மாணவர்களே! இவ்வூர் திராவிடர் கழகத்தின் சார்பாக நான் பேச வேண்டுமென்று சில மாணவர்களால் விரும்பப்பட்டேன். அது பற்றி மகிழ்ச்சியோடு பேச உடன்பட்டேன். எனினும் என்ன பேசுவது என்பது பற்றி நான் இதுவரை கூட சிந்திக்கவில்லை. மாணவர்களாகிய உங்களைப் பார்த்தால் நீங்கள் பெரிதும் 15-வயது முதல் 18-வயது உடையவர்களாகவே காண்கிறீர்கள்; உங்களுக்குப் பயன்படத்தக்கதும், பொருத்தமானதுமாக பேசவேண்டுமென்றால் மிகவும் கவனத்தோடுதான் பேச வேண்டி இருக்கிறது. ஆனால், "படிக்கும் சிறு குழந்தைகளுக்குப் பாடப் படிப்பைத் தவிர வேறு பேச்சு என்னத்திற்கு?" என்ற காலம் மலையேறிவிட்டது. ஏனெனில் படிப்பே மோசமானதாக இருப்பதால் அப்படிப்பைத் திருத்துவதற்காகவாவது உங்களிடத்தில் உணர்ச்சி தோன்ற வேறு பேச்சு அவசியமாகிட்டது. படிப்பின் தன்மை முதலாவது உங்கள் படிப்புக்கு லட்சியமே இல்லை. லட்சியமற்ற படிப்பு என்பது ஒருபுறம் இருந்தாலும், என்ன படிப்பு படிப்பது என்பது பள்ளிக் கூடத்தாருக்கும் ஆசிரியர்களுக்கும் கூட சம்பந்தமற்றதாகும். இதனை இப்படிப்பினால் ஏற்படும் பயன் என்ன என்றாலோ அதுவும் தானாக ஏதாவது ஏற்பட்டால் அதுதான் பயனே ஒழிய மற்றபடி நிச்சயமான பயன் என்ன? என்ன ஏற்படும் என்று கருதுவதற்கில்லை. படிப்பது என்பது வெறும் பேச்சளவிற்கு "அறிவுக்காக, அறிவு விருத்திக்காக" என்று சொல்லப்படுகிறது. ஆனால், படித்தவர்களுக்கு அறிவு விருத்தியாகிறதா? படித்தவர்கள் அறிவாளிகளாக இருக்கிறார்களா? என்றால் ஆம் என்று சொல்ல முடிவதில்லை. இந்த அறிவு என்பதுகூட ஒரு பொது அருத்தத்திற்குக் கட்டுப்பட்டதாய் இல்லாமல் எதைப் படித்தானோ அதில் அறிவுள்ளவன் என்றுதான் சொல்லக்கூடியதாய் இருக்கிறது. அந்தக் குறிப்பிட்ட படிப்பில் அதாவது படித்த படிப்பின் அறிவாவது சரியாக இருக்கிறதா என்றால் அதுகூட சரியாக இல்லாமல் ஒன்றுக்கொன்று முரணாக அறிவு ஏற்படும்படியான இரண்டு கருத்துள்ள அதாவது முரண் கருத்துள்ள படிப்பேதான் கொடுக்கப்படுகின்றது. எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் மாணவர்களுக்கு அறிவுப் படிப்பும், மூடநம்பிக்கைப் படிப்பும் இரண்டும் தரப்படுகிறது. இதனால் மாணவர்கள் பகுத்தறிவும் அதற்கு மாறான மூடநம்பிக்கையும் இரண்டும் கொண்டவர்களுமாகி விடுகிறார்கள். மாணவர்கள் மாத்திரமல்லாமல் படிப்பை முடித்த பெரியவர்களும் உபாத்தியாயர்களும் கூட மூட நம்பிக்கையுடையவர்களாகவே இருக்க வேண்டியவர்களாயிருக்கிறார்கள். உதாரணமாக, சரித்திரம், பூகோளம், விஞ்ஞானம், ஞான சாஸ்திரம், உடற்கூறு, உலோக விஷயம் முதலியவைகளில் படித்துத் தேறியவர்களில் யாருக்காவது இது சம்பந்தமான மூடநம்பிக்கைக் கொள்கை இல்லாத சரியான அறிவு இருக்கிறது என்றுதான் சொல்ல முடியுமா? சரித்திரம் படித்தவன் இராமாயண, பாரதம் முதலிய புராணக் கதையும், சரித்திரத்தில் சேர்த்துப் படித்து இராமனும், பரதனும் இந்த நாட்டை ஆண்டார்கள் என்றும், அது இன்ன காலம் என்றும், இந்த நாட்டுக்கு பாரத தேசம் என்பது பெயர் என்றும் கருதிக் கொண்டு அனுபவத்தில் அதற்கேற்ற வண்ணம் நடந்து பாரத மாதாவை வணங்கிக் கொண்டு திரிகிறான். நிஜமாக நடந்த சரித்திர உண்மைகள், நிஜமான போர்கள், நபர்கள், அதன் காலங்கள் ஆகியவை சரித்திரம் படித்தவர்கள் என்பவர்களுக்குச் சரியாகத் தெரிவதில்லை. நடவாததும், நடந்ததாக நம்ப முடியாததும் அதற்கும் காலம் நிர்ணயிக்க முடியாததுமான அறிவுக்குப் பொருந்தாத காரியங்களுக்கு அதிக விவரம் தெரிகிறது. ஆனால் நடந்தவைகளுக்கு சரியான விவரம் தெரியவில்லை. சேர, சோழ, பாண்டியர், நாயக்கர் ஆகியவர்களும் அவர்களது வாரிசு, அண்ணன் தம்பிமார்களும் மனைவி மக்களும் ஆண்ட நாட்டெல்லைகளும், முறைகளும், முடிவுகளும், சரித்திரம் படித்த 100-க்கு 90-மாணவர்களுக்கு விவரம் சொல்லத் தெரியாது. தசரதனுக்கும், ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும், பாண்டவருக்கும், துரியோதனாதிகளுக்கும், இரணியனுக்கும், பலிச்சக்ரவர்த்திக்கும், மனு நீதி கண்ட சோழனுக்கும், அண்ணன் தம்பிமார்கள், மனைவி, மக்கள், அவர்கள் கணவர்கள் இவ்வளவு என்று 100-க்கு 90-மாணவர்களுக்குத் தெரியும். கோளம் படித்தவனுக்கு உலகப் பரப்பு, அதன் பிரிவுகள் சரியாக ஞாபகத்தில் இருக்காது. ஆனால், இல்லாததும் இருக்க முடியாததுமான மேல் ஏழுலோகம், கீழ் ஏழு லோகம், அதன் வர்ணனை பலன் தன்மை இருப்பதாக முழு ஞாபகமாகத் தெரியும். வான சாஸ்திரம் படித்தவனுக்கு சூரிய சந்திரனின் உண்மைத் தன்மை, கிரகணங்களின் உண்மைத் தன்மை, இயக்கம், அதன் சீதோஷ்ண நிலைமைக்குக் காரணம் ஆகியவை சரிவரத் தெரியாது. ஆனால் "சூரியனுக்கு 16-குதிரை," "சந்திரனுக்கு கலை வளரவும் தேயவும் சாபம்," "இவர்களது மனைவி மக்கள் அவர்களது விபசாரம்," "ராகு கேது விழுங்குதல், அதனால் கிரகணம்" அதற்குப் பரிகாரம் என்பது போன்ற கற்பனைக் கதைகள் யாவருக்கும் உண்மையென்ற எண்ணமும், அதை அனுசரித்த அனுபவமும், அதற்கு நடப்பும் தெரியும். விஞ்ஞானத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. உதாரணம் விஞ்ஞானப் படிப்பின் தன்மையும், பயனும் நன்றாய் விளங்கும். இப்படியாகப் படிப்புக்கும், அறிவுக்கும் பெரும்பாலும், உண்மைக்கும், நடப்புக்கும் சம்பந்தமில்லாத மாதிரியான படிப்புத்தான் இன்று பள்ளிப் படிப்பாகப் போய்விட்டது. இது தவிர இனி படிப்பினால் ஏதாவது ஒழுக்கம், நாட்டுப்பற்று, இனப்பற்று, சமரச ஞானம் முதலியவை ஏற்படுகிறதா? அல்லது படித்த மக்களிடம் இவை ஏதாவது இருந்து வருகிறதா? என்றால் அதுவும் சிறிதும் சரியானபடி இல்லாமல் வெறும் கற்பனைக் குணங்களும் பற்றுகளுந்தான் பெரிதும் காண்படுகின்றனவே தவிர உண்மையானதும் இருக்க வேண்டியவைகள் அருமையாகவே இருக்கின்றன. இதை விரிக்கில் மிக மிக நீளும்.ஆகவே இம்மாதிரி படிப்பைப் படிக்கின்ற பிள்ளைகள் எவ்வளவு சிறிய பிள்ளைகளானாலும் இவைகளைப் பற்றி சிந்தித்துக் பாருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுவதோடு கேடு எதுவும் ஏற்பட்டுவிடும் என்ற நான் கருதவில்லை.உங்களுக்கு உபாத்தியாயர்கள் இப்படிப்பட்ட படிப்பைக் கற்றுக் கொடுக்கும் போது இந்த மாதிரியான காரியங்களைப் பற்றி சிந்தித்து, நீங்கள் இது சரியா என்று கேட்பதன் மூலம் உங்கள் ஆசிரியர்களால் உண்மை அறிவிக்கப்படுவீர்கள். பரீட்சையில் பாசாவதற்கு நீங்கள் படித்ததையும், சொல்லிக் கொடுத்ததையும் எழுதினாலும் உங்கள் அறிவுக்கும் அனுபவத்திற்கும் எது உண்மை என்பதாக விளங்கக் கூடும். ஆதலால் முரண் வந்த இடங்களில் விளக்க விரும்புங்கள். கட்டுப்பாடாகவும் அதிகப்படியாகவும் மாணவர்கள் விளக்கம் தெரிந்த ஆசிரியர்கள் பெருகுவார்களேயானால் மக்களுக்குப் படிப்பதால் ஏற்படும் மடமையாவது காலப் போக்கில் குறையும் என்று கருதுகின்றேன். இதை ஏன் உங்களிடம் சொல்லுகிறேன் என்றால் இதுவரை கல்வி இலாகாக்காரர்கள் இந்தக் குறைபாட்டைப் பற்றி சரியானபடி சிந்தை செலுத்தவே இல்லை. படிப்பவர்களுக்கு இரட்டை மனப்பான்மை அதாவது சரியானதும், போலியும் கற்பனையுமானதுமான ஆகிய இரு முரண்பட்ட மனப்பான்மை உண்டாகும்படியாகவே கல்வியால் செய்யப்பட்டு வந்திருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுவதற்காகத்தான். * [´இளைஞர்களுக்குப் பெரியார் அறிவுரை´ என்னும் நூலில் இருந்து சில கருத்துக்கள். பக்கம்:9, ´குடிஅரசு´ 14.07.1945] |
எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைக்கபட்டுள்ள இழிவை இறக்கி வைப்பதற்காகத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளைப் பற்றியும் மதத்தைப் பற்றியும் கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே! ----பெரியார்
Monday, 17 October 2011
இளைஞர்களுக்குப் பெரியார் அறிவுரை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment