளவுக்கு மிஞ்சி நகையணிவதைத்தான் நான் இங்குக் குறிப்பிடுகிறேன். ஓரளவு நகைகளுக்கு மேல் அணிகிறவர்களுக்குத் தண்டனை அல்லது வரி விதிக்கச் சட்டமியற்றும் சர்க்காரை நான் வரவேற்கிறேன். நகை அணிவதால் உயிருக்கே ஆபத்து நேரிடுவதும் உண்டு. ஆடைகளுக்கென்று அபரிமிதமாகப் பணத்தை அள்ளி இறைத்து வாழ்க்கையில் அல்லலுறும் நம் குலத்தவரை எண்ணியும் இரங்குகிறேன். கைத்தறித் துணிகளை நாம் கட்டிக் கொண்டால், கைத்தறி நெசவாளரின் துயரத்தைப் போக்குவதுடன், வேலையில்லாத் திண்டாட்டத்தையும் குறைக்க முடியும் என்று சென்னையில் நடைபெற்ற நாடார் மகாசன சங்க 23-ஆவது மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய உயர் திருவாளர் நாகர்கோவில் டாக்டர் ஜான் ஹிலக்கையா அவர்கள் எடுத்துக் காட்டியிருப்பதை வரவேற்கிறோம். அறிவுரையைப் பாராட்டுகிறோம்.

நாடார் குலப் பெண்களைக் குறித்துக் காட்டும் இவர் இப்படிக் கூறியுள்ளாரெனினும், செல்வர் வீட்டுப் பெண்களுக்கும் இக்கூற்றுப் பொருந்தியதாகும். இத்துறையில் கடந்த 30 ஆண்டுகளாகப் பிரச்சாரம் செய்து வருகின்ற சுயமரியாதை இயக்கம் ஓரளவு உணர்ச்சியூட்டியிருக்கிறது. காந்தியார் அவர்களின் பிரச்சாரமும் ஓரளவு வெற்றி தந்திருக்கிறது. என்றாலும் இந்த நகைப் பித்தும் உயர் தரமான உடைப்பித்தும் பணம் படைத்த வீட்டுப் பெண்களைக் கடுமையாகப் பற்றிக் கொண்டிருக்கிறது.

இவள் இன்னார் மகள் அல்லது இன்னார் மனைவி, இவ்வளவு சொத்துக்குச் சொந்தக்காரி என்று பிறர் கூறிப் புகழ வேண்டும் என்பதற்காகவே அலங்காரப் பதுமைகளைப் போல் 5000, 10,000 ரூபாய்க்கு மேற்பட்ட உடைகளைச் சுமந்துகொண்டு திரிகின்றார்களேயல்லாது, இவள் இன்ன தொழில் நிபுணத்துவம் பெற்றவள்! இவள் இந்தத் துறையில் திறமைசாலி என்ற பெயர் வாங்கவேண்டுமென்ற எண்ணமோ இத்தகைய பெண்களுக்கிருப்பதில்லை.

பணத்தைச் சேமித்துப் பத்திரப்படுத்த முடியாத பழங்காலத்தில் நம் பெண்கள் நடமாடும் பாங்குகளாகவும், இரும்புப் பெட்டிகளாகவும் பயன்படுத்தப்பட்டனர். ஆனால், பணத்தைச் சேமிக்கக்கூடிய பல நூறு துறைகள் பெருகிக் கிடக்கின்ற இந்தக் காலத்தில் இது அவசியமா என்பதைப் பணம் படைத்த வீட்டுப் பெண்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நகையணிவதுதான்அழகு என்றால், நகையணியாத ஆண்கள் அழகாயில்லையா? நகை என்பது பெண்களின் உரிமைக்குப் பூட்டப்பட்டிருக்கின்ற பவுன்விலங்கு என்பதைப் பெண் இனம் மறக்கக் கூடாது. நகைகளிலும், உயர்தரமான உடைகளிலும் பாழாக்கப்படுகின்ற பணம், குடும்பத்துக்கோ, சமுதாயத்துக்கோ பயன்படாமல் வீணாகிறது.

இதை எப்படித் தடுக்க முடியும்? திரு. ஹிலக்கையா அவர்கள் கூறியிருப்பதுபோல் தண்டனையோ வரியோ விதித்தாக முடியாது. தண்டனையை அனுபவித்து விடுவார்கள், குடிவெறியர்கள். இன்று துணிந்திருப்பதுபோல வரியையும் கொடுத்து விடுவார்கள், பணம் படைத்தவர்களாதலால்.

ஒருக்கால் நகையைப் பறிமுதல் செய்வது என்ற மாதிரியான சர்வாதிகார உத்தரவு பிறப்பிக்கப்பட்டால்தான் முடியும். ஜனநாயக முறைகளால் இப்பேர்ப்பட்ட சமுதாய வெறிக் குணங்களை ஒழிக்க முடியாது. “அளவுக்கு மீறிய நகை” என்ற பாதுகாப்பு இருக்கக்கூடாது.

மக்களிடையே அறிவு பரவுவதன் மூலமேதான் இந்த மனப்பான்மை அடியோடு மாறவேண்டும். நெற்றியில் நாமமோ விபூதியோ அடித்துக் கொண்டு வருகின்ற பள்ளிச் சிறுவனைக் கண்டால், உற்ற பள்ளிச் சிறுவர்கள் எவ்வாறு கைதட்டி நகைத்துக் கேலி செய்கிறார்களோ அதுபோல, நடமாடும் நகை அலமாரிகளாகக் காட்சியளிக்கின்ற பெண்களைக் கண்டு (பைத்தியக்காரரைச் செய்வதுபோல்) மற்ற பெண்கள் கைதட்டிக் கேலி செய்யக் கூடிய நிலைமை தமிழர் சமுதாயத்தில் ஏற்பட வேண்டும்.

படித்த பெண்களும், பட்டதாரிப் பெண்களும், பணக்காரர் வீட்டுப் பெண்களுமே இத்துறையில் மற்ற நகைப்பித்துப் பெண்களுக்கு நல்வழி காட்டக்கூடியவர்களாக விளங்க வேண்டும்.

எந்த நாட்டையும் பீடிக்காத இந்த நகைப் பித்துப் பீடை தமிழ்நாட்டைப் பிடித்திருக்கிறது. பணம் படைத்த ஒரு சிலரைப் பார்த்து, நடுத்தரக் குடும்பப் பெண்களும் நகைப்பித்துப் பிடித்தவர்களாகி விடுகிறார்கள். இதனால் சச்சரவும், திருமணத் தடைகளும் பெண் இனம் துணையில்லாது வெளிச் செல்ல முடியாத வேதனை நிலையும் ஏற்பட்டிருப்பதைத் தவிர நன்மை ஏதாவது உண்டா? பெற்றோர்களும் பெண்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

Thursday 27 October 2011

கவலையும் - துன்பமும் கடவுள் சித்தமா?


கடவுளைப் பற்றி நான் எதிர்ப்பாய் இருக்கிறேன் என்றால், ஏனப்படி இருக்கிறேன் என்று ஒரு கடவுள் பக்திக்காரரும் சிந்திப்பதில்லையே, நான் ஏன் கடவுள்களை ஒழிக்கவேண்டுமென்கிறேன்? கடவுளை உண்டாக்கிக் கொண்ட எவருமே யோக்கியமான அல்லது யோக்கியத்தன்மையுடைய கடவுளை ஏற்படுத்திக் கொள்ளவில்லையே!

அவரவர் சுய நலத்திற்கேற்ப, முட்டாள் தனத்திற்கேற்ப, ஒழுக்கமற்ற, நேர்மையற்ற, சக்தியற்ற கடவுள்களையும், தங்கள் தங்கள் சுயநலத்திற்கேற்ற கடவுளையும், தன் எதிரிகளை ஒழிக்க வேண்டுமென்கிற ஆவலுக்கேற்ற கடவுள்களையும் உண்டாக்கிக் கொண்டால் - அவற்றை, அதை - அவற்றால் பாதிக்கப்படுபவர்களும் அறிவாளிகளும் ஏற்றுக்கொள்ள முடியுமா? சுயநலமற்றவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

உலக மனித சமுதாயத்திற்கு ஒருவன் தொண்டு செய்ய வேண்டுமானால், முதல் தொண்டாக இப்படிப்பட்ட கடவுள்கள் ஒழிப்பு வேலையில் இறங்கினால் தானே அவன் உண்மையான, யோக்கியமான - அறிவாளியான தொண்டனாக இருக்கமுடியும்.

கவலையும் - துன்பமும் கடவுள் சித்தமா?

உதாரணமாக ஒரு மனிதன், தான் மற்ற மனிதனை விட மேலான, மேல் பிறவியான உயர்சாதி மனிதன் என்று சொல்லிக் கொண்டு, அதற்காகவென்று ஒரு கடவுளையோ, பல கடவுளையோ கற்பித்துக் கொண்டு, அதுவும், அயோக்கியத்தனமான - ஒழுக்கங்கெட்ட கடவுள்களைக் கற்பித்துக்கொண்டு, “அவைகள் தான் என்னை - எங்களை உயர்சாதியாய்ப் பிறப்பித்தது’’ என்றால், அந்த உயர் சாதியல்லாத மற்றவன் அதனால், அவற்றால் இழிசாதி - கீழ்சாதியாக ஆக்கப்பட்டவன் அந்த அவற்றிற்கு ஆதாரமாகக் காட்டப்படும் கடவுளை - கடவுள்களை ஒழிக்க - அழிக்க பின்னப்படுத்த முன்வராதவன் அறிவாளியாவானா? மனிதனாவானா? மானமுள்ளவனாவானா? தன்னை மனிதன் என்று சொல்லிக் கொள்ளத் தகுதியுடையவன் ஆவானா?

கடவுள் நம்பிக்கைக்காரர்கள் யாராகத்தான் இருக்கட்டுமே? அவர்களை எதற்காக கடவுள் ஏற்பட்டது - அதனால் உனக்கு என்ன பலன் என்று கேட்டால் என்ன பதில் சொல்வான்? அவன் ஏதாவதொரு பதிலைச் சொல்வானானால் அதனால் எல்லா மக்களும் பயனடைகிறார்களா - மகிழ்ச்சியடைகிறார்களா? யாராவது துக்கம், வேதனை, இழிவு, கவலை அடையாமல் இருக்கிறார்களா என்றால் என்ன பதில் சொல்வான்? மகிழ்ச்சி, நலம் மேன்மையடைந்திருக்கும் எவனும் “கடவுள் சித்தத்தால்” என்பான். அவை இல்லாதவன்

அவற்றிற்கு நேர்மாறான துன்பம், தொல்லை, கவலை அடைந்து கொண்டிருப்பவன் முட்டாளாய் இருந்தால் கடவுள் சித்தம் என்பான். ஏனப்படியென்றால் என் கர்மம் என்பான். இப்படிப்பட்ட அயோக்கியர்களுக்காக, மடையர்களுக்காக நாமும் இவர்களோடு சேர்ந்து கொண்டு இந்தக் கடவுளைக் காப்பாற்றுவதா?

யார் மனமும் புண்படாது

“உயர்” சாதிக்காரன் நலன் அனுபவிப்பவன், கடவுளைக் காப்பாற்றினால் - "தாழ்ந்த” சாதிக்காரன் கேடு அனுபவிப்பவன், கடவுளை ஒழிப்பது என்பதுதானே நியாயமும் நேர்மையும் ஆகும்; அறிவும் ஆகும்.

அப்படிக்கில்லையானால் அவன் அடிமை, மானமற்றவன், கூலி, சுயநலக்கார மடையன் என்றுதானே சொல்லப்படவேண்டும்.

ஆகவே தோழர்களே!

கவலையும், துன்பமும், இழிவும் உள்ளவர்களே சிந்தியுங்கள்.உங்களுக்கு விமோசனம், விடுதலை, மனிதத்தன்மை, கடவுள் ஒழிப்பிலும், அழிப்பிலும், இழிவுப்படுத்துவதிலுந்தான் இருக்கிறது.

இதனால் யோக்கியமான, அறிவாளியான யார் மனமும் புண்பட இடமில்லை. சுயநலத்திற்காக சிலர் ஆத்திரப்படலாம். மனம் புண்படுகிறது என்று சொல்லலாம். அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள்; சிறிதும் அச்சப்படாதீர்கள்; நாம் யாரையும் மனம் புண்படுத்துவதற்காக இதைச் சொல்லவில்லை; செய்யவில்லை; இதற்காக அறிவற்றவர்களால், சுயநலக்கார்களால், கூலிகளால் நமக்குத் தொல்லை ஏற்பட்டால், மகிழ்ச்சியோடு ஏற்று மானத்தோடு பாய்ந்தெழுங்கள். யார் மீதும் வெறுப்பு - குரோதம் கொள்ளாதீர்கள்.

தந்தை பெரியார் – நூல்:-“உயர் எண்ணங்கள்” பக்கம்:-36 -37

‘தமிழ்த்தாய்' மூவாயிரம் ஆண்டுகளாக யாரைப் படிக்க வைத்தாள்?



Periyar இவ்வுயர் நிலைப் பள்ளியின் இலக்கிய மன்றவிழாவில் நான் பங்கேற்றுக் கொள்ள வாய்ப்புக் கொடுத்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் நான் யார், எனது கொள்கை என்ன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நான் பொதுத் தொண்டு செய்கிறவன். நாட்டில் பலர் பொதுத் தொண்டு செய்கிறார்கள் என்றாலும், நான் மேற்கொண்டிருக்கிற தொண்டு மனிதத் தொண்டு – மக்கள் தொண்டாகும். நம் நாட்டைப் பொருத்தவரை, மனிதன் பகுத்தறிவு இருக்கும் மனிதனாக வேண்டும் என்று பாடுபடுகிறேன். மனிதன் மனிதனாக இல்லை.

பகுத்தறிவுள்ள மனித சமுதாயத்தில் ஒருவன் பறையன், ஒருவன் கவுண்டன், ஒருவன் செட்டி, ஒருவன் தென்னை மரம் உயரமுள்ள உயர்ந்த சாதி, இன்னொருவன் சாக்கடையைப் போல மிகக் கீழான இழிசாதிக்காரன் என்கின்ற பேதங்கள் இருக்கின்றன என்பதோடு, இந்த நாட்டில் பெண்கள் அடிமைகளாக, சமுதாயத்திற்குப் பயன்படாதவர்களாக இருக்கிறார்கள். பெண்கள், ஆண்களுக்கு அடிமையாகி ஆண்கள் வசதிப்படி குழந்தைப் பெற வேண்டியவர்களாக இருக்கிறார்களே ஒழிய, சம உரிமை உடையவர்களாக இல்லை.

இவர்கள் இந்த இழிவில் இருந்து தலை தூக்கா வண்ணம் கடவுள் என்ற பாறாங்கல்லும், அதன் மேல் மதம் என்ற பாழுங்கல்லும், அதன் மேல் சாஸ்திரங் கள் என்னும் கருங்கல்லையும் போட்டு அழுத்தி வைத்து இருக்கின்றார்கள். இவற்றிலிருந்து மனித சமுதாயம் தலைதூக்க வேண்டும் என்று எவனும் பாடுபட முன்வரவில்லை. எனக்கு மட்டும் இத்துணிவு எப்படி வந்தது என்றால் – கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர், மொழி, இலக்கியம், நாடு என்கின்ற எந்தப் பற்றும் எனக்கு இல்லை.

இலக்கியம் என்றால் அறிவு என்று தான் பொருள். ஆனால், நம் இலக்கியங்கள் அதற்கு மாறானதாகும். இங்கு நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது கடவுள் வாழ்த்து என்று ஒன்றும், தமிழ்த்தாய் வாழ்த்து என்று ஒன்றும் பாடினார்கள். கடவுள் இங்கு எதற்கு? கடவுள் உங்களை வாழ்த்த வேண்டும் என்று நினைக்கின்றீர்களா அல்லது கடவுளை நீங்கள் வாழ்த்தி வாழ வைக்கின்றீர்களா என்பதைச் சிந்திக்க வேண்டும். கடவுள் வாழ்த்து எதற்கு? அதன் பொருள் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏதோ சம்பிரதாயம், வழக்கம், மூடநம்பிக்கை என்பதைத் தவிர, வேறு அதனால் எந்தப் பலன் ஏற்படும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

அடுத்து தமிழ்த்தாய் வாழ்த்து என்று சொன்னார்கள். என்ன தமிழ்த்தாய் வாழ்த்து? தமிழ்த்தாய் இந்நாட்டில் நமக்குத் தெரிய 3000 ஆண்டுகளுக்கு மேலிருக்கிறாள். அவள் இவ்வளவு நாளாக இருந்து உங்களுக்குச் செய்தது என்ன? ஆசிரியர் சொல்லிக் கொடுக்காமல் "அ' வருமா என்று கேட்கிறேன்.

திராவிட இயக்கம் தோன்றுகிறவரை, தமிழ்த்தாய் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இருந்தும், நீங்கள் 100க்கு 5 பேர்தான் படித்திருந்தீர்கள். தமிழ்த்தாயால் உங்களைப் படித்தவர்களாக்க முடியவில்லையே! திராவிட இயக்கம் தோன்றிய பின் தானே இந்நாட்டில் கல்வி வளர்ச்சியடைந்தது? அறிவோடு நீங்கள் நன்றி காட்ட வேண்டுமானால், உங்களுக்குக் கல்வி கொடுத்தவர்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். நம் மதம் சொல்வது என்ன என்றால், கீழ்ச்சாதிக்காரன் (சூத்திரன்) படிக்கக் கூடாது என்று சொல்கிறது. யார் இந்து என்று தங்களை ஒப்புக் கொள்கின்றார்களோ, அவர்கள் அத்தனை பேரும் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்கள்தானே! தாய்மார்கள் அத்தனை பேரும் வைப்பாட்டிகள் (சூத்தரச்சிகள்) தானே? இந்த நிலையைப் போக்கத் தமிழ்த்தாய் செய்தது என்ன?

நம் இலக்கியங்கள் என்பவற்றில் ஒன்றுகூட மனித அறிவை வளர்க்கக் கூடியதாக, மனித சமுதாயத்தை வளர்ச்சியடையச் செய்யக் கூடியதாக இல்லை என்பதோடு, மக்களின் மூடநம்பிக்கையை – முட்டாள்தனத்தை வளர்க்கக் கூடியதாக இருக்கின்றன. இன்றைக்கு உலகில் காட்டுமிராண்டிகளாக, அறிவற்றவர்களாக, இழிமக்களாக இருப்வர்கள் நாம்தான் ஆவோம்.

முதலில் ஆசிரியர்கள் திருந்த வேண்டும். ஆசிரியர்கள் மூடநம்பிக்கைக்காரர்களாக இருப்பதாலேயே, அவர்களிடம் படிக்கிற மாணவர்கள் மூடநம்பிக்கைக்காரர்கள் ஆகின்றனர். ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதில் முதன்மையாகப் பார்க்க வேண்டியது, அவர்கள் பகுத்தறிவுவாதியா என்பதுதான்.

நமது இலக்கியங்கள் அத்தனையும் குப்பைகளேயாகும். அந்தக் காலத்திற்கு அவை உயர்ந்தவையாக இருந்திருக்கலாமே ஒழிய, இன்றைக்குள்ள அறிவிற்கு அவை ஏற்புடையவை அல்ல. இலக்கியங்கள் என்றால், அவை எதிர்காலத்தைப் பற்றிய வளர்ச்சியினைக் குறிப்பிடக் கூடியதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட இலக்கியங்கள் ஏதும் நம்மிடம் இல்லை. மாணவர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த வேண்டும். மற்றவர்களுக்குத் தங்களால் இயன்ற உதவியினைச் செய்ய வேண்டும். எந்தக் காரியத்தை முன்னிட்டும் பிறருக்குத் தொந்தரவு செய்யாமல் நடந்து கொள்ள வேண்டும். மற்றவன் உனக்கு எதைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாயோ, அதனை நீ மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும்.

27.8.1971ம் தேதி மணப்பாறையில் ஆற்றிய உரை

Sunday 23 October 2011

கடவுளுக்குத் தூதர் எதற்கு?



பகுத்ததறிவுள்ள மனிதன் இந்த 20- ஆம் நூற்றாண்டில் கடவுள், மதம், வேதம், மதத் தலைவர் என்றெல்லாம் நம்பிக் கொண்டும் ஏற்றுக்கொண்டும் நடப்பது மனித சமூதாயத்திற்கு மிகமிக வெட்கக்கேடான காரியமாகும். ஏனென்றால் இவையெல்லாம் 1000, 2000, 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கால மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட கருத்தும், காரியங்களுமாகும். இவைகள் அறியாமையின் காரணமாகவும், அக்காலக் காட்டுமிராண்டித்தன்மை காரணமாகவும், நல்லெண்ணத்துடனோ அல்லது கெட்ட எண்ணத்துடனோ பல கற்பனையான அதிசயம் அற்புதம் என்பவைகளை உண்டாக்கி, அவற்றின் மூலம் மக்களை நம்பச் செய்து ஏற்பாடு செய்யப்பட்டவைகளேயாகும்.

ஏன் அப்படிச் சொல்கிறேனென்றால், கடவுள், மதம், வேதம், வேத தத்துவம், மதத் தலைவர்கள் என்பவர்கள் ஆகியவை எதுவும் நம்பியாக வேண்டியதே ஒழிய, அறிவுக்கு, ஆராய்ச்சிக்கு, அனுபவத்திற்கு, சாத்தியத்திற்குப் பொருத்தமில்லாததாகவே இருப்பதால் தான் இப்படிச் சொல்கிறேன். அக்காலத்திய எந்த மதத்தை எடுத்துக் கொண்டாலும், அந்த மதத் தலைவர்கள், தன்மைகள் எல்லாம் அறிவுக்கு, ஆராய்ச்சிக்கும், அனுபவத்திற்கும், பொருத்தமில்லாமல் நம்பித் தீரவேண்டியவர்களேயாவார்கள்.

உதாரணமாக கடவுளை உண்டாக்கியவன் யார் என்பதே யாருக்கும் தெரியாது. "தானாக உண்டானான்" என்று தான் சொல்லுவார்கள். எப்போதென்பது யாருக்கும் தெரியாது. இவை இரண்டும் தெரிய முடியாமல் இருப்பது தான் கடவுள் என்றால் அதைப்பற்றி அறிவுள்ள மக்களுக்குத் தெரியப்படாமல் போனதற்குக் காரணம் என்ன? அன்றியும், கடவுள் ஏன் உண்டானார்? ஏன் ஏற்பட்டார்?அவர் வேலை என்ன? அந்த வேலைகளை அவர் ஏன் மேற்கொண்டார்? இவை மனிதனுக்கு மாத்திரம்தானா? இவை இல்லாமல் இருந்தால் என்ன? என்பனபற்றி யாருக்காவது தெரியுமா? கடவுள் சர்வ சக்தி உள்ளவர் என்றால் இந்த அடிப்படைக்குக் காரியம் - கருத்துக்கூட மனிதனுக்குத் தெரியும்படி செய்ய சர்வ சக்திக்கு முடியாமல் போனது ஏன்? தவிரவும், சர்வ சக்தியுள்ள கடவுள் இருப்பதாக நம்ப வேண்டி இருக்கிறதே ஒழிய தெரிந்து கொள்ள, அறிந்து கொள்ள காணமுடிவதில்லையே! மற்ற ஜீவராவிகளுக்குச் சொன்னால் தெரியாதே! அது ஏன்?

தவிர, இந்துக்கள் என்பவர்கள் (பார்ப்பனர்களும், பார்ப்பனதாசர்களும்) முதலில் உலக நடப்புக்குக் "கடவுள்" தான் காரணம் என்பதைத் தெரிந்து கொள்ளாமல், மனிதத் தன்மைக்கு மேற்பட்ட குணமுள்ளவர்களான தேவர்கள் என்பவர்கள் தாம் காரணம் என்றும், இந்திரன், வருணன், வாயு, பிரமன், விஷ்ணு, ருத்திரன், எமன், சந்திரன், சூரியன் முதலியவர்கள் உலகத்தை நடத்துகிறார்கள் என்றும் கருதி, சொல்லி நடந்து வந்தார்கள். பிறகு பிரமா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுள்கள் என்று ஆக்கினார்கள். பிறகு அவற்றை மனிதனை விட இழிதன்மை - குணங்கள் உடையவனாக ஆக்கிப் பிரச்சாரத்தால் நிலை நிறுத்திவிட்டார்கள். இதிலிருந்து ஒரு கடவுள் என்பதும் கடவுள் சர்வசக்தி உடையது என்பதும் பெரிதும் மறைந்துவிட்டன.

அதன் பிறகு இந்த மூன்று கடவுள்களின், அவற்றின் மனைவி, மக்கள்களின் அவதாரம், அம்சம் என்பதாகக் கருதி, 300- கடவுள்கள், 3000 -கடவுள்களாக ஆக்கப்பட்டு விட்டன. அதன் பின்பு பார்ப்பனர் தங்கள் வயிற்றுப் பிழைப்பைக் கருதி, இந்த ஆயிரக்கணக்கான கடவுள்களுக்குச் சோறு, சிலை, கல்யாணம், சண்டை, சச்சரவு, மக்களைக் கொல்லுதல் என்பன போன்ற காரியங்களைக் கற்பித்து, மக்களுக்குள் புகுத்தி, மக்களைப் பயன்படுத்தி ஜீவித்து வருகிறார்கள். இந்தக் கருத்து தத்துவத்தில் உலகில் பல பாகங்களில் இருந்தது என்றாலும் இந்தியாவில் மாத்திரம் நிலை பெற்று நடந்துவருகிறது.

மற்ற பாகங்களில் இக்கருத்து பெரிதும் மறைந்து, ஒரு கடவுள், அதற்கு உருவமில்லை, அதற்கு ஒன்றும் தேவையில்லை, கடவுளைப் பிராத்தனை செய்வது தான் கடவுள் காரியம் என்பதாகக் கருதி பலர் நடந்துவருகிறார்கள். இந்தக் கருத்துக்கு மேற்பட்ட மதங்கள், மதத் தலைவர்கள், வேதங்கள் இருந்து வருகின்றன. இந்த மதக்காரர்களுக்குப் பிராத்தனை, ஜெபம், தொழுகை முதலியவைகள் தாம் முக்கிய கடவுள் தொண்டாக இருந்து வருகின்றன. இதற்குக் காலம், தலைவர், வேதம் இருந்தாலும் அவையும் பெரிதும் மூட நம்பிக்கை அடிப்படையில் தான் கற்பிக்கப்பட்டிருக்கிறன்றன.

"இந்து மதத்திற்கு"க் காலம் பல ஆயிரம் வருஷங்கள் கொண்ட யுகக் கணக்கில் சொல்லப்படுகின்றது. தலைவர்கள் - ரிஷிகள் - முனிகள் - தெய்வீகத்தன்மை கொண்ட அவதாரங்கள், புருஷர்கள் என்கிறான். வேதங்களோ தெய்வங்களால் அசரீரியாய்ச் சொல்லப்பட்ட சப்தங்கள் என்கிறான். இந்த மூன்றையும் ஓப்புக்கொள்ளாவிட்டால் இந்துமதம் (ஆரிய மதம்) என்பது இருப்பதற்கில்லை. அதாவது அசரீரியாய் இருந்த வேதத்தைப் பராசரன் மகன் வியாசன் தொகுத்து உருவாக்கினானாம். இந்தப் பராசன் என்பவன் பாண்டவர்களுக்குப் பாட்டனாம். இந்த வியாசன்தான் பாரதத்தைச் சொன்னானாம். இவன் சொல்ல கணபதி என்கின்ற கடவுள் எழுதினானாம். இவற்றையெல்லாம் நம்பினால் தான் இந்து (ஆரிய) மதம் ஏற்றத்தக்கதாகும்.

இதுபோல் தான் மற்ற கிறிஸ்து, இஸ்லாம் (முகமது) முதலிய மதங்களுமாகும்.கிருஸ்துவ மதத்தலைவர் ஏசு கிருஸ்து என்பவர் 2000 - ஆண்டுகளுக்கு முன் தகப்பனில்லாமல், பரிசுத்த ஆவிக்குப் பிறந்தாராம். ஆகவே அவர் கடவுளுக்கு மகனாம் (தேவதுமாரனாம்) ஆகவே அவர் சிலுவையில் அறையப்பட்டுக்) கொல்லப்பட்டாராம். செத்தவர் மறுபடியும் பிழைத்தாராம். பல அற்புதங்களைச் செய்தாராம். வியாதிகளைப் பார்வையால் சவுகரியப்படுத்தினாராம். ஒரு ரொட்டித் துண்டை ஆயிரக்கணக்கான பேர்களுக்குக் கொடுத்துப் பசியாற்றினாராம். குருடர்களுக்கு கண்ணைக் கொடுத்தாராம். இப்படி பல காரியங்கள் செய்தாராம். இவற்றையெல்லாம் நம்பினால் தான் கிருஸ்தவ மதம் இருக்க முடியும்.

அறிவைக் கொண்டு பார்த்தால் தேவனுக்கு, கடவுளுக்குக் குமாரன் எதற்கு? கடவுள் ஒருவனை மாத்திரம் குமாரனாக ஆக்குவது ஏன்? கடவுள் தோன்றி எத்தனையோ காலம் ஆனபிறகு அப்போது (2000 வருடங்களுக்கு முன்) மாத்திரம் எதற்காக மகனை உண்டாக்கினார்? அதற்கு முந்தின காலத்தில் ஏன் உண்டாக்கவில்லை? அப்போதெல்லாம் செத்தவர்கள் இல்லையா? குருடர்கள் இல்லையா? பசித்தவர்கள் இல்லையா? அந்த (கி.பி. 1 - ஆவது) வருஷம் மாத்திரம் என்ன சிறந்தது? கடவுள் செய்யவேண்டியதை - சொல்ல வேண்டியதை ஒரு மனிதனைக் கொண்டு மாத்திரம் ஏன் சொல்ல வேண்டும்? அதுவும் ஒரு சிலருக்கு மாத்திரம் (நம்பும்படி) ஏன் சொல்ல வேண்டும்? அந்தக் காரியங்கள் இப்போது ஏன் நடப்பதில்லை? இன்று ஏன் அவர் வரவில்லை? இப்போது கிருஸ்துவை ஏற்காதவர்கள், நம்பாதவர்கள், வழிபடாதவர்கள் ஏனிருக்கிறார்கள்? தேவகுமாரனுக்கு இவ்வளவு தான் சக்தியா?

இது போலத்தானே இஸ்லாம் மதம் என்பதும் சொல்லப்படுகிறது? முகம்மது கடவுளுக்கு (கடவுளால் அனுப்பப்பட்ட) தூதராம். கடவுளுக்குத் தூதர் எதற்கு? குரான் கடவுளால் தூதரருக்கு (நபிக்கு)ச் சொல்லப்பட்ட செய்தியாம்.கடவுள் மக்களுக்குச் செய்தி சொல்லவேண்டுமானால் ஒரு மனிதர் (தூதர்) வாயினால் தான் சொல்லச் செய்யவேண்டுமா? கடவுளால் எல்லா மனிதருக்கும் ஏககாலத்தில் தெரியும்படிச் செய்ய முடியாதா? உலகில் மனிதன் தோன்றி எத்தனையோ இலட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஊரிலே, யாரோ ஒரு சிலருக்கு மாத்திரம் சொல்லும்படி ஏன் சொல்லுகிறார்? மற்றவர்களுக்கு ஏன் தெரிவிக்கவில்லை? முகமது நபி என்பதை ஏற்றுக் கொண்டு, அவரை நம்பினவர்களுக்குத்தானே குரான்? மற்றவர்கள் அதை ஏற்பதில்லையே! மற்றவர்களுக்குப் பயன்படுவதில்லையே! ஏன்?

கடவுள் சொல், அப்படி ஏன் நம்பச் செய்தவர்களுக்கு மாத்திரம் தெரிய வேண்டும்? இன்னும் எத்தனை மக்கள் நம்பியாக வேண்டி இருக்கிறது! இதுதான் கடவுள் தன்மையா? இவையெல்லாம் மனிதத் தன்மையா? மனிதக் கற்பனையா? தெய்வத்தன்மையா? ஒரு சர்வசக்தியுள்ள தெய்வம், தெய்வத்தால் அனுப்பப்பட்ட அவதாரம், அம்சம், மகன், குமாரன், தூதர், வேதம் ஏன் உண்டாக்க வேண்டும்? இருந்தால் இத்தனை வேதங்கள், குமாரர், தூதர், வேதம் ஏன் உண்டாக்க வேண்டும்? இருந்தால் இத்தனை வேதங்கள், குமாரர், அவதாரம், தூதர்கள், சமயங்கள், மதங்கள், போதகர்கள் இருக்க வேண்டிய அவசியமென்ன என்பதைச் சிந்தித்தால் இவையெல்லாம் மூட நம்பிக்கை, அதாவது அறிவைக் கொண்டு சிந்திக்காமல் கண்முடித்தனமாய் நம்ப வேண்டியவை ஆகின்றனவா இல்லையா? இது மனிதர் என்பவர்களுக்கு ஏற்றதா என்று கேட்கிறேன். இதற்காகக் கோபிப்பதில் பயன் என்ன?

மூடநம்பிக்கை ஒழிய வேண்டுமானால் மக்களிடம் உள்ள இப்படிப்பட்ட கருத்துக்கள் ஒழியாமல் எப்படி ஒழிய முடியும்? அறிவுள்ளவர்களே! பகுத்தறிவாதிகளே! சிந்தித்துப்பாருங்கள்! இது சந்திர மண்டலத்திற்கு மனிதன் போய் வரும் காலம்; காட்டுமிராண்டிக் காலமல்ல. எனவே சிந்தித்துப்பாருங்கள்! பின் சந்ததி மக்களை மடையர்களாக்காதீர்கள்!

14-06-1971 "உண்மை" இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்.

“பெரியார் களஞ்சியம்" - தொகுதி: 2 - பக்கம்:57-62

பத்திரிகை நடத்துபவன் பார்ப்பானாக இருந்தால் அவனிடம் யோக்கியம் எதிர்பார்க்க முடியுமா?


பத்திரிக்கைத் தொழில் பெரிதும் அயோக்கியர்களிடம் சரணடைந்துவிட்டது!

"கடவுள்" தொண்டு செய்யும் பெண்களின் தொண்டு, நம் நாட்டில் விபசாரிகள் வசம் இருந்தது போல, மக்களுக்குத் "தொண்டு செய்யும்" பத்திரிக்கைத் தொழில், பெரிதும் நம் நாட்டில் மாபெரும் அயோக்கியர்கள் வசமே அண்டி நிற்கின்றது. விபச்சாரிகளால் செய்யப்படும் கடவுள் தொண்டு பொது மக்களை ஒழுக்கக் கேடர்கள், நாணயக் கேடர்களாக ஆக்குவது போலவே, அதைவிட அதிகமாக அயோக்கியர்களால் செய்யப்படும் பத்திரிக்கைத் தொண்டும், பொது மக்களையும் நாணயக்கேடு ஒழுக்கக்கேடு உள்ளவர்களாக ஆக்கிவிடுகின்றது.

நம் நாட்டில் அரசியலிலோ சமூதாய இயலிலோ உத்தியோக இயலிலோ 100 - க்கு 5 - பேர்கள் கூட யோக்கியமானவர்களாகவோ, நாணயமானவர்களாகவோ காண முடியவில்லை என்றால், அந்த வாய்ப்பு பத்திரிக்கைக்கார அயோக்கியர்களால் நம் நாட்டுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பேயாகும்.நம் நாட்டுப் பத்திரிக்கைத் தருமம் மனுதர்மம் போல; அதாவது எந்தவிதமான அயோக்கியத்தனமான அதருமத்தைச் செய்தாவது "மனுதருமத்தைக் காப்பாற்ற வேண்டும்" என்று கூறும் தருமம் போல, எந்தவிதமான அயோக்கியத்தனத்தையும் செய்து பத்திரிக்கை நடத்த வேண்டும் என்கின்ற தத்துவத்தைக் கொண்டதாக ஆகிவிட்டது.நம் நாட்டுப் பத்திரிக்கைகள் பிறவியில் அயோக்கியத்தனத்தால் வாழ வேண்டியவர்களான பார்ப்பனர்களால் தோற்றுவிக்கப்பட்டும், பார்ப்பனர்களால் நடத்தப்பட்டும் வர நேர்ந்தால் பத்திரிக்கைத் தொழிலுக்கு யோக்கியம், நாணயம் தேவை இல்லாமலும் ஏற்பட முடியாமலும் போய்விட்டது.பார்ப்பனர்கள் பிறவியில் அயோக்கியத்தனத்தால் நாணயமற்ற தன்மையால் வாழ வேண்டியவர்கள் என்று ஏன் சொல்லுகின்றேன்? என்றால்

முதலாவது: -
பார்ப்பனர்கள் தங்களைப் பிறவியிலேயே மேல் சாதிக்காரர்கள், உயர்ந்த பிறவியாளர் என்று சொல்லிக் கொண்டு அதற்கேற்றபடி மற்றைய 100- க்கு 97 - பேர்கள் மக்களைவிட, 100-க்கு 3 - பேர்களான தாங்களே உயர் பிறவியாய் வாழ முயற்சிப்பவர்கள் வாழ வழி செய்து கொள்ளுபவர்கள்.

இரண்டாவது: -
இப்படிப்பட்ட வாழ்வு வாழ, வாழ்க்கையில் எப்படிப்பட்ட திருட்டு, கொலை, கொள்ளை, பொய், பித்தலாட்டம், அக்கிரமம், அயோக்கியத்தனம் முதலிய எப்படிப்பட்ட கெட்ட காரியங்களையும் செய்யலாம் என்ற சமய அனுமதி பெற்றவர்கள்.

மூன்றாவது: -
தாங்கள் உயர் வாழ்வு வாழ, மற்றவர்களைத் தலையெடுக்கவிடாமல் அழுத்தி அடக்கி, கீழ்மைப்படுத்தி வைத்து இருந்தால் தான் வாழ முடியும், என்கின்ற தருமத்தைப் படிப்பினையாய் வாழ்க்கைத் தருமமாகக் கொண்டவர்கள்.

நான்காவது:-
தாங்கள் (பார்ப்பனர்கள்) எப்படிப்பட்ட அயோக்கியத்தனம், அக்கிரமம் செய்தாலும் தங்களுக்குப் பாதகமே (பாவம்) ஏற்படாது என்ற உரிமை பெற்றவர்கள்.

இப்படிப்பட்ட கூட்டத்தாரால் நடத்தப்படும் பத்திரிகைகள் மாத்திரம் அல்ல. ஆட்சி, பதவி, உத்தியோகம், அதிகாரம், ஆசிரியத் தொழில், குரு, தொழில், சமயத் தொண்டு நீதித் தொண்டு, நிருவாகத் தொண்டு முதலியவை யோக்கியமாக இருக்க முடியும் என்று நம்புவது அறிவுடைமையாகுமா?

இந்த நிலையில் நாட்டில் மனித சமூதாயத்தில் ஏன் நாணயம் இல்லை, ஒழுக்கம் இல்லை என்று கேட்பது - கவலைப்படுவது "வேப்பங்காய் ஏன் கசக்கின்றது?" என்று கேட்பதற்கே ஒப்பாகும் என்று தான் சொல்லுவேன்.

பத்திரிகைகளால் நம் நாட்டுக்கு, மனித சமூதாயத்திற்கு ஏற்பட்ட கேடு - உலகில் எந்த நாட்டிற்கும் எந்தத் துறையிலும் ஏற்பட்டிருக்கும் கேடாகும்.பத்திரிகைக்காரர்கள் மனித சமுதாய வரிசையில் எந்த வரிசையிலும் இருக்கத் தகுதியற்றவர்களே ஆவார்கள்.

இவர்களுக்கு இந்த நாட்டில் மதிப்பு இருக்கின்றது என்றால், அது அந்த அளவுக்கு இந்த நாட்டு மக்கள் மூடர்கள் அல்லாது ஒழுக்கத்தில் - நேர்மையில் கவலையற்றவர்கள் என்பதுதான் தத்துவ முடிவு ஆகும்.

அயோக்கியர்களுக்குத் தான் பத்திரிகைகளில் நல்ல இடம் என்பது ஒன்றே இந்த நாட்டில் ஏன் இவ்வளவு அயோக்கியர்கள் பெருகிவிட்டார்கள் என்பதற்குச் சரியான காரணமாகும்.

பொது மக்கள் பத்திரிகைகள் பற்றியோ பத்திரிகைக்காரர்கள் பற்றியோ சிந்திக்கும் போது,

அப்பத்திரிகை எதற்காக நடத்தப்படுகின்றது?

பத்திரிகை உரிமையாளனின் இலட்சியம் என்ன?

பத்திரிகைக்காரனின் சொந்தப் கொள்கை என்ன? நாணயம் என்ன?நடத்தையின் தரம் என்ன?

பத்திரிக்கையால் ஏற்பட்ட பலன் என்ன?

பத்திரிகை நடத்துபவன் பார்ப்பானாக இருந்தால் அவனிடம் யோக்கியம் எதிர்பார்க்க முடியுமா?

வர்த்தகனாக இருந்தால் அவனிடம் நாணயம் எதிர்பார்க்க முடியுமா?

பணக்காரனாக இருந்தால் அவனிடம் கொள்கையையோ, நேர்மையையோ எதிர்பார்க்க முடியுமா?

வயிற்றுப் பிழைப்புக்காரனாக இருந்தால் அவனிடம் கொள்கை, நாணயம், நேர்மை, ஒழுக்கம், பொதுநலம் ஆகிய குணங்களை எதிர்பார்க்க முடியுமா?

இதுவரை நம் நாட்டு மக்கள் 100 - க்கு 90 - பேர்கள் எழுத்து வாசனையற்ற பாமரர்களாக இருந்து வந்ததால், பத்திரிகைக்காரர்களே, நாட்டுக்கு, மனித சமுதாயத்திற்கு, ஒழுக்கம், நாணயம், நேர்மை, வாழ்க்கை நலம் முதலியவற்றிற்குக் கர்த்தர்களாக, எஜமானர்களாக இருந்து வந்தார்கள்.

அத்தோடு நம் நாட்டுப் பாமரமக்களிடம் மதத்தைப் புகுத்தியதால், அதுவும் பார்ப்பனர்களால், பத்திரிக்கைக்காரர்களால், வயிற்றுப் பிழைப்புப் பிரசாரகர்களால் மத்தைப் புகுத்தும் பணி நடந்து வந்ததால் மக்கள் மடையர்களாகவும், அயோக்கியர்களாவும் ஆக, எளிதில் முடிந்து விட்டது.

எப்படிப்பட்டக் கடுமையான நோய்களுக்கும் இப்போது மருந்தும் சிகிச்சை முறையும் ஏற்பட்டுவிட்டதைப் போல், எப்படிப்பட்ட அயோக்கியத்தனங்களை வளர்க்கும் நோய்களுக்கும் (சாதனங்களுக்கும்) ஒழியும்படியான காலம் வந்தே தீரும்.

பத்திரிகைகளுக்கு அடிமையாக இருப்பவன் கோழை - வேஷக்காரன். பத்திரிகைகளை வெறுப்பவன் அவற்றின் தன்மையை வெளியாக்குபவன் வீரன் - உண்மையானவன்.

(13-05-1969 - சென்னை - ஆபடஸ்பரியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு.

"விடுதலை" - 13-05-1969 "பெரியார் களஞ்சியம்" தொகுதி:- 18 (ஜாதி-தீண்டாமை பாகம் :-12) - பக்கம்:-253 - 256)

Saturday 22 October 2011

புராங்கணளும் வேதங்களும் கள் குடித்த பைத்தியக்காரனின் உளறல்களே !


இன்று தமிழர் சமுதாயம்தான் உலகிலேயே காட்டுமிராண்டி வாழ்வு வாழ்ந்து வருகிற சமுதாயமாக இருக்கிறது. உலகிலுள்ள 280 கோடி மக்களில் யாரும் இவ்வளவு பிறவி இழிவான நிலையில் முட்டாள்தனமாக வாழ்பவர்களில்லை. நமது நாட்டைப் பிடித்துள்ள ‘நோய்கள்' மூன்று. அவை : 1. கடவுள், மதம், சாஸ்திரங்கள் 2. சாதி 3. ஜனநாயகம் என்பன. நம்மை அரித்துவரும் நோய்கள்: 1. பார்ப்பான் 2. பத்திரிகைகள் 3. அரசியல் கட்சிகள் 4. தேர்தல்கள் 5. சினிமா ஆகிய இவைகள் ஒழிக்கப்பட்டாலொழிய நமது வாழ்வு சீர்படாது என்று, நான் இங்கு மட்டுமல்ல வடநாட்டிலும், கன்னட, கேரள மாநிலங்களிலும் லட்சக்கணக்கான பொது மக்கள் கூடிய கூட்டங்களில் ஆண்டுக்கணக்காக எடுத்துரைத்து வந்திருக்கிறேன்.

அதுபோலவே, நமது வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் தடையாக மேலும் முட்டுக்கட்டைகளாக மூன்று சாதனங்கள் இருக்கின்றன என்பதையும் எடுத்துக்காட்டி வருகிறேன். அவை, அம்முட்டுக் கட்டைகள்: 1. முன்னோர்கள் சொன்னபடி நடக்க வேண்டும். 2. முன்னோர்கள் (பெரியவர்கள்) எழுதியபடி நடக்க வேண்டும் 3. பெரியவர்கள் நடந்தபடியே நாமும் செல்ல வேண்டும் என்பவைகளாகும். இவை, ‘முட்டுக்கட்டைகள்' என்று சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் சொன்னார் என்றாலும், அதற்குப் பிறகு, இன்று இந்த ‘இருபதாம் நூற்றாண்டின் புத்தர்களாக' விளங்கும் கருஞ்சட்டைக்காரர்கள்தாம் சொல்லுகிறார்கள். ஆனால், இந்த நாட்டிலுள்ள பெரும் ‘பிரபல' பார்ப்பனத் தலைவர்கள் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், திரு. ராசகோபாலாச்சாரியார், கே.எம். முன்ஷி, சங்கராச்சாரியார் போன்றவர்கள் எங்கு எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும், இம்முட்டுக்கட்டைகளை ஆதரித்து, வலியுறுத்தி அதாவது ‘நாம் எக்காரியத்திற்கும் நமது முன்னோர் சொன்ன, காட்டிய, எழுதிய வழிப்படியே நடக்க வேண்டும்' என்று பேசி வருகிறார்கள்.

இப்படி இவர்கள் பேசுவது ஏதோ, நமது முன்னோர்கள் எக்காலத்திற்கும் எந்த நிலைமைக்கும் பொருந்தக்கூடிய வகையில் ‘சர்வரோக நிவாரணி' தயாரித்து வைத்துள்ளதைப் போன்று சொல்லி வருகிறார்கள். மக்களுக்குச் சிந்தனா சக்தியும், அறிவும், விஞ்ஞான உணர்வும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான், இவர்கள் இப்படிப் பேசிவருவதன் உள்நோக்கமாகும். ‘முன்னோர்கள், பெரியவர்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள்' என்று கேட்டால் "ரிஷிகள், மகான்கள், தெய்வீக புருஷர்கள், ஆதர்சன ஆச்சாரியர்கள் இவர்கள் தாம்' என்பார்கள்; மற்றும் அவதாரங்களையும் குறிப்பிடுவார்கள்.

இவர்களெல்லாம் யார்? எப்போதிருந்தார்கள்? எங்கிருந்தார்கள்? அதற்கென்ன ஆதாரம்? சரித்திரத்திற்கும் இவர்களுக்கும் ஏதாவது சம்பந்தமுண்டா? என்றெல்லாம் ஆராய்ந்தால் இது மாபெரும் புரட்டு - அதுவும் இமாலயப் புரட்டு என்பது தெளிவாக விளங்கும். இந்த ரிஷிகள், தெய்வீகர்கள், மகான்கள் ஆகியவர்களுக்கு ஏதாவது ஆதாரம் உண்டா என்றால் - புராணங்கள், வேதங்கள், ஸ்மிருதிகள், சுருதிகள் என்று ஏதோ கறையான் பிடித்த சிலவற்றைக் காட்டக் கூடும். அதை நுணுகி ஆராய்ந்தவர்களுக்குத்தான் தெரியும். அதிலுள்ளவைகள் எல்லாம், ‘பைத்தியக்காரனுக்குக் கள் ஊற்றினால் அவன் எப்படியெப்படி உளறுவானோ அப்படியே இருக்கின்றன'வென்று. இப்படி முன்னோர்கள் சொன்னது, எழுதியது, நடந்தது என்பதை வெறும் வாயினால் மாத்திரம் பார்ப்பனர்கள் கூறிக் கொண்டிருக்கவில்லை. இந்நாட்டில் 100க்கு 84 போராக உள்ள ‘இந்துக்களுக்கு' உரிய சட்டமாகிய இந்து ‘லா'விலும் நுழைத்துப் பலப்படுத்திப் பாதுகாத்து வருகிறார்கள்.

இந்து ‘லா'வின் அடிப்படைகளில் ஒன்று, சுமார் 20 ரிஷிகள் (ஸ்மிருதிக்காரர்கள்) சொன்னதாகும். நாரதர், பராசரர், யாக்ஞவல்கியர், விஸ்வாமித்திரர், வசிஷ்டர், மனு போன்றவர்கள் என்ன கருத்துக் கொண்டார்களோ அதைக் காட்டித்தான் இன்று அய்க்கோர்ட், சுப்ரீம் கோர்ட் போன்ற நீதிமன்றங்களில் தீர்ப்புகள் எழுதப்படுகின்றன. இந்த ரிஷிகள் சுத்த அனாமதேயங்களாகவே இருக்கிறார்களே; இவர்களைப் பற்றி ஆதாரங்கள் உண்டா என்று தேடினால், அவை அறிவிற்கொவ்வாத ஆபாசக் களஞ்சியங்களாகவே இருக்கின்றன.

இத்தனை ரிஷிகள், முனிவர்கள், தெய்வீகப் புருஷர்கள், ஆண்டவனின் அவதாரங்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், மகாத்மாக்கள் தோன்றி ‘மகிமைகள்' புரிந்திருந்துங்கூட, நாம் இன்றைக்கும் வளையாத குண்டூசி செய்யக்கூடக் கற்றுக் கொள்ளவில்லையே, ஏன் என்றால் என்ன பதில் கூறமுடியும்? எனவே, பெரியோர்கள் சொன்னது, பெரியோர்கள் எழுதியது, பெரியோர்கள் நடந்தது என்பதாகிய பிரச்சாரம் செய்வது, நம்மை முழு மூடர்களாக நிரந்தரமாக இருக்கச் செய்வதற்குத்தானேயொழிய வேறில்லை.

ஆகவே, இம்மூன்று முட்டுக் கட்டைகளை ஒழித்தாலொழிய, நாம் முன்னேற முடியாது என்பது உறுதி. இல்லாவிடில், தேங்கிய சாக்கடையாக நமது சமுதாயமும் அதில் புரண்டு இன்பங் காணும் பன்றிகளாக நம் மக்களும் இருக்க வேண்டியிருக்குமென்பது உண்மை. எனவே, முட்டுக் கட்டைகளை ஒழிக்க வேண்டியது, தமிழ் மக்களின் முக்கிய முதற் பணியாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.


விடுதலை' தலையங்கம் - 22.5.1959

கொலைகாரனிடமிருக்க வேண்டிய ஆயுதங்கள் கடவுளுக்கு எதற்கு? - பெரியார் பேசுகிறார்


இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்குள் தோன்றியதுதான் இந்தக் கடவுள் சங்கதி. அதுவும் இந்தக் கடவுளை நமது ஆள் உண்டாக்கவில்லை. வெள்ளைக்காரன்தான் இந்தக் கடவுளையே உண்டாக்கியவன். அதைப் பார்ப்பான் ஒன்றுக்குப் பத்தாகப் பெருக்கி விட்டான். ஒரு கடவுள் பெயர் கூடத் தமிழ்ப் பெயரே கிடையாது. இங்கு இருக்கிற கடவுள்களின் பெயர்கள் எல்லாம் வடமொழிச் சொற்கள்தான். கடவுள் என்ற சொல்லே தமிழில் கிடையாது. தமிழனுக்குக் கடவுளே இல்லை. இன்றைக்கும் தமிழ்ச் சொல்லில் உள்ள ஒரு கடவுளும் கிடையாது.

வெள்ளைக்காரனும் காட்டுமிராண்டியாக இருந்த காலத்தில்தான் கடவுளைக் கற்பித்தான். அந்தக் கடவுளுக்கு நிறம் மஞ்சள் வர்ணம் என்றும் சொன்னான். அந்தக் கடவுளைக் காட்டு மனிதன் சிங்காரித்தான். அதற்கு உடை என்னடா என்றால் புலித்தோல் என்றான். தலை எல்லாம் சடை. காது எல்லாம் பெரிய ஓட்டை. நகைகள் எல்லாம் பாம்புகள். குடி இருக்கிற இடமோ சுடுகாடு. கையில் இருக்கிற கருவிகளோ மண்டை ஓடுகள். இவை எல்லாம் மனிதனுக்கு இருக்கக் கூடிய யோக்கியதையா? இவை எல்லாம் காட்டுமிராண்டித்தனமான சின்னங்கள் அல்லவா?

வெள்ளைக்காரனைப் பார்த்துதான் பார்ப்பான் இங்குக் கடவுளை உண்டு பண்ணினான். வெள்ளைக்காரன் கடவுள் ஜுபிடர்; பார்ப்பான் அதற்கு கொடுத்த பெயர் இந்திரன். வெள்ளைக்காரன் - மைனாஸ்; பார்ப்பான் வைத்த பெயர் எமன். வெள்ளைக்காரன் - நெப்டியூன்; பார்ப்பான் - வருணன். வெள்ளைக்காரன் - லூனஸ்; பார்ப்பான் - சந்திரன். வெள்ளைக்காரன் - சைனேஸ்; பார்ப்பான் - வாயு. வெள்ளைக்காரன் - அப்பல்லோ; பார்ப்பான் - கிருஷ்ணன். வெள்ளைக்காரன் - மெர்குரி; பார்ப்பான் - நாரதன். வெள்ளைக் காரன் - மார்ஸ்; பார்ப்பான் - கந்தன். இப்படியாக வெள்ளைக்காரனைப் பார்த்து காப்பி அடித்தவன்தான் இந்தப் பார்ப்பான். அப்படிக் காப்பி அடித்த கடவுள்களுக்கும் கதைகள் எழுதி, புராணங்கள் எழுதி, பார்ப்பான் வயிறு வளர்க்க ஆரம்பித்து விட்டான். அதை அப்படியே தமிழன் நம்பி ஏற்றுக் கொண்டு விட்டான்.

அப்படி ஏற்றுக் கொண்ட கடவுள்களில் ஒன்றுதான் இந்த விநாயகன். விநாயகன் என்ற சொல்லே தமிழ் கிடையாது. கடவுளுக்கு நாட்டில் என்ன பொதுவாக இலக்கணம் சொல்கிறார்கள். கண்ணுக்குத் தெரியாது - கைக்குச் சிக்காது புத்திக்கும் எட்டாது என்கிறான். அப்படியானால் எப்படிக் கடவுளை நம்புவது என்று கேட்டால், நம்பு என்கிறான். நம்பு என்பதில்தான் கடவுளை வைத்து இருக்கிறான். கிறித்துவனும், துலுக்கனும் அதைத்தான் சொல்கிறான். கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கு எப்படி உருவத்தை உண்டாக்கினான்? கருணையே வடிவானவர் என்கிறான். அவன் கையில் ஏன் சூலாயுதம்? வேலாயுதம்? அரிவாள், மண்வெட்டி, கோடாரிகள் எல்லாம்? இவை எல்லாம் கருணையின் சின்னங்களா? கொலைகாரப் பசங்களுக்கு இருக்க வேண்டிய கருவிகள் எல்லாம் கடவுளுக்கு எதற்கு? கடவுளுக்கு ஒழுக்கத்தையாவது நல்ல முறையில் கற்பித்து இருக்கிறானா? எந்தக் கடவுள் இன்னொருத்தனுடைய மனைவியை கெடுக்காமல் இருந்திருக்கிறான்? விபச்சாரம் செய்யாத கடவுள் ஒன்றாவது உண்டா? இருந்தால் சொல்லட்டுமே, ஏற்றுக் கொள்கிறேன். கடவுள் பிறப்பைப் பற்றி தான் எழுதி வைத்து இருக்கிறானே கொஞ்சமாவது யோக்கியம் வேண்டாமா? விநாயகன் பிறப்பு எவ்வளவு ஆபாசமானது!

இன்றைக்கு நாம் சூத்திரர்களாக இருக்கிறோம் என்றால், அது பார்ப்பானால் மட்டுமல்ல - நாமே அதை ஒத்துக் கொண்டு இருக்கிறோம். பார்ப்பான் நம்மைச் சூத்திரன் என்று சொல்லப் பயந்து விட்டான். ஆனால், நாமே நாம் இந்து என்று ஒப்புக் கொண்டு, கோயில்களுக்குச் செல்வதன் மூலமாகவும், நெற்றியில் சாம்பலைப் பூசிக் கொள்வதன் மூலமாகவும் சூத்திரன் என்பதை ஏற்றுக் கொண்டு இருக்கிறோம். இன்றைக்கு இருக்கிற அரசாங்கம் நமது அரசாங்கம் என்று பேர். என்னத்துக்காக இந்தப் பண்டிகைகளுக்கு எல்லாம் லீவு விட வேண்டும்? நம்மை இழி மகன் என்று முத்திரைக் குத்திக் கொள்ளவா? துணிச்சலாக இந்த லீவுகளை எல்லாம் கேன்சல் செய்ய வேண்டும். இந்த அரசாங்கங்கூட, இந்த இடிந்து போன கோயில்களை எல்லாம் பழுது பார்த்துப் புதுப்பித்துக் கொண்டு இருக்கிறது. என்ன அர்த்தம்? நம்மை என்றென்றும் இழிமக்களாக்கச் செய்யும் முயற்சிதானே இது? வெட்கப்பட வேண்டாமா?

எங்களுடைய இயக்கம் இந்த நாட்டில் தோன்றிப் பாடுபடவில்லை என்றால், இந்தக் கடவுளைச் செருப்பாலடித்து, சாத்திரங்களைக் கொளுத்தி எரிக்கவில்லை என்றால், நமக்குப் படிப்பு ஏது? உத்தியோகம் ஏது? இன்றைக்கு நூற்றுக்கு நூறு தமிழனாக இந்த நாட்டை ஆட்சி செய்கிறார்களே! இது எப்படி வந்தது? நம்முடைய முயற்சியால் அல்லவா?

(29.8.73 அன்று சிதம்பரத்தில் விநாயக சதுர்த்தி கண்டனப் பொதுக் கூட்டத்தில் ஆற்றி உரை)

Friday 21 October 2011

மதமும், கடவுளும் மனிதனை முட்டாளாக்கும் கருவிகள்




மனிதனுக்குள் கடவுளைப் புகுத்துவது மனிதனை முட்டாளாக்கும் டானிக் (வைட்டமின் சத்து) ஆகும். இதை இன்று பார்ப்பனர்கள், சங்கராச்சாரிகள் கடவுள் பிரசாரம் செய்வதில் எடுத்துக் கொள்ளும் முயற்சியில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.

கடவுள் மனித நலத்துக்காகக் கண்டு பிடித்த சாதனம் அல்ல. மனிதனை முட்டாளாக்குவதற்குப் பயன்படுத்தும் சாதனமேயாகும். சூரியனை, சந்திரனை நெருப்பை, நீரை, காற்றை, கல்லை, மண்ணை எந்த மனிதனும் கண்டுப்பிடிக்கவில்லை. அவற்றின் பெயர்களைத்தான் மனிதன் தெரிந்து கொண்டான். இவற்றிற்கு விளக்கம் தேவை இல்லை. காரண காரியங்கள் தேவையில்லை. மனிதன் என்றால் இவைகளை அறிந்தே ஆகவேண்டும். இவற்றின் பலனை அனுபவித்தே ஆக வேண்டும்.

ஆனால், கடவுள் அப்படி அல்ல; ஒருவன் சொல்லி அதுவும் சொல்லுவது மாத்திரமல்ல, நம்பும்படி செய்து, நம்பும்படி செய்வது மாத்திரமல்ல, நம்பும்படி கட்டாயப்படுத்தி மனித மூளைக்குள் புகுத்தியாக வேண்டும். இந்தக் கதி சர்வ சக்தியுள்ள "கடவுளுக்கு" ஏற்பட்டது பரிதாபம்! மகா பரிதாபம்!

கடவுள் கதை ஒரு முட்டாளுக்குத் தோன்றிய தோற்றம். இது உலக அறிவையே பாழாக்கிவிட்டது. அதாவது சிறு குழந்தை கையில் கிடைத்த நெருப்புப்பந்தம் வீட்டையே, ஊரையே எரித்து சாம்பலாக்கியது என்பது போல் கடவுள் எண்ணம் அறிவையே கொன்று விட்டது என்று சொல்லலாம். கடவுள் என்பது "பிடிக்குப்பிடி நமசிவாயம், (நமசிவாயம் என்றால், இங்கு ஓன்றும் இல்லை; சூனியம் என்றுதான் பொருள்)

அது "கடவுள்" என்றால் ஒரு "சக்தி," "சக்தி கூட அல்ல;" "ஒரு காரணம்" "காரணப் பொருள்கூட அல்ல" அப்படி நினைப்பது, நினைத்துக் கொள்வது மனிதனுக்கு ஒரு "சாந்தி" என்பதாக கா.சு.வும் ( M.L .பிள்ளை), திரு.வி.க.வும் சொன்ன விளக்கம் - இதை பழைய "குடிஅரசு" இதழில் காணலாம். ஆனாலும் இவர்கள் விக்கிரக பூசையும், பட (உருவ) பூசையும் செய்து வந்தார்கள். கடைசியாக மாற்றிக் கொண்டார்கள்.

மனிதனுக்கு எதற்காக கடவுள் தேவைப்பட்டது என்பது எனக்கு இன்னமும் விளங்கவில்லை. அதிலும், கடவுளை நம்பும் எவனும் அதன் சர்வ சக்தியில் நம்பிக்கை வைப்பதே இல்லை. எவனும் சம்பிரதாயத்திற்காக "கடவுள் செயல்" என்கிறானே தவிர, காரியத்தில் மனிதன் செயல் என்றும், இயற்கை என்றும், அகஸ்மாத், தற்சம்பவம், ஆக்சிடெண்ட் என்றும் தான் முடிவு செய்து கொண்டவனாகிறான். சர்வம் கடவுள் செயல் என்று சொல்லுகின்ற எவனும் சர்வத்திற்கும் தற்காப்பு செய்து கொள்ளாமல் இருப்பதில்லை. சர்வம் கடவுள் செயலாயிருக்கும் போது நாஸ்திகன் - கடவுள் இல்லை என்பவன் எப்படித் தோன்றினான் என்பது பற்றிச் சிந்திப்பதில்லை.

மற்றும் சர்வத்திலும் வியாபகமாக இருக்கிற கடவுள் மக்களுக்கு ஏன் தான் இருப்பதாக, தன்னைத் தானாகத் தெரிந்து கொள்ளச் செய்ய முடியவில்லை என்பதை சிந்திக்கவே மாட்டேன் என்கிறான். கிருஸ்து பாதிரி இந்தக் கேள்விக்குப் பதிலாக "கடவுள் மனிதனுக்கு அறிவைக் கொடுத்துவிட்டான்; அந்த அறிவைக் கொண்டு கடவுளைத் தெரிந்து கொள்ள வேண்டியது மனிதன் கடமை" என்று சொல்லிவிட்டார்.

உன் அறிவுக்கு எட்டிய கடவுள் ஏன் என் அறிவுக்கு எட்டவில்லை? என்று கேட்டதற்கு, "பாபஜன்மங்களுக்கு எட்டாது" என்று சொல்லிவிட்டார். அந்த பாபஜன்மங்களை யார் படைத்தது? படைத்தது கடவுளானால் பாபஜன்மங்களை ஏன் படைத்தார்? கடவுள் பாபஜன்மங்களைப் படைக்கவில்லையானால், பாபஜன்மங்களைப் படைத்தது யார்? என்று கேட்டேன். "சாத்தான் படைத்தான்" என்றும், மற்றும் அவருக்கே புரியாத எதை எதையோ யோசித்துப் பேசினார்.

இஸ்லாத்தின் கதியும் இப்படித்தான். இந்துவின் கதியே மும்மூர்த்திகள் ஓங்காளி, மாரி, காத்தவராயன், மதுரை வீரன், கருப்பண்ணன், ஆழ்வார்கள், நாயன்மார்கள், சமாதி, கல்லுகள், படங்கள், பட்சிகள், மிருகங்கள், மரங்கள், சாணி (மூட்டை உருவ), உருண்டைகள், செத்துப்போன மனிதர்கள் முதலிய எத்தனையோ பண்டங்கள் கடவுள்களாக வணங்கத்தக்கவைகளாகவும் இருந்து வருகின்றன. இவைகளை ஏன் சொல்லுகிறேன் என்றால் ஒரு சர்வ சக்தியுள்ள கடவுளுக்குத் தன்னைப்பற்றித் தெரிவித்துக் கொள்ள - தன் உருவத்தை விளக்க சக்தியில்லை என்பதைக் காட்டத்தான்.

பிறகு - முன்ஜென்மம் - பின் ஜென்மம், கருமம், விதி, நரகம், சொர்க்கம், வைகுண்டம், கைலாயம் இப்படி இன்னும் பல பைத்தியக்காரனுக்குக் கள் ஊற்றினது போல் உளறல் மேல் உளறல்கள்.

மனிதனுக்குப் பிறகு முதல் சாவுவரை எதத்னையோ துன்பமும், தொல்லையும், இருக்க இந்தக் கடவுள் கருமம் மோட்ச - நரகத் தொல்லைகள் ஒருபுறம் மனிதனைச் சித்திரவதை செய்கிறது. மனிதன் (ஜீவ கோடிகள்) பிறப்புக்கும், வாழ்க்கைக்கும், சாவுக்கும் இடையில் அனுபவிக்கும் இன்பம், துன்பம், கவலை, தொல்லை முதலிய காரியங்களுக்கு அவசியம் என்ன? காரணம் என்ன? என்பதை எவனாலும் இதுவரை தெரிந்து கொள்ள முடியவில்லையே! இத்தனைக்கும் மனிதன் கழுதை, குதிரை, நாய், நரி, எருமை, யானை, புலி, சிங்கம், ஈ, எறும்பு முதலான எண்ணிறந்த ஜீவராசிகளைவிட அதிகமான அறிவு (பகுத்தறிவு) படைத்தவனாவான்.

இந்தப் பகுத்தறிவின் பயனால்தான் மற்ற ஜீவப்பிராணிகளுக்கு இல்லாத தொல்லையை மனிதன் அனுபவிக்கிறான். காரணம் இந்தப் பாழாய்ப்போன கடவுளால் தான் அதிகத் தொல்லை என்பேன். "உள்ளத்தைப் பங்கிட்டு உண்பது," "உழைப்பைப் பங்கிட்டுச் செய்வது" என்ற நிலை ஏற்பட்டால் கடவுளுக்கு, வேலையோ, அவசியமோ இருக்காது. இப்போது கையில் வலுத்தவன் காரியமாகவும், அயோக்கியன் ஆதிக்கமாகவும் இருப்பதால், மனிதன் அறிவு இருந்தும் தொல்லைக்கும் துன்பத்திற்கும் ஆளாகிறான் - அடிமையாக வாழ்கிறான்.

இனி ஒரு அய்ம்பது ஆண்டுக்குள் மனிதனுக்கு சராசரி வயது 100 – ஆகப் போகிறது. இது உறுதி. இப்பொழுதே பல நாடுகளில் சராசரி மனித வயது 67- முதல் 74- வரை இருந்து வருகிறது. நமது நாட்டில் 1950- ல் சராசரி வயது 32- ஆக இருந்தது. இன்று 50- ஆக ஆகிவிட்டது. இதற்குக் காரணம் 1940- ல் படித்த மக்கள் நம்நாட்டில் 100- க்கு 9- பேராக இருந்தவர்கள் காமராசர் முயற்சியால் 100- க்கு 50- பேராக ஆனதுதான். அதோடு கூடவே, "கடவுளும்," "கடவுள் செயலும்" வெகுதூரம் குறைந்து மறைந்து வருவதும் தான் என்று சொல்லுவேன்.

கடவுள் மறைய மறைய மனிதனுக்கு அறிவு வளரும். சுதந்திரம் அதிகமாகும். நமது பெண்களுக்குப் அந்த பாப ஜன்மங்களை யார் படைத்தது? படைத்தது கடவுளானால் பூரண சுதந்திரம் இருக்குமானால் - வாழ்வில் சுயேச்சையும், சமத்துவமும் ஏற்படுதமானால், மனிதன் அறிவும், ஆயுளும் எல்லை இல்லாமல் வளர்ந்து கொண்டே போகும்.

முதலில் கடவுள் எண்ணம் மறையட்டும். இன்னும் நம்நாட்டு ஆட்சியாளர்களுக்கு (உண்மையான) தி.மு.க. காரருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. அவர்கள் (தி.மு.க.காரர்) இனியும் இரண்டு லட்சம் மெம்பர்களைச் சேர்க்க வேண்டும். பிறகு இவர்களை அசைக்க எந்த மாஜிகளாலும் முடியாது. இது தான் கடவுள் இரகசியம்.


"விடுதலை" - 03-11-1970 நாளிதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்.

Thursday 20 October 2011

பார்ப்பனர் சூழ்ச்சியே தீபாவளி - தீபாவளி பற்றி தமிழறிஞர்கள்

பார்ப்பனர் சூழ்ச்சியே தீபாவளி

வடநாட்டில் அக்காலத்திலிருந்த தமிழ் மேன்மக்கள் அய்ப்பசித் திங்களில் விளக்கு வரிசை வைத்து அவற்றின் ஒளியிலே விளங்கா நின்ற முழு முதற் கடவுளுக்குத் திருவிழா கொண்டாடி வந்தனர். அதுதான் தீபாவளி என வழங்கி வருகிறது. வடநாட்டவர் தென்னாட்டில் குடியேறிய பின் தீபாவளித் திருவிழா இங்குள்ள தமிழரது கொள்கைக்கும் ஏற்றதாயிருத்தலின் அஃது இங்குள்ள தமிழ் மக்களாலும் கொண்டாடப்பட்டு வருவதாயிற்று. கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நாளின் நினைவுக்கு அறிகுறியாகத் தீபாவளித் திருநாள் கொண்டாடப் படுவதாயிற்று என்னும் கதை பிற்காலத்தில் பார்ப்பனரால் கட்டிவிட்ட தொன்றாகும்.


பார்ப்பனர் தமது உயிர்க் கொலை கேள்விக்கு உடன்படாத நரகாசுரன் என்னும் தமிழ் மன்னன் ஒருவனைத் தமது உயிர்க்கொலை வேள்விக்கு உடன்பட்டுத் தமக்குத் துணையாயிருந்த மற்றொரு தமிழ் மன்னனாகிய கண்ணனை ஏவிக் கொலை செய்தனர். தீபாவளி என்னும் சொற்றொடர் பொருளை ஆராயுங்கால் அத்திருநாளுக்கும், கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நிகழ்ச்சிக்கும் ஏதொரு இயைபும் இல்லை என்பது தெளியப்படும். தீபாவளி என்பது தீபஆவலி எனப் பிரிந்து விளக்கு வரிசை என்றே பொருள் தரும்... ஆதலால் தீபாவளி நரகாசுரன் கதைக்குச் சிறிதும் இசைவது அன்று.
-------------------ஆசிரியர்: தமிழ்க்கடல் மறைமலை அடிகள்
நூல்: தமிழர் மதம் பக்கம் : 200-201

தீபாவளி தமிழர்க்கு உரியதன்று!
தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியதாகத் தோன்றவில்லை. நரகாசுரன் என்ற ஓர் அசுரனைக் கொன்றதற்காக மகிழ்ச்சி அடைதலைக் குறிப்பதற்காக அப்பண்டிகை வழக்கத்தில் கொண்டாடப்படுகிறது. அது புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் என்பதை இன்னார் என்று தீர்மானித்தல் கடினமாயினும் சரித்திர ஆராய்ச்சியாளர் ஆரியர் பகைவரே அசுரர் எனப்பட்டார் என்பர். ஆரியர் பகைவருள் ஆதியில் திராவிடர்களும் அடங்குவர் ஆதலின் அசுரர் கொலைக்காகத் தமிழர் மகிழ்ச்சி அடைதல் ஏற்றதன்று என்ப.
-------------------------ஆசிரியர்: கா.சுப்பிரமணியன் (பிள்ளை)
நூல்: தமிழ் சமயம் பக்கம் : 62
*****

வடநாட்டுப் பண்டிகையே தீபாவளி!


தீபாவளி குறித்து வெவ்வேறு கதைகள் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் வழங்குகின்றன. தமிழகத்தில் தீபாவளிக்கு நரகாசுரன் கதை கூறப்படுகிறது. இக்கதைக்கும், தீபாவளிக்கும் தொடர்பே இல்லை.

தீபாவளி புதுக்கணக்குப் புத்தாண்டுப் பிறப்பு விழாவாகும். இது விஜய நகரத்திலும் புத்தாண்டுப் புதுக் கணக்கு விழாவாகக் கொண்டாடப்பட்டதை நிக்கோலோ டிகாண்டி என்பவர் குறிப்பிட்டுள்ளார். இது வடநாட்டுக் குஜராத்திகளுக்கும் மார்வாரிகளுக்கும் புதுக் கணக்குப் புத்தாண்டு விழாவாகும். விஜய நகரத்திலிருந்து வந்து மதுரையில் குடியேறிய சவுராஷ்டிரர்களும் இதைக் கொண்டாடி வருகிறார்கள். தீபாவளி அன்று புதுக் கணக்கு எழுதப்படும்.

வடநாட்டார் தீபாவளி அன்று விளக்கு அலங்காரம் செய்வதுண்டு. தீபம் = விளக்கு; ஆவலி = வரிசை; தீப + ஆவலி = தீபாவலி. அச்சொற்றொடர் பின்பு தீபாவளி என்று திரிந்தது. குஜராத்திகளும், மார்வாரிகளும் இன்றும் தீபாவளி அன்று வீடுகளில் விளக்கேற்றி வைக்கிறார்கள். புதுக்கணக்கு எழுதுகிறார்கள். ஆனால், தீபாவளி தமிழ்நாட்டில் தொன்றுதொட்டு வந்த திருநாளன்று.

மதுரை நாயக்கர்களாலும், தஞ்சை - செஞ்சி நாயக்கர்களாலும் தமிழகத்தில் புகுத்தப்பட்டதால் பதினாறாம் நூற்றாண்டி லிருந்து தென் தமிழ்நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இது பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படவே இல்லை. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தீபாவளியில் புத்தாடை அணியும் வழக்கம் அண்மைக் காலம் வரையில் இருந்ததில்லை.
------------------ஆசிரியர்: பேராசிரியர் அ.கி.பரந்தாமனார் நூல்: மதுரை நாயக்கர் வரலாறு பக்கம் : 433-434
***********

அகராதிக் குறிப்பில்
இரண்யாட்சதன்: இவன் கதாபாணியாக இந்திராதி தேவர்கள். இருடிகள் முதலியோரை வருத்தி ஒருமுறை பூமியைப் பாய்போற் சுருட்டிக் கொண்டு கடலில் ஒளிக்க, விஷ்ணுமூர்த்தி சுவேதவராக (பன்றி)வுருக் கொண்டு கொம்பினால் இவன் மார்பைப் பிளந்து பூமியைப் பழைமை போல் நிறுத்தினார். (இந்தக் கருத்து பூமி உருண்டை என்னும் அறிவியல் உண்மையை மறுத்து தட்டை என்னும் மதவாதத்தை வற்புறுத்துகிறது) (169)
நரகாசுரன்: வராக (பன்றி) உருக்கொண்ட விஷ்ணுவிற்கும், பூமி தேவிக்கும் பிறந்த அசுரன் (934)
சுரர்: பிரமன் சொற்படி மது உண்டதால் இப்பெயர் அடைந்த தேவர் (705)
அசுரர்: சுரராகிய தேவர்க்கு (அதாவது மது அருந்தும் ஆரியப்பார்ப்பனர்க்கு) விரோதிகள் (அதாவது தென் நாட்டைச் சேர்ந்த திராவிடத் தமிழர்கள்) (24)
-------------------ஆசிரியர்:சைவப் பேரறிஞர் ஆ.சிங்காரவேலு முதலியார் - நூல்: அபிதான சிந்தாமணி
***********

சமண சமயப் பண்டிகையே தீபாவளி
தீபாவளி சமணரிட மிருந்து இந்துக்கள் பெற்றுக் கொண்ட பண்டிகை. கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் பாவாபுரி நகரிலே அவ்வூர் அரசனுடைய அரன்மனையிலே தங்கி இருந்தபோது அங்குக் குழுமி இருந்த மக்களுக்கு அறிவுரை செய்தருளினார். இரவு முழுவதும் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது. வைகறைப் பொழுது ஆனபடியினாலே சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் அனைவரும் தத்தம் இல்லம் செல்லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கி விட்டனர்.

வர்த்தமான மகாவீரரும் அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்தபடியே இயற்கை எய்தினார். பொழுது விடிந்து எல்லோரும் விழித்தெழுந்து பார்த்தபோது மகாவீரர் இயற்கை எய்தி இருப்பதைக் கண்டு அரசனுக்கு அறிவித்தனர். அவ்வரசன் மற்ற அரசர்களை வரவழைத்து அவர்களோடு யோசனை செய்து உலகத்திற்கு அறிவொளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவு கூர்ந்து வழிபடும் பொருட்டு அவர் இயற்கை எய்திய நாளில் வீடு தோறும் விளக்குகளை ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். அது முதல் இந்த விழா (தீபம் = விளக்கு, ஆவலி = வரிசை; தீபாவலி) மகாவீரர் விடியற்காலையில் இயற்கை எய்தியபடியால் தீபாவளி என்ற பெயரில் விடியற்காலையில் கொண்டாடப்படுகிறது. விடியற்காலையில் நீராடிய பின்னர் திருவிளக்கு ஏற்றித் தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறதன்றோ!

சமண சமயம் வீழ்ச்சி அடைந்த பிறகு சமணர்கள் பெருவாரியாக இந்து மதத்தில் சேர்ந்தனர். சேர்ந்த பிறகும் அவர்கள் வழக்கமாக இந்தப் பண்டிகையைக் கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்க முடியாத ஆரியர்கள் இதைத் தாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் பொருத்தமற்ற புராணக் கதைகளைக் கற்பித்துக் கொண்டார்கள். திருமால் நரகாசுரனைக் கொன்றார் என்றும், அவன் இறந்த நாளைக் கொண்டாடுவதுதான் தீபாவளி என்றும் கூறப்படும் புராணக்கதை பொருத்தமானது அன்று. அன்றியும் இரவில் போர் புரிவது பண்டைக்காலத்து இந்தியப் போர் வீரர்களின் முறையும் அன்று. சூரியன் புறப்பட்ட பிறகுதான் போரைத் தொடங்குவது பண்டைக் காலத்துப் போர் வீரர்கள் நடைமுறையில் கொண்டிருந்த பழக்கம். சமணர் கொண்டாடி வந்த மகாவீரர் இயற்கை எய்திய நினைவு நாள் தீபாவளி என்பதில் அய்யமில்லை. ஆனால் இந்தப் பண்டிகையை ஏற்றுக் கொள்ளும் மனம் இல்லாமல் புதிதாகக் கற்பித்துக் கொண்ட கதைதான் நரகாசுரன் கதை.
-------------ஆசிரியர்: கல்வெட்டாராய்ச்சி அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி நூல்: சமணமும் தமிழும் பக்கம்: 79-80
***********

அறிவுக்குப் பொருத்தமற்ற கதை
வர்த்தமான மகாவீரர் கடைசி சமண தீர்த்தங்கரர். அவர் பாவாபுரி அரசன் அரண்மனையில் தங்கி அங்குக் கூடி இருந்த மக்களுக்கு இரவு முழுவதும் அறிவுரைகள் செய்தார். நெடுநேரம் விழித்த காரணத்தால் மக்கள் அவ்விடத்திலேயே உறங்கி விட்டனர். மகாவீரரும் தான் இருந்த இடத்திலேயே வீடு பேறு அடைந்தார். பொழுது விடிந்தது. எல்லாரும் விழித்து எழுந்தனர். மகாவீரர் வாழ்வு நீத்ததைக் கண்டனர். அரசன் சான்றோருடன் கூடி யோசித்தான். மகாவீரரை மக்கள் ஆண்டு தோறும் நினைத்து வழிபடுவதற்காக அவர் வீடு பெற்ற நாளில் ஒவ்வொரு வீட்டிலும் விளக்குகள் ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். (தீபம் - விளக்கு; ஆவலி - வரிசை, தீபாவலி - விளக்கு வரிசை) மகாவீரர் விடியற்காலையில் வீடுபேறு அடைந்தார். ஆதலால் தீபாவளி விடியற்காலையில் மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த உண்மை நிகழ்ச்சி மறைக்கப்பட்டு அறிவுக்குப் பொருத்தமற்ற நரகாசுரன் கதை பிற்காலத்தில் இந்துக்களால் கட்டி விடப்பட்டது என்பது அறிஞர் கருத்து. சமண சமயம் செல்வாக்கு இழந்த காலத்தில் சமணர்கள் சைவ வைணவங்களைத் தழுவினர். அந்நிலையிலும் தீபாவளியைக் கொண்டாடினர். அப்பழக்கம் பிற சமயத்தாரிடையேயும் நாளடைவில் புகுந்துவிட்டது. சமண சமயத்தைச் சேர்ந்த மார்வாரிகள், குஜராத்திகள் முதலியோர் இன்றும் தீபாவளியை மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருவதற்கு இது ஏற்ற சான்றாகும்.
------------------ஆசிரியர்: டாக்டர் மா.இராசமாணிக்கனார்
நூல்: தமிழர் நாகரிகமும், பண்பாடும் பக்கம்: 33, 34

ஜாதியைக் காப்பாற்றும் பல சாதி அபிமானிகளுக்கு ஓர் எச்சரிக்கை



சாதியைக் காப்பாற்றும் பலசாதி அபிமானிகளே! ஆதியில் ஏற்பட்ட நான்கு சாதிகள், 4,000 சாதிகளாகப் பிரிந்ததற்குக் காரணம் ஒரு சாதியும், மற்றொரு சாதியும் மாறிமாறிக் கலந்ததால் ஏற்பட்டது என்று குறித்தும், அப்படி இருந்தும் இன்னும் நம்மவரிலேயே ஒரு கூட்டத்தார் அதாவது, தங்களை ‘வேளாளர்' என்று சொல்லுபவர்களில் ஒரு சிலர் மேற்படி சாதிக் கிரமத்தை அதாவது ‘ஆதிசாதி' என்பவைகளான பிராமணன், ஷத்ரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற கிரமத்தை ஒப்புக் கொண்டு தங்களை மாத்திரம் ‘சற்சூத்திரர்' என்று அழைத்துக் கொண்டும், மற்றொரு சிலர் அச்சாதிக் கிரம வார்த்தைகளை வடமொழிப் பெயர்களால் சொல்லாமல் தென்மொழிப் பெயரால் சொல்லிக் கொள்கின்றனர்.

அதாவது அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என நான்கு ஆகப் பிரித்து அவை தமிழ் நாட்டில் ஆதியிலேயே அதாவது ஆரியர் வருவதற்கு முன்னாலேயே இருந்தனவென்றும், அவற்றிலும் தாங்கள் நாலாம் சாதி என்றும், ஒரு கற்பனையைக் கற்பித்துக் கொண்டு அப்படிப்பட்டவர்களான தாங்கள் நால்வருக்கும் தொண்டு செய்ய அடிமையாய் இருக்க வேறு பல சாதிகள் ஏற்பட்டு இருப்பதாகவும் அவர்கள்தான் "பள்ளு, பறை பதினெட்டுச் சாதிகள்' என்பது என்றும் ஒரு புதிய ஏற்பாட்டைச் சொல்லி ஒரு வழியில் திருப்தி அடைந்து வருகிறார்கள்.

அந்தப்படிக் கூறப்படும் "பள்ளு, பறை பதினெண் குடிமக்கள்' என்பவர்களைக் குறிக்கும் முறையில் பணி செய்யும் பதினெண்வகைச் சாதியார் என்னும் தலைப்பின் கீழ் குறிக்கப்பட்டிருப்பது என்னவென்றால் இலை வாணிகன், உப்பு வாணிகன், எண்ணெய் வாணிகன், ஒச்சன், கல்தச்சன், கன்னான், குயவன், கொல்லன், கோயிற்குடியன், தச்சன், தட்டõன், நாவிதன், பள்ளி, பறையன், பாணன், பூமாலைக்காரன், வண்ணான், வலையன் என்று அகராதியில் உள்ளது.

ஆனால், இதே பதினெண் மக்களை "அபிதான÷காசம்' என்னும் ஆராய்ச்சி நூலில் காண்கின்ற விவரப்படி குறிக்கின்றது என்னவெனில் ஏவலாள்களாக சிவிகையர், குயவர், பாணர், மேளக்காரர், பரதவர், செம்படவர், வேடர், வலையர், திமிலர், கரையார், சான்றார், சாலியர், எண்ணெய் வாணிகர், அம்பட்டர், வண்ணார், பள்ளர், புலையர், சக்கிலியர் எனப் பதினெண் பெயர்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன.

மற்றபடி, இவற்றிற்கு எவ்வித தத்துவார்த்தம் சொல்லுவதானாலும் அதை ­டர்கள் முன்னால் மாத்திரம் சொல்லிக் கொள்ளக்கூடுமே தவிர, சாதிக்கும் சாதியைக் கற்பித்த மதத்திற்கும், இவ்விரண்டிற்கும் ஆதாரமான வேதம், சாஸ்திரம், தர்மம் என்று சொல்லப்பட்ட ஆதார நூல்களில் இருக்கும் உண்மைகளுக்கும் எவ்வித ஆட்சேபணையும் எவ்வித தத்துவார்த்தமும் சொல்ல முடியாது என்பதையும் யாதொரு பதிலும் சொல்லாமல், பேசாமல் இழிவை ஒப்புக்கொண்டுதான் தீரவேண்டியதாகும்.

இவை ஒருபுறமிருக்க, இந்தச் சாதிக் கிரமத்தில் பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் யோக்கியதைகளையும் உரிமைகளையும் பார்ப்போமானால், கடுகளவு பகுத்தறிவோ, மானமோ இருக்கின்ற மனிதர்கள் ஒரு காலமும் தங்கள் சாதிப்பேரைச் சொல்லிக் கொள்ள முடியாதபடியும், அதைக் கனவிலும் நினைக்கமுடியாத படியும் இருப்பதை நன்றாய் உணரலாம்.

எந்தக் காரணத்தாலோ இந்துமத தர்மத்தை கடைப்பிடித்துத் தீர வேண்டியதல்லாத ஓர் ஆட்சி, இந்த நாட்டுக்கு ஏற்பட்டதன் பலனால் நம்மில் சிலராவது இந்தத் தர்மங்கள் முழுவதும் வலியுறுத்தப்படாமல் இருக்க முடிகின்றது. ஆனால், இந்த நிலையாலும் நாம் மறுபடி நமது சாதியையும் மதத்தையும் காப்பாற்றும் கவலைகொண்டு, ஒவ்வொருவரும் தங்கள் தங்களுக்கு என்று மதத்தையும் சாதியையும் சொல்லி அவற்றை நிலைநிறுத்திக் கொண்டே போவோமானால், பின்னால் நமது நிலை என்னாகும் என்று யோசித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம். இந்துக்கள் என்பவர்களுக்குள் சாதிப் பிரிவு இருக்கும்வரை உயர்வு தாழ்வு போகாது என்பது கண்டிப்பாகும்.

இந்தியாவில் இந்துக்களில் 1000க்கு 999 பேருக்குக் குறையாமல் சாதி வித்தியாசத்தை ஒழிக்க வேண்டுமென்ற எண்ணமில்லாதவர்களாய் இருப்பதோடு, ஒவ்வொருவரும் மேல்சாதி ஆகவேண்டுமென்று ஆசைப்படுபவராகவும் தனக்குக் கீழ் பல சாதிகள் இருக்க வேண்டுமென்ற உணர்ச்சி உள்ளவர்களாகவுமே இருக்கின்றார்கள். இன்றைய தினம் இந்த நிலையில் இருக்கும் பல சவுகரியங்களை ஒழித்துவிட்டு, வருணாசிரமக் கொள்கையும், சாதி ஆதிக்கமும் உடையவர்களான மக்களிடம் ஆட்சி வந்துவிட்டால், பிறகு எவ்விதத்திலும் சாதிக் கொடுமைகள் ஒழியாது.

(‘குடி அரசு' தலையங்கம் 30.11.1930)

அம்பேத்கரை ஆதரிப்பது ஒவ்வொரு சுயம‏ரியாதைக்காரரின் கடமை



எந்த விஷயத்துக்கும் கொள்கைகளுடன் அனுபவ ஞானமும் இருந்தால்தான் அதை மனிதத்தன்மை என்று சொல்லலாமே ஒழிய, மற்றபடி அனுபவ சாத்தியத்துக்கு இணங்காத கொள்கைகள் எதுவானாலும் அதைப் புஸ்தகப் பூச்சி என்றுதான் சொல்ல வேண்டும்; அல்லது வெறும் அபிப்பிராயத்துக்கு மாத்திரம் பெறுமானவர்களே ஒழிய, காரியத்திற்குப் பெறுமானவர்கள் அல்ல என்று சொல்ல வேண்டும்.

வெளிப்படையாய் நாம் பேசுவதானால், அம்பேத்கரும், அவரைப் பின்பற்றுவோரும் நாஸ்திகர்களாவதற்கும், மதமில்லாதவர்கள் ஆவதற்கும் இஷ்டமில்லாமல், அவர்கள் மீது இருக்கும் தீண்டாமை மாத்திரம் ஒழிய வேண்டும் என்று ஆசைப்பட்டு, அதற்காக முகமதியராகி விடலாம் என்று அவர்கள் கருதினால், அதில் நமக்கு இருக்கும் ஆட்சேபனை என்ன என்று கேட்கின்றோம்.

முகமதிய மதத்தில் பல கெடுதிகள் இருக்கலாம்; கோஷம் இருக்கலாம்; கடவுள் இருக்கலாம்; மூடநம்பிக்கை இருக்கலாம்; மதச் சின்னம், மதச் சடங்கு இருக்கலாம்; சமதர்மமில்லாமலும் இருக்கலாம். இதெல்லாம் யாருக்குக் கூடாது? சுயமரியாதைக்காரருக்கு கூடாததாய் இருக்கலாம். மற்றும் பெண்ணுரிமை மாத்திரம் பேணுவோருக்கு முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்; மூடநம்பிக்கை அனுஷ்டிக்காதவர்களுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்; மதவேஷமும் பயனற்ற சடங்கும் வேண்டாதவருக்கு முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்; நாஸ்திகர்களுக்கும், பகுத்தறிவுவாதிகளுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்; சமதர்மவாதிகளுக்கும், பொதுவுடைமைக்காரர்களுக்கும் முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்.

ஆனால், தீயர்கள், பறையர்கள், புலையர்கள், நாயாடிகள் என்று அழைக்கப்படுகின்ற ஒதுக்கப்பட்டிருக்கின்ற, தாழ்த்தப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு, நாயிலும், மலத்திலும், புழுத்த விஷக்கிருமிகளிலும் கேவலமாக மதிக்கப்பட்டு வருகிற மக்களிடம் தங்கள் மீது இருக்கும் தீண்டாமை மாத்திரம் ஒழிந்தால் போதும் என்று கருதிக்கொண்டிருக்கும் மக்களிடம் நமக்கு வேலை உண்டா இல்லையா என்று கேட்கின்றோம்.

ஏனெனில், அவன் கிறிஸ்தவனாகி, கிறிஸ்தவப் பறையன், கிறிஸ்தவச் சக்கிலி, கிறிஸ்தவ பிள்ளை, கிறிஸ்தவ நாய்க்கன் என்று தீண்டாதவனாகவே இருப்பதைவிட, பறத்துலுக்கன் என்றோ, சக்கிலிய முகமதியன் என்றோ, தீய முஸ்லிம் என்றோ அழைக்க இடமில்லாமலும் அழைக்கப்படாமலும் இருக்கும்படியான நிலையிலும் மற்றசமூகக்காரர்களோ மதக்காரர்களோ அவ்வளவு சுலபமாக இழிவுபடுத்தவோ, கொடுமையாய் நடத்தவோ முடியாத சுயமரியாதை அனுபவமும் உள்ள நிலையிலும் இருக்கும் ஒரு மதத்திற்கு, "எப்படியாவது தீண்டாமையை ஒழித்துக் கொள்ள வேண்டும்'' என்கின்றவன் போனால், இதில் சுயமரியாதைக்காரனுக்கு என்ன நஷ்டம் என்று கேட்கின்றோம். அன்றியும், "சரி, எப்படியாவது சீக்கிரத்தில் தீண்டாமையை ஒழித்துக் கொள்'' என்று சொல்வதிலும் என்ன தப்பு என்றும் கேட்கின்றோம்.

நமக்குக் கடிதம் எழுதின நண்பர், "இந்து மதத்தில் தீண்டாமை இருக்கிறது; இஸ்லாம் மதத்தில் பார்க்காமை இருக்கிறது; பெண்களுக்கு உறை போட்டு மூடிவைத்து இருக்கிறார்கள்'' என்று எழுதி இருக்கிறார். அது (உறை போட்டு வைத்திருப்பது) உண்மை என்றும், தவறானது என்றுமே வைத்துக் கொள்ளுவோம். இது, பெண்ணுரிமை பேணுவோர்கள் கவனிக்க வேண்டிய காரியமே ஒழிய, தீண்டாமை விலக்கு மாத்திரம் வேண்டும் என்று கருதுகின்றவர்கள் யோசிக்க வேண்டிய காரியம் அல்ல என்பது நமது அபிப்பிராயம்.

இந்து மதம் சீர்திருத்தம் அடைந்து வருகிறது என்றும், தீண்டாமை ஒழிக்கப்பட்டு வருகிறது என்றும், சில மூடர்களும், சூழ்ச்சிக்காரர்களும் சொல்லுகிறார்கள். அதை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இந்து மதம் சீர்திருத்தமடைந்து வரவில்லை; இந்து மதம் ஒழிந்து வருகின்றது என்றுதான் சொல்லுவோம். இந்து மதத்தில் சீர்திருத்தத்திற்கு இடமில்லை; அதைச் சீர்திருத்தம் செய்ய யாருக்கும் அதிகாரமும் இல்லை. இந்து மத ஆதாரங்கள் என்பவை அம்மத வேதம், சாஸ்திரம், புராணம் என்று சொல்லப்படுபவைகளைப் பொறுத்ததே ஒழிய, சாமிகள் என்றும், மகாத்மாக்கள் என்றும், தங்களுக்குத் தாங்களே பட்டம் சூட்டிக் கொள்ளும் சில விளம்பரப் பிரியர்களைப் பொறுத்தது அல்ல.

இப்படிப்பட்ட கூட்டங்களுக்கு அனுகூலம் செய்ய, சில தீவிர சுயமரியாதைக்காரர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளுகின்றவர்கள், அம்பேத்கர் வேறு மதத்துக்குப் போவதை அனுமதிக்கக் கூடாது என்றால் அது நியாயமாகுமா? அல்லது ஒன்றும் பேசாமல் சும்மா இரு என்பதுதான் நியாயமாகுமா? ஆதலால், அம்பேத்கருடைய முடிவை நாம் மனமார ஆதரிப்பதுடன், அம்முடிவுப்படி சரியான செயலுக்கு நம்மாலான உதவியளிக்க வேண்டியதும் ஒவ்வொரு சுயமரியாதைக்காரருடையவும் கடமையாகும் என்பது நமது அபிப்பிராயம்.

(17.11.1935 "குடி அரசு' இதழில் எழுதிய தலையங்கம்)

Wednesday 19 October 2011

அம்பேத்கர் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்

 அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் என்று கூறுவது தவறு. அவர் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறினார்.

14.4.2011 வியாழக்கிழமை அம்பேத்கர் பிறந்த நாள் அன்று காலை 10 மணிக்கு சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு, சேலம் மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் சார்பாக, மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

அன்று மாலை 7 மணிக்கு, சேலம் போஸ் மைதானத்தில், அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக் கூட்டம் நடை பெற்றது. சமர்பா குமரன் யோகராணி கலைக் குழுவினரின் எழுச்சிப் பாடல்களோடு துவங்கிய இப்பொதுக் கூட்டத்திற்கு, தமிழக ஒடுக்கப் பட்டோர் விடுதலை இயக்க மாவட்ட செயலாளர் இளமாறன் தலைமை ஏற்றார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் நிலவன், தமிழக மக்கள் உரிமை கழக ஒருங் கிணைப்புச் செயலர் வழக்கறிஞர் புகழேந்தி, த.ஒ.வி.இ. துணைப் பொதுச் செயலாளர் தமிழ் நேயன், அறிஞர் அம்பேத்கர் அமைப்புச் சாரா தொழிலாளர் முன்னேற்றச் சங்கத் தலைவர் அரங்க. செல்லத் துரை, தாய்மண் கல்வி பண்பாட்டு இயக்கம் வழக்கறிஞர் நெப்போலியன் ஆகியோர் உரை யாற்றினர்.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையின் சுருக்கம்:

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று அரசே அறிவித்தப் பின்னாலும், இன்று தமிழ்ப் புத்தாண்டு என்று அனைத்து தொலைக் காட்சி களிலும் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிற இந்த ஏப்ரல் 14 இல், அம்பேத்கரை நினைவுபடுத்தி பேசுவதற்காக அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் கூடியிருக்கிறோம். புரட்சியாளர் அம்பேத்கரை நாம் எப்படி புரிந்து கொள்ள வேண்டும்? நாம் ஏன் அவரை மற்றவர்களிடம் இருந்து பிரித்து வேறுபடுத்தி தனித்துவமாக பார்க்கிறோம் என்பதில்தான் அம்பேத்கருக்கு பிறந்த நாள் எடுப்பதன் பலனாக இருக்கும். புரட்சியாளர் அம்பேத்கர் பல சிறப்புகளை கொண்டவர். அவர் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்திருந்தாலும், வெளிநாடுகளுக்கு சென்று படிக்கிற வாய்ப்பினைப் பெற்றார். அங்கு போய் ஆய்வு பட்டங்களையும், பல உயர் பட்டங் களையும் பெற்றார். தத்துவ துறையில், பொருளியல் துறையில், சட்டத் துறையில் பட்டங்களைப் பெற்று திரும்பி வந்தார் என்றால் பெயருக்கு பின்னால் போட்டுக் கொள்வதற்காக அல்ல.

இந்த இந்திய சமுதாயத்தை திருத்த பலர் வந்தார்கள். இந்த சமுதாயத்தில் இருக்கிற கேடுகளை நீக்க வேண்டும் என்பது அவர்களின் எண்ணமாக இருந்தது. ஆனால், இந்த சமுதாயத்தை மிகச் சரியாக புரிந்து கொண்டவர்கள் சிலர் மட்டுமே. ஜோதிபா புலே தொடங்கி வைத்த புரட்சியை, சரியான பார்வையை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் போன்றவர்கள்தான் எடுத்துச் சென்றார்கள். மற்றவர்கள் எல்லாம் இருந்ததை மெல்ல சீர்திருத்தி, கொஞ்சம் மாற்றி, அதற்கு புதிய வண்ணத்தைப் பூசிவிட்டு செல்வதாக இருந்த காலத்தில், அடிப் படையையே மாற்றியாக வேண்டும் என்று எண்ணிய தலைவர், அதற்காக தனது முழு அறிவை, உழைப்பை, எல்லாவற்றையும் பயன்படுத்திய தலைவர், தத்துவத் துறையில் ஆய்வு செய்யப் போனவர், ஆய்வு மாணவராக இருந்த காலத்தில் ஒரு ஆய்வு கட்டுரை எழுதுகிறார். இந்திய சாதியினுடைய தோற்றம், அதன் செயல்பாடு ஆகியவற்றை ஆய்வு செய்து மாந்தவியல் துறையில் அந்த அறிக்கையை தருகிறார். அவருடைய இருபத்தி ஐந்தாம் வயதில், அவர் ஆற்றிய ஆய்வுரை இன்றைக்கு வரைக்கும் எல்லா விதத்திலும் அதை நாம் புரட்டிப் பார்க்கிற பொழுது, இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஆற்றப்பட்ட உரை. இந்த சமுதாயத்தின் கேடுகளாக, இந்த சமுதாயத்தின் நோயை தீர்ப்பதற்கான வழியாக அவர் சொன்னதைத் தான் நாம் மீள் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.

அவர் மகத் மாநாட்டில் பேசினார். பல இடங்களில் பல செய்திகளை பதிவு செய்தார் என்றாலும், லாகூர் மாநாட்டில் அவர்ஆற்ற இருந்த உரை (ஆற்றிய உரை அல்ல) சாதி ஒழிப்பு சங்கத்தார் என்ற அமைப்பைச் சார்ந்தவர்கள் இவரை தலைமை தாங்கி, தலைமை உரையாற்ற அழைக்கிறார்கள். இவர் உரையை எழுதி அனுப்புகிறார். அதை படித்து பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்துவிடுகிறார்கள். இந்த சாதி ஒழிப்புக்காக அவர் சொல்லுகிற வழிமுறைகளைப் பார்த்து அதிர்ச்சி அடைய காரணம்... “இந்து சாஸ்திரங்களின் அதிகாரங்கள் தகர்க்கப்பட வேண்டும். அக மண முறை ஒழிக்கப்பட வேண்டும். இந்து மதம் தகர்ந்தாக வேண்டும். அர்ச்சகர் ஆகும் உரிமையை, உரிய பட்டயம் பெற்றால் அனைத்து சாதியினருக்கும் அளிக்க வேண்டும் என்பதையெல்லாம் வழிமுறையாக சொல் கிறார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் கொஞ்சம் மாற்றிக் கொள்ள சொல்லி கேட்கிறார்கள். அதில் ஒரு கால் புள்ளியை மாற்றவும் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். வேண்டாம் என்றால் திருப்பி அனுப்பி விடுங்கள்” என்று அம்பேத்கர் கேட்கிறார். மாநாட்டையே ஒத்தி வைத்து விடுகிறார்கள்.
நாம் புரட்சியாளர் அம்பேத்கரை, அவரின் கொள்கைகளை புரிந்து கொள்ள வேண்டுமானால், ஒவ்வொருவரும் படிக்க வேண்டியது அந்த நூல். அவர் ஆற்ற இருந்த உரையை நூலாக வெளியிட்டார். நூல் வெளி வந்த இரண்டாம் மாதத்தில், அம்பேத்கரின் அனுமதியோடு தமிழில் பெரியார் வெளியிட்டார். அந்த நூல் தாங்கியிருந்த சிந்தனையைதான் பெரியாரும் கொண்டிருந்தார். அரசியல் நிலைபாடுகளில் இருவருக்கும் சிறு சிறு மாற்றங்கள் இருந்திருக்கலாம். அம்பேத்கர் ஒன்றுபட்ட இந்தியாவை விரும்பினார். பெரியார் தனித் தமிழ்நாடு பேசினார். இந்தி ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று அம்பேத்கர் விரும்பினார். பெரியார் இந்தி கூடாது என்று சொன்னார். அரசியல் நிலைகளில் அவரவர்களுக்கு இருந்த கருத்தின் அடிப்படையில் சொன்னார்கள். தாழ்த்தப்பட் டோரின் குடியிருப்பை பிற சாதியினர் வாழும் பகுதிகளில் நிறுவ வேண்டும் என்பது பெரியாரின் கருத்தாக இருந்தது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனிக் கிணறு வெட்ட காங்கிரஸ் நிதி அனுப்பியது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த பெரியார் வந்த நாற்பத்தி எட்டாயிரம் ரூபாயை திருப்பி அனுப்பினார். பொதுக் கிணற்றில் நீர் எடுக்க போராட வேண்டுமே தவிர தனிக் கிணறு கூடாது என்பது பெரியார் கருத்து. இன்னொரு பக்கம் அம்பேத்கர் தனிக் குடியிருப்பு வேண்டும் என போராட்டம் நடத்தினார். இப்படி பார்த்தால் அவர்களின் கோரிக்கைகளில் வேறுபாடுகள் போல தெரியும். ஆனால் அடி நீரோட்டமாய் இருவர் கருத்தும் சாதி ஒழிப்பே சமூக விடுதலை என்பதாகத் தான் இருந்தது.

பல பேர் படிக்கிறார்கள், பட்டம் பெறுகிறார்கள், தனி மனித வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள் கிறார்கள். ஆனால் புரட்சியாளர் அம்பேத்கர் தான் பெற்ற அறிவை, கல்வியை, பதவியை அனைத்தையும் சமூக மேம்பாட்டிற்காக, சமூக மாற்றத்திற்காக பயன்படுத்திய தலைவர். 1935 இல் மராட்டியத்தில், பம்பாய் மாகாணத்தில் சட்டமன்றத்திற்கு உறுப் பினராக நியமிக்கிறார்கள். நியமனம் பெற்று அவர் ஆற்றிய முதல் உரையிலேயே அங்கிருந்த நில உடமை யாளர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து பேசுகிறார். ஆங்கில அரசு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு செய்த துரோகங்கள் பற்றி பேசுகிறார். அவர் ஒரு நியமன உறுப்பினராக இருந்தும், நியமித்தவர்களையே விமர்சித்து பேசுகிறார். அவர் பதவி முக்கியம் எனக் கருதவில்லை. அவர் சமஸ்கிருதம் படித்தார், வேதங்களை படித்தார், புராணங்களை படித்தார், சாஸ்திரங்களை படித்தார். எதற்கு பயன்படுத்தினார்? இந்திய சமுதாயத்தில் சாதிய பிடியில் இருந்து மக்களை எப்படி காப்பாற்றுவது என்று அறிவதற்குப் படித்தார். மனுதர்மத்தைப் பற்றி அவர் செய்த ஆய்வு, யாருடனும் ஒப்பிட முடியாத அளவிற்குரிய ஆய்வாகும். மனுதர்ம சாஸ்திரத்திற்கு முன்னால் இருந்த காலத்தில் அனைவருக்கும் இருந்த உரிமைகளை எடுத்துக் காட்டினார். அவர் ஒவ்வொரு நாட்டின் சரித்திரங்களை படித்து, அடிமைத் தனத்தைவிட கொடுமையானது தீண்டாமைதான் என்பதை பல அடிமைத்தனத்தோடு ஒப்பிட்டு எழுதினார்.

அம்பேத்கர், வைஸ்ராய் கவுன்சில் உறுப்பினராக (இன்றைய மத்திய அமைச்சருக்கு இணையான பதவி) தேர்ந்தெடுக்கப்பட்டார். பதவி ஏற்பதற்கு முன்னால் நாக்பூரில் ஒரு மாநாட்டைக் கூட்டினார். கற்பி போராடு ஒன்று சேர் என்ற வாசகங்களை பேசியது அந்த மாநாட்டில்தான். பெண்கள் உரிமைக்காக தனியாக ஒரு மாநாடு, சமத்துவ தொண்டர் படை என்ற ஒரு மாநாடு, காந்தியோடு முரண்பட்டிருந்த அம்பேத்கர், இம்சைக்கு எதிரான சொல்தான் அகிம்சை. சாதியவாதிகளால் தாக்கப்பட்டால் திருப்பி தாக்கலாம் என்பதை தனது தொண்டர் களுக்கு சொன்னார்.

தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளி என விளம்பரம் செய்து, அம்பேத்கரை தாழ்த்தப்பட்ட வர்களின் தலைவராக சுருக்கிவிட்டார்கள். தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளி என்றோ அரசியல் சட்டத்தை எழுதியவர் என்றோ சொல்வது அவருக்கு பெருமை அல்ல. அவர் சொன்னார்... இந்து சமுதாயத்திற்கு வேதங்கள் தேவைபட்டது தாழ்த்தப் பட்ட வியாசனை வைத்துக் கொண்டார்கள். அவர்களுக்கு இதிகாசம் தேவைபட்டது. தாழ்த்தப்பட்ட வால்மீகியை வைத்து எழுதிக் கொண்டார்கள். இவர்களுக்கு அரசியல் சட்டம் தேவைப்பட்டது. என்னைப் பயன்படுத்திக் கொண்டார்கள். அப்படித்தான் சொன்னார். இவர்கள் எங்கு போனாலும் தாழ்த்தப்பட்ட மக்களை பயன்படுத்தித்தான் தங்கள் உயர்வை நிறுவிக் கொண்டார்கள் என்று சொன்னார். நான் இந்த சட்டத்திற்கு கட்டுப்பட்டவன். ஆனால் மதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொன்னவர் அவர்தான். அவர் எழுதிய சட்டத்தைப் பற்றி. நான் வாடகை குதிரையாக பயன்படுத்தப்பட்டேன், என்னுடைய விருப்பத்திற்கு எதிராக பலவற்றை எழுதினேன் என்று சொன்னார். பேனாவை பிடித்தது மட்டும்தான் என் கை, அதை ஆட்டுவித்தவர்கள் பார்ப்பனர்கள் என்றும் சொன்னார். ஆந்திர பிரிவினை விவாதத்தின்போது பேசியவர்கள், ‘நீங்கள் தானே சட்டத்தை எழுதினீர்கள்’ என்று கேட்டனர். அவா சொன்னார்... ‘ஆம் நான் தான் எழுதினேன். அதை எரிக்கும் முதல் ஆளாக நான்தான் இருக்கப் போகிறேன்’ என்று. அரசியல் வரைவு குழுவிற்குள் நுழைந்தபோது, என்னுடைய மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை தவிர, எனக்கு வேறு எந்த ஆசையும் இருக்கவில்லை என்று சொன்னார்.

‘பெட்டி திருட்டுப் போனாலும் சாவி என்னிடம் இருக்கிறது என்றானாம் நாயர்’ என்று மலையாள பழமொழி ஒன்று இருக்கிறது. அதுபோல அரசியல் சட்டத்திற்கு விளக்கம் சொல்பவர்கள் பார்ப்பனர் களாக இருக்கிறார்கள். ஆனால் எழுதப்பட்ட அரசியல் சட்டங்களில் பலவற்றை அம்பேத்கர் செய்தார். எட்டு மணி நேர வேலை என்பதை வலியுறுத்தி, பிரஞ்சு இந்தியாவில் பாண்டிச்சேரியில் மட்டும் ஒரு போராட்டம் நடந்திருக்கிறது. பிரிட்டிஷ் இந்தியாவில் யாரும் போராடவில்லை. அம்பேத்கர் தொழிலாளர் துறை அமைச்சராக இருந்தபோது, அதற்கான சட்டத்தை கொண்டு வந்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் செய்ததா அது? பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்பதை கொண்டு வந்தவர் புரட்சியாளர் அம்பேத்கர் தான்.

அரசியல் சட்டம் எழுதப்பட்டபோது, தாழ்த்தப் பட்ட மக்களுக்கு மட்டும் தான் அம்பேத்கர் இட ஒதுக்கீட்டை வைத்தார். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வைக்கவில்லை என்று அவர் மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கிறார்கள். இதில் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தாழ்த்தப் பட்டவர்களுக்கு மட்டும் தான் பட்டியல் இருந்தது. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பட்டியல் இல்லை. 1935 ஆம் ஆண்டு சட்டத்திற்கு முன்னாலேயே இரண்டு பட்டியலை தயாரித்து இருந்தார்கள். ஒன்று தீண்டாமைக்கு உட்பட்ட மக்கள், மற்றொன்று பொதுச் சமுதாயத்திலிருந்து விலகி, தனித்து வாழும் மக்கள். இந்த மக்களை பட்டியல் இன மக்கள் என தனியாக பிரிந்தார்கள். இந்த பட்டியலில் இருந்தவர்களுக்கான இடத்தை ஒதுக்கி அவரால் எழுத முடிந்தது. பட்டியலில் இல்லாத பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசியல் சட்டத்தில் 340 என்ற ஒரு பிரிவை எழுதினார். அரசு ஒரு ஆணையத்தை அமைத்து, சமுதாயத்திலும், கல்வியிலும் பின் தங்கியிருக்கும் மக்களின் பட்டியலை தயாரித்து, அவர்களின் மேம்பாட்டிற்கு செயல்பட வேண்டும் என்பதுதான் அந்த 340 ஆவது பிரிவு. எழுதியதோடு நிற்கவில்லை. அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளில் அவர் பதவியில் இருந்து விலகினார். பதவியில் இருந்து விலகுவதற்கு சில காரணங்களை கடிதத்தில் எழுதியிருந்தார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஆணையம் அமைத்து, அவர்களின் மேம்பாட்டிற்கு செயல்பட வேண்டும் என்று சட்டம் இயற்றி ஒன்றரை ஆண்டுகள் ஆகியும், அதற்கான ஆணையம்கூட அமைக்கவில்லை என்பது, அவர் பதவி விலக எழுதிய காரணங்களில் ஒன்று. இப்படிப்பட்டவரைத்தான் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர் என்று சொல்கிறார்கள்.
இந்துமத புதிர்கள் என்று எழுதினார். இடஒதுக்கீடு என்பதைகூட, பதவி பெறும் நோக்கத்திற்காக அவர் சொல்லவில்லை. அனைத்து சமுதாய மக்களுக்கும், ஆட்சியிலும், அதிகாரங்களிலும் பங்கு இருக்க வேண்டும் என்பதுதான் அதற்கு அவர் கொண்ட பொருள். அவர் சொன்ன முறையும், அவருக்கு பின்னால் வந்தவர்கள் அதை எடுத்துக் கொண்ட முறையும் வெவ்வேறாக இருக்கிறது. நவீனத்துவத்தின் எதிரியாக இருந்தவர் காந்தி. அவருக்கு எதிர்ப்பைக் காட்டுவதற்கான அடையாளமாக, மிடுக்கான உடையோடும், பெருமித தோற்றத்தோடும் அம்பேத்கர் இருந்தார். அது அவர் விரும்பி ஏற்றுக் கொண்டதல்ல. ஆனால், அவருக்கு பின்னால் வந்த தலைவர்கள் அவரை போல் உடைகளை, காலணிகளை அணிவதுதான் அம்பேத்கரியம் என்று கருதிக் கொண்டார்கள். அவர் ஆட்சி அதிகாரத்தை, அரசியல் அதிகாரத்தை சமூக விடுதலைக்கு ஒரு வழியாக மட்டும் வைத்திருந்தார். இப்போது இவர்கள் அதை முடிந்த முடிவாக ஒரே இலட்சியமாக எடுத்துக் கொண்டுவிட்டார்கள். சமுதாயத்தின் மீது அவர் வைத்த பார்வை என்னவாக இருந்தது என்பதில் இருந்துதான் அம்பேத்கரை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய நாட்டின் விடுதலை பற்றி பேசுகிறபோது, இந்திய விடுதலைக்கு எதிரானவர்கள் என்ற குற்றச்சாட்டு பெரியார் மீதும், அம்பேத்கர் மீதும் உண்டு.

காங்கிரசை எப்போதும் எதிர்த்து வந்த அம்பேத்கர், காந்தியும், காங்கிரசும் தீண்டதகாதவர்களுக்கு செய்தது என்ன? என்று ஒரு புத்தகமாக எழுதி, இந்த மக்களுக்கு காந்தியும், காங்கிரசும் செய்த துரோகங்களை பட்டியலிடுகிறார். பல வீடுகளின் முன்னால் நாய்கள் இருக்கிறது எச்சரிக்கை என்ற பொருளில் “பிவேர் ஆப் டாக்ஸ்” என்று எழுதியிருப்பதைப்போல், அந்த புத்தகத்தின் இறுதி அத்தியாயத்திற்கு முந்தைய அத்தியாயத்தில், “பிவேர் ஆப் காந்தி” என்ற தலைப்பை அம்பேத்கர் எழுதியுள்ளார். தாழ்த்தப்பட்டவர் முன்னேற்றத்திற்காக பல முயற்சிகள் எடுத்ததில் ஒன்றாகத்தான், 1930 ஆம் ஆண்டு வட்டமேசை மாநாட்டிற்கு சென்று பல செய்திகளை எடுத்து வைத்தார். காங்கிரஸ் அப்போது கலந்து கொள்ளவில்லை. 1931 ஆம் ஆண்டு தான் காந்தி - இர்வின் ஒப்பந்தத்தின்படி வட்டமேசை மாநாட்டில் காந்தி கலந்து கொள்கிறார். (உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரி, இனி போராட்டம் நடத்த மாட்டோம் என்றும், வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்கிறேன் என்றும் போடப்பட்டதுதான் “காந்தி-இர்வின் ஒப்பந்தம்”)

1930 ஆம் ஆண்டு வட்டமேசை மாநாட்டிற்கு செல்வதற்கு முன்னால் காந்தியை சந்தித்து பல விவாதங்களை செய்து, நீங்கள் ஏன் எப்போதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு துரோகமே செய்கிறீர்கள் என்று கேட்டு விட்டுத்தான் அம்பேத்கர் மாநாட்டிற்குப் போனார். அந்த மாநாட்டில் அம்பேத்கர் வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பிரதமர், தாழ்த்தப்பட்டவர்களுக்கு இரட்டை வாக்குரிமை தனித்தொகுதி உண்டு என அறிவித்தார். அப்படி கூடாது என்று போராடினார் காந்தி. இசுலாமியர்களுக்கும், சீக்கியர்களுக்கும் தனித் தொகுதியை ஏற்றுக் கொண்ட காந்தி, தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்குவது, இந்துக்களை பிரிக்கும் சூழ்ச்சி என்றார். அம்பேத்கர் கேட்டார்... “இது வந்து தானா இந்துக்களை பிரிக்கப் போகிறது? நீங்கள் என்ன இணைத்தா வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? எப்போதும் எங்களை அரவணைத்துக் கொண்டா இருக்கிறீர்கள்? எப்போதும் பிரிந்திருக்கிற நாங்கள், இப்போதும் பிரிந்திருந்து நாங்கள் பெறப் போகும் மேம்பாட்டை ஏன் தடுக்கிறீர்கள்?” என்று.

சாகும் வரை உண்ணாவிரதம் என்று அறிவித்த காந்தியை பார்த்து அம்பேத்கர் கேட்டார்..... “நீங்கள் எப்போதாவது உங்களின் உச்சபட்ச கோரிக்கையான இந்திய நாட்டின் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்திருக்கிறீர்களா? எங்கள் உரிமையை பறிப்பதற்காக உண்ணாவிரதம் இருக்கிறீர்களே” என்று. “ஏழு கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளைவிட, ஒரு காந்தியின் உயிர் பெரிதல்ல, உறுதியாக நில்லுங்கள்” என்று. அப்போது வெளிநாட்டில் இருந்த பெரியார் அம்பேத்கருக்கு தந்தி கொடுத்தார். ஆனால், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் உரிமைகளை விட்டுக் கொடுக்க நேர்ந்தது. தொடர்ச்சியாக காந்தியின் சூதான போக்கினை எதிர்த்து நின்ற தலைவர்கள் பெரியாரும் அம்பேத்கரும்.

இந்த சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ள மக்களின் உரிமையைப் பற்றி, அவர்களுக்கான மேம்பாட்டு திட்டங்களை ஆய்வு செய்வதற்காக வந்ததுதான் சைமன் கமிஷன். அதை வரவேற்றவர்கள் இந்தியா முழுவதும் இரண்டே தலைவர்கள் பெரியாரும் அம்பேத்கரும் தான். எல்லோரும் எதிர்த்தார்கள். பெரியார் ஆதரித்து வந்த நீதிக் கட்சியும் எதிர்த்தது. அப்போது பெரியார் எழுதினார்... “சைமன் கமிஷனில் இந்தியர்கள் யாரையும் நியமிக்கவில்லை என்ற காரணத்தைச் சொன்னார்கள். மிண்டோ மார்லிக், மாண்டேகு சேம்ஸ்போர்டு வந்தபோதெல்லாம் கேட்காமல், இப்போது மட்டும் ஏன் கேட்கிறாய்? ரவுலட் சட்டத்தை ரவுலட் மட்டுமா எழுதினான்? குமாரசாமி சாஸ்திரியும் சேர்ந்துதானே எழுதினான். அதனால் என்ன பலன் கிடைத்தது? அவன் வீட்ல நான்கு பேருக்கு வேலை கிடைத்தது. நல்லது வந்தா மட்டும் நீ ஏற்றுக் கொள்கிறாய். கெட்டது வந்தா வாயை மூடிக் கொள்கிறாயே. நல்ல வேளையாக இந்தியர்கள் யாரையும் நியமிக்கவில்லை. நியமித்திருந்தால் பார்ப்பானை தான் நியமித்திருப்பான். அவன் எங்களுக்கு எதிராகத்தான் இருந்திருப்பான். எனவே இதை நான் வரவேற்கிறேன்” என்று எழுதினார்.

இரண்டாம் உலகப் போரில், இந்தியப் படையை ஆங்கில அரசு போரில் ஈடுபடுத்தியது. இதனால் இந்தியர்களுக்கு என்ன லாபம் என்று கண்டித்து காந்தி அறிக்கை விட்டார். எப்போதும் காந்தியை எதிர்க்கும் அம்பேத்கர் அப்போது வரவேற்றார். காந்தியார் கேட்ட கேள்வியில் நியாயம் இருக்கிறது வரவேற்கிறேன், அதே சமயத்தில் காந்தியாரிடம் எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. இந்திய விடுதலைப் போரில் தாழ்த்தப்பட்டவர்களை ஈடுபடுத்துகிறீர்களே! அதனால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்ன லாபம் இருக்கிறது என்று கேட்டார். அதைத்தான் இன்றும் சொல்கிறோம். தமிழ் தேசியம் பேசுகிற பல பேர் சிக்கல் இல்லாத பிரச்சினை என்பதற்காக பேசிக் கொண்டிருக்கிறார்கள். சாதி இல்லை என்று பேசினால்தான் சிக்கல் வரும். தமிழ் தேசியம் என்று சொன்னால் எந்த சிக்கல்களும் இல்லை. இந்திய நாட்டு விடுதலையின்போது அம்பேத்கர் கேட்டார். தமிழ்நாட்டிற்கு விடுதலை விரும்புகிற நாம் கேட்கிறோம், சாதி ஒழிப்பு இல்லாத தமிழ்நாட்டு விடுதலையில் நமக்கென்ன இருக்கிறது? சாதி ஒழிப்பை இலக்காகக் கொண்ட, அதை நோக்கமாகக் கொண்ட, அதை போராட்டத்தோடு இணைத்துக் கொண்ட தமிழ்நாட்டு விடுதலைக்கு நாம் போராடுவோம்.
பெரியார் கேட்ட தனித் தமிழ்நாடு, சாதி ஒழிந்த, பாலியல், பொருளியல் பேதமொழிந்த - பொது உரிமை கொண்ட பொதுவுடைமை சமத்துவ சமுதாயத்தைப் படைக்க வேண்டும் - தடையாகவே விளங்கும் பார்ப்பன, பனியா கும்பலிடம் இருந்து பிரிந்து, வடவர் சுரண்டலற்ற நாட்டை உருவாக்க வேண்டும் என்பதே பெரியார் கேட்ட தனிநாடு. சாதி ஒழிப்பே உண்மை விடுதலை என்பதை ஏற்றுக் கொள்வோம் என்று கூறி விடைபெறுகிறேன்.

Tuesday 18 October 2011

தீபா"வலி"யும் தமிழரும்!

உலகில் வாழும் அனைத்து இனங்களும் பல வகையான விழாக்களை ஆண்டு தோறும் கொண்டாடி வருகின்றன. போரில் வெற்றி பெற்ற நாள், விடுதலை அடைந்த நாள், வருடத்தின் முதன் நாள், கடவுளோ அல்லது கடவுளின் தூதரோ பூமிக்க வந்ததாக நம்பப்படுகின்ற நாள் என்று மகிழ்ச்சியையும், வெற்றியையும், விடுதலையையும் குறிக்கின்ற பலவிதமான விழாக்களை மனித இனம் கொண்டாடி வருகிறது.

ஆனால் தான் தோற்கடிக்கப்பட்ட, அடிமைப்படுத்தப்பட்ட, இழிவுபடுத்தப்பட்ட ஒரு நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுகின்ற ஒரு வெட்கம் கெட்ட இனமும் இந்த உலகத்தில் உண்டு. அது வேறு யாரும் அல்ல. கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன்னே வாளோடு தோன்றிய மூத்த குடி என்று தன்னை அறிமுகம் செய்கின்ற தமிழினம்தான் அது. பொங்கல் போன்ற விழாக்களுக்கு கொடுக்காத முன்னுரிமையை தீபாவளிக்கு கொடுத்து, தன்னுடைய அடிமை சாசனத்தை ஆண்டு தோறும் புதுப்பித்துக் கொண்டிருக்கிற தமிழினமாகிய நாங்கள்தான் அந்த பெருமைக்குரியவர்கள்.

இதோ! இந்த ஆண்டும் தீபாவளி வந்து விட்டது. தமிழர்கள் புத்தாடை அணிந்து கோயிலுக்கு போகிறார்கள். நேரிலும், தொலைபேசியிலும் “தீபாவளி வாழ்த்துக்கள்” சொல்லி மகிழ்கிறார்கள். தமிழர் கடைகளில் தீபாவளி சிறப்பு விற்பனை விளம்பரப்படுத்தப்படுகின்றன. தீபாவளி திரைப்படங்கள் அணி வகுக்கின்றன. தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகங்கள் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்குகிறன. புத்தக நிறுவனங்கள் தீபாவளி சிறப்பு மலர் வெளியிடுகின்றன. கொண்டாட்டம் களை கட்டுகிறது.

ஆனால் இந்த தீபாவளியின் பின்னணி வரலாறு எத்தனை பேருக்கு தெரியும்? எங்களின் மூதாதையர் அழிக்கப்பட்ட நாளை, தமிழினம் தோற்கடிக்கப்பட்ட நாளை நாம் கொண்டாடுகிறோம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

அதைப் பார்ப்பதற்கு முன் தீபாவளியை தமிழினத்திற்குள் திணித்த ஆரியப் பார்ப்பனர்கள் தீபாவளி குறித்து சொல்லுகின்ற கதையை சுருக்கமாகப் பார்ப்போம்.

முன்பொரு காலத்தில் ஒரு அரக்கன் இருந்தானாம். அவன் பூமியை பாயாக சுருட்டி கடலுக்குள் ஒளித்து வைத்துவிட்டானாம். படைப்புத் தொழிலை செய்வதற்கு பூமி இல்லையே என்று கவலைப்பட்ட பிரம்மா விஸ்ணுவிடம் முறையிட்டாராம். விஸ்ணு பன்றியாக மாறி அரக்கனோடு சண்டை போட்டு அவனை கொன்று பூமியை மீட்டாராம். பூமிக்கு தன்னை மீட்ட பன்றியின் மீதே காதல் வந்துவிட்டதாம். பன்றியும் சரியென்று சொல்ல இருவரும் உறவு கொண்டார்களாம். அதனால் ஒரு பிள்ளை பிறந்ததாம். அவன்தான் நரகாசுரன் என்ற அரக்கனாம். அவன் தவம் செய்து தன் தாயைத் தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றானாம். வரம் பெற்ற அரக்கன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினானாம். கடைசியில் விஸ்ணு கிருஸ்ணனாகவும் பூமாதேவி சத்தியபாமாவாகவும் அவதாரமெடுத்து நராகசுரனோடு போரிட்டார்களாம். கடைசியில் நரகாசுரன் பெற்ற வரத்தின்படி அவனுடைய தாயாகிய சத்தியபாமாவால் கொல்லப்பட்டானாம். அவன் கொல்லப்பட்ட நாள்தான் தீபாவளியாம்.

இப்படி ஒரு ஆபாசமான புராணக் கதையைக் அடிப்படையாகக் கொண்டு இந்த தீபாவளியை ஆரியப் பார்ப்பனியம் தமிழர்களுக்குள் திணித்தது. உருண்டையாக இருக்கின்ற பூமியை எப்படி பாயாக சுருட்டலாம் என்றோ, பூமியிலே இருக்கின்ற கடலுக்குள் எப்படி பூமியையே ஒளித்து வைக்கலாம் என்றோ, பூமியாலும் பன்றியாலும் உறவு கொள்ள முடியுமா என்றோ கேள்விகளை எழுப்ப முடியாதபடி தமிழினத்தை மடமைக்குள் தள்ளியது

ஆனால் தீபாவளி கொண்டாடப்படுவதன் பின்னணி வேறு. இங்கே நராகசுரன் என்று உருவகப்படுத்தப்படுபவன் யார்? புராணங்களில் அசுரர்கள் என்று சொல்லப்படுபவர்கள் யார்? இதற்கு பதில் தெரிந்தவர்கள் தீபாவளியை கொண்டாட மாட்டார்கள். தெரிந்த பின்பும் கொண்டாடினால் அவர்கள் சூடு சுரணை உள்ளவர்களாக இருக்க மாட்டார்கள்.

பாரத கண்டத்தின் வரலாறு என்பது ஆரிய திராவிடப் போரை அடிப்படையாகக் கொண்டது. திராவிடர்கள் எனப்படுகின்ற தமிழர்கள் ஆண்டு கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பை வந்தேறு குடிகளான ஆரியர்கள் மெது மெதுவாக ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். நில ஆக்கிரமிப்போடு, மொழி ஆக்கிரமிப்பும், பண்பாட்டு ஆக்கிரமிப்பும் நிகழந்தது. ஆரியர்களின் இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து தமிழர்கள் நீண்ட காலம் வீரப் போர் புரிந்தார்கள். இந்தப் போர்கள்தான் புராணக் கதைகளில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போர்களாக வர்ணிக்கப்படுகின்றன.

சுர பானம் அருந்துகின்ற ஆரியர்கள் சுரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். சுர பானம் அருந்தாத திராவிடர்கள் அசுரர்கள் என்று குறிப்பிடப்பட்டார்கள். அத்துடன் அசுரர்கள் தெற்கே வாழ்பவர்கள் என்றும் புராணக் கதைகளில் குறிப்பிடப்படுகிறார்கள். கிருஸ்ணனும் சரி அதற்கு முந்தையவனாக சொல்லப்படுகின்ற இராமனும் சரி, அசுரர்களை அழிப்பதற்கு தெற்கு நோக்கி படை எடுத்து வந்ததாகவே ஆரியர்களின் புராணங்கள் சொல்லுகின்றன. அசுரர்கள் கறுப்பாக இருப்பார்கள் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறார்கள். புராணக் கதைகளை ஆரய்ந்த பாரதத்தை சேர்ந்த நடுநிலையான ஆராய்ச்சியாளர்களும், மேல் நாட்டு ஆராய்ச்சியாளர்களும் அசுரர்கள் என்று திராவிடர்களையே குறிப்பிடப்படுகிறது என்று கூறி உள்ளார்கள்.

ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் நடந்த போரை கூறுகின்ற கதையே இராமயணம். அன்று தமிழ் மண்ணை ஆண்ட மன்னன் இராவணனாக உருவகப்படுத்தப்படுகிறான். ஆக்கிரமிப்பு போர் நடத்திய ஆரியர்களின் மன்னனாக இராமன் இருக்கின்றான். தமிழ் மண்ணின் பல பகுதிகளை கைப்பற்றி தமிழ் மன்னர்களை ராமன் வெற்றி கொள்கிறான். கடைசியில் தமிழர்களின் தலைநகரான இலங்கை வரை சென்று பல சூழ்ச்சிகள் செய்து இராவணனையும் கொல்கிறான். இதுதன் இராமயணக் கதை. இராவணனை பேரரசனாகக் கொண்டே அன்று தமிழர்களின் அனைத்து அரசுகளும் இருந்தன என்பதை இராமாயணத்தை ஆராய்கின்ற போது புரிந்து கொள்ள முடிகிறது.

இராவணனின் வீழ்ச்சிக்கு பிறகு சில காலம் கழித்து ஆரிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்த தமிழ் மன்னர்களில் ஒருவனே நரகாசுரன். நரகாசுரனும் மற்றைய பல மன்னர்களும் ஆரிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்து வீர மரணம் அடைந்தார்கள்.

கடைசியில் தமிழினத்தை வெற்றி கொண்ட ஆரியர்கள் தமிழர்களின் வரலாற்றை திரிவுபடுத்தினார்கள். இன்று விடுதலைப் போராளிகளை ஆக்கிரமிப்பாளர்கள் பயங்கரவாதிகள் என்று சொல்வது அன்று ஆரியர்கள் அன்று தமிழின விடுதலைக்காக போரடியவர்களை அரக்கர்கள் என்று சொன்னார்கள். முறிக்கிய மீசையோடு கம்பீரமாக நின்று தமிழ் மண்ணைக் காக்க இறுதிவரை போராடி தன்னுயிரை ஈந்தவர்களுக்கு கொம்புகளும் கோரமான பற்களும் முளைத்து விட்டன.

ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள்! சிங்களப் படைகள் யாழ் நகரைக் கைப்பற்றிய நாளை நாம் கொண்டாடுவோமா? நிச்சயமாகக் கொண்டாடுவோம், சிங்களம் தமிழினத்தை முழுமையாக வெற்றி கொண்டால். அப்பொழுது எங்களின் விடுதலைப் போரளிகளுக்கும் கொம்புகளும், கோரமான பற்களும் முளைக்கும். வெற்றி பெற்றவன் திணிப்பதே வரலாறு என்று ஆகின்றது. தோற்று போனவனின் வரலாறு அவனுடனேயே புதைகுழிக்குள் புதைக்கப்படுகிறது. எமது தமிழ் மன்னர்கள் அன்று தோற்றுப் போனார்கள். அதனால் அரக்கர்கள் ஆகி விட்டார்கள்.

இப்படி அரக்கன் ஆக்கப்பட்டு விட்ட ஒரு விடுதலைவீரனின் நினைவுநாளை நாம் மகிழ்ச்சியாகக் தீபாவளி என்று கொண்டாடுகிறோம். ஆரியர்கள் தமிழினத்தை வென்றது மாத்திரம் அன்றி, வென்ற நாளை தமிழர்களையோ கொண்டாட வைத்து விட்டார்கள். இதை உணர்ந்து தமிழினம் இந்த தீபாவளியை கொண்டாடுவதை நிறுத்த வேண்டும். இங்கே இன்னும் ஒன்றையும் குறிப்பிடுதல் பொருத்தமாக இருக்கும். இன்றைய நாகரீக உலகில் யாருடைய இறப்பும் கொண்டாடப்படுவதில்லை. எம்மை ஆயிரக்கணக்கில் கொன்றொழித்த எதிரிகள் கொல்லப்பட்ட நாளை நாங்கள் யாரும் கொண்டாடுவதில்லை. கோடிக்கணக்கில் மனிதர்களை கொன்ற கிட்லரின் இறப்பையும் யாரும் கொண்டாடுவதில்லை. இப்படி யாராக இருந்தாலும், ஒரு இறப்பு கொண்டாடப்படுவதில்லை. ஆனால் நாம் எமக்காக உயிரை ஈந்த ஒரு மன்னனின் நாளை தீபாவளி என்று மகிழ்ச்சியாக கொண்டாடுகிறோம். இந்த நிலை மாறும் நாளே உண்மையில் தமிழினம் விடுதலை அடைந்த நாளாக இருக்கும்.

நன்றி - கு.கண்ணன்